நன்கொடைகளை எளிதாக வழங்க உதவும் ஆப் உருவாக்கிய சமூகநல ஆர்வலர்!
மனன் கண்ணா உருவாக்கியுள்ள DEasyy ஆப் நன்கொடை வழங்குவோர் வீடுகளுக்கே சென்று சேகரித்து அவர்களுக்கு நம்பகமான, சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது.
மனன் கண்ணாவிற்கு 17 வயதாகிறது. ஏழை மக்களுக்கு உதவுவதில் கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் இவருக்கு வேறு எதிலும் கிடைப்பதில்லை. இந்த மனநிலை திடீரென்று வந்ததல்ல.
இளம் வயதிலிருந்தே இவர் ஏராளமான சமூக நலப் பணிகளில் பங்களித்து வருகிறார். ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகிப்பது அருகிலிருக்கும் பகுதிகளை சுத்தப்படுத்துவது என்று ஏராளமான நலத்திட்டங்களில் பங்களித்துள்ளார்.
இன்று மக்கள் நுகர்வோராக ஏராளமான பொருட்களை வாங்கிக் குவிப்பதைப் பார்க்கமுடிகிறது. இவற்றில் பெரும்பாலானவை தூக்கியெறியப்படுகின்றன. இப்படிக் கழிவுகளாகக் கொட்டப்படும் ஏராளமான பொருட்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருப்பதைக் கண்ட மனன் கண்ணன் அதிர்ச்சியடைந்தார்.
இது போன்று நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை ஏன் தூக்கியெறிகிறார்கள் என்று அவர் யோசித்தார். இதை ஏன் மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று யோசித்தபோதுதான் அவருக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. தேவையிருப்போரைத் தேடிச் சென்று கொடுக்க நேரம் இல்லாததே இவர்களின் முக்கிய பிரச்சனை என்பதைப் புரிந்துகொண்டார்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுக்க நினைத்தாலும் அதை எளிதாக செய்வதற்கு உதவும் தளம் எதுவும் செயல்படவில்லை என்பது தெரிந்த பின்னர் இவரது முயற்சி மேலும் தீவிரமானது.
”ஒரு பொருளை ஒருவர் உபயோகமற்றது என நினைக்கலாம். அதே பொருள் மற்றொருவருக்கு தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருளாகத் தோன்றும். இப்படிப்பட்ட பொருளை தங்கமாக கருதுவோரிடம் கொண்டு சேர்க்க விரும்பினேன். எனவே கம்ப்யூட்டர் என்ஜினியரிங், தொழில்நுட்பம் போன்றவற்றில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கொண்டு இதை செயல்படுத்த திட்டமிட்டேன்,” என்று மனன் தெரிவிக்கிறார்.
நன்கொடை வழங்கும் செயல்முறையை எளிதாக்க DEasyy என்கிற AI/ML மற்றும் வீடியோ சார்ந்த மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கினார்.
செயலி உருவாக்கம்
மனன் இதுபற்றி விரிவாக ஆய்வு செய்தார். நன்கொடை வழங்கும் செயல்முறையின் ஒட்டுமொத்த அமைப்பும் எப்படி இயங்குகிறது என்பது பற்றி IEEE Xplore தளத்தில் ஆய்வறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டார், DEasyy திட்டம் பற்றியும் இதில் இடம்பெற்றிருந்தது.
“இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த பிராஜெக்டை மேற்கொண்டு தொடரவேண்டும் என்று பலர் ஊக்கமளித்தார்கள். பெற்றோரின் உதவியும் கிடைத்தது. துறைசார் ஆலோசகர்களிடமும் நிபுணர்களிடமும் உதவி கேட்டேன். அவர்கள் என்னை சரியாக வழிநடத்தினார்கள். படிப்பு, தேர்வுகள் என மும்முரமாக இருந்ததால் என்னால் முழுநேரமாக செயல்படமுடியாது என்பதால் என் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு குழுவை உருவாக்கினேன்,” என்கிறார்.
டெல்லியில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் மாணவரான மனன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனது குழுவுடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் என்ஜிஓ-க்களுடன் இணைந்து அப்ளிகேஷனை சோதனை செய்த பிறகு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகார்ப்பூர்வமாக அறிமுகத்தினார்.
பன்னாட்டு நிறுவனத்திடமிருந்து நிதியுதவியும் பெற்றிருக்கிறார். ஆனால் அதுபற்றிய கூடுதல் தகவல்களை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை.
இதுவரை DEassy மூன்று என்ஜிஓ-க்களுடன் இணைந்திருக்கிறது. நன்கொடை சேகரிப்பதற்கான பாரம்பரிய வழிமுறைகளுக்குப் பழகிப் போனவர்களை புதிய முறையை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைப்பது கடினமாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
DEassy App தற்போது கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கிறது. நன்கொடையாளர்களும் என்ஜிஓ-க்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
எப்படி செயல்படுகிறது?
ஆடியோ/வீடியோ சார்ந்த DEasyy அப்ளிகேஷன் ஏழை மக்களுக்கு உதவி சென்று சேர கைகொடுப்பதுடன் நன்கொடையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தையும் வழங்குகிறது. நன்கொடையாளர்களின் வீடுகளுக்கே சென்று சேகரிக்கும் வசதியை வழங்கவேண்டும் என்பதே மனனின் விருப்பம்.
நன்கொடையாளர்களை என்ஜிஓ-க்களுடனும் சமூக நிறுவனங்களுடனும் இணைப்பதே இந்த செயலியின் முக்கிய நோக்கம்.
இதுதவிர அவசரகால உதவியை வழங்குவது இந்த செயலியின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. ஏழை மக்களுக்கு அவசரமான மருத்துவ உதவி, ரத்தம் போன்றவை தேவைப்பட்டால் DEasyy உதவுகிறது. இந்தத் தளத்தில் பதிவு செய்து இணைந்திருப்போர் அனைவருக்கும் இந்த அவசர உதவி பற்றிய தகவல் அனுப்பப்படும்.
இந்த அப்ளிகேஷனில் பல்வேறு பிரிவுகள் இருக்கும். நன்கொடை வழங்க விரும்புவோர் இதிலிருந்து தேர்வு செய்து நன்கொடை வழங்கலாம். ஒவ்வொன்றைப் பற்றிய விரிவான தகவலும் வீடியோ அல்லது இமேஜ் வடிவில் இடம்பெற்றிருக்கும். வீட்டிலிருந்து என்று, எப்போது வந்து சேகரித்துக்கொள்ளலாம் என்பதை நன்கொடையாளர் தேர்வு செய்துகொள்ளலாம்.
நிறுவனங்கள் மற்றும் லாப நோக்கமற்ற அமைப்புகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்து தங்களது தகவல்களை உறுதிபடுத்திக்கொள்ளலாம். நன்கொடையாக வழங்கப்படும் பொருட்கள் ஒருங்கிணைப்பாளர்களால் நன்கொடையாளர்களின் வீடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டு தேவைப்படுவோரிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பாளர்கள் டெலிவர் செய்யும்போது ஆப் மூலமாக புகைப்படங்களையோ வீடியோக்களையோ பதிவேற்றம் செய்துவிடுவார்கள். இந்த வெளிப்படைத்தன்மை நன்கொடையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
வருங்காலத் திட்டங்கள்
DEasyy ஆப் மூலமாக இதுவரை 422 நன்கொடைகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. குருகிராமின் குடிசைப்பகுதிகள், கிராமப்புறங்கள் என சுமார் 1,500 பேர் இந்த முயற்சியின் மூலம் பலனடைந்துள்ளார்கள்.
என்ஜிஓ-விற்கு உணவுப் பொருட்களே அதிகபட்சமாக நன்கொடை வழங்கப்பட்டதாக மனன் தெரிவிக்கிறார். இதுதவிர ஆடைகள், காலணிகள், ஃபர்னிச்சர், பொம்மைகள் போன்ற பொருட்களும் ஏழை மக்களைச் சென்றடைகின்றன. இக்குழுவினர் நன்கொடையாளர்களிடமிருந்து பணத்தை ஏற்பதில்லை.
லாப நோக்கமற்ற DEasyy முயற்சிக்கான நிதி தற்போது முதலீடு மூலமாகக் கிடைக்கிறது. வருங்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித் தரும் வகையில் வணிக மாதிரியாக மாற்றியமைக்க திட்டமிட்டிருக்கிறார். டெல்லி-என்சிஆர் பகுதியைத் தாண்டி மற்ற இடங்களிலும் விரிவாக்கம் செய்யவும் மேலும் பல என்ஜிஓ-க்களுடன் இணையவும் திட்டமிட்டிருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா
‘சமத்துவம் நிறைந்த உலகை உருவாக்குவதே என் கனவு’ – சமூக ஆர்வலர் சகாரிகா தேகா!