உத்ரகாண்டில் ‘ஒருநாள் சிஎம்’: முதல்வன் பட பாணியில் இளம் பெண்ணுக்கு வாய்ப்பு!
உத்ரகாண்டின் ஒரு நாள் முதல்வர் ஆன இளம் பெண்!
உத்தராகண்ட் மாநிலம் தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி, ஒரு நாள் (ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை) அந்த மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி கோஸ்வாமி. 19 வயதாகும், கல்லூரி மாணவியான சிருஷ்டி, ஜனவரி 24 உத்தரகாண்ட் மாநிலத்தின் 'ஒரு நாள் முதல்வராக' பதவியேற்று பணியாற்றினார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிருஷ்டிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வன் படத்தில் அர்ஜூன் ‘ஒருநாள் முதல்வராக’ நடித்திருப்பார். அரசின் திட்டங்களை ஆய்வு செய்து, பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதைப் பார்த்த நம்மில் பலரும், அட! நல்லாருக்கே! என்று பேசியிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு முயற்சியைத்தான் செயல்படுத்திக்காட்டிருக்கிறது உத்தரகாண்ட் அரசு. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
சிருஷ்டியின் தந்தை பிரவீன் ஒரு வியாபாரி. இவர் தெளலத்பூர் கிராமத்தில் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தாயார் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம்.பிஜி கல்லூரியில் விவசாயப் பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்கலை அறிவியல் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி.
கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து உத்தரகாண்ட் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வரும், குழந்தைகள் சட்டசபையில் (பால் விதான் சபா - Bal Vidhan Sabha) முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற, பெண்கள் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார் சிருஷ்டி கோஸ்வாமி.
இந்நிலையில் தான் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஒரு நாள் முதல்வராக பணியாற்ற சிருஷ்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உஷா நேகி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
“சிருஷ்டி முதல்வராக செயல்படுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் கெர்சாய்ன் சட்டசபைக் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது. சிருஷ்டியும் இது தொடர்பாக எங்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரின் திறனைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்," என்றார்.
இந்நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியில் இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருந்தார்.
மேலும் அவர், அடல் ஆயுஷ்மான் திட்டம் (Atal Ayushman Scheme), ஸ்மார்ட் சிட்டி திட்டம் (Smart City project), உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத் துறையின் ஹோம் ஸ்டே திட்டம் (Homestay Scheme) போன்ற பல்வேறு மாநில அரசின் திட்டங்களை ஆய்வு செய்யதார்.
சிருஷ்டி உத்தரகன்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து முதல்வராக செயல்பட்டு வருகிறார். இந்த குழந்தைகள் சட்ட சபையை மாநிலக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நடத்தி வருகிறது.