ட்ரோன் வடிவமைப்பின் ‘துரோணாச்சாரியா’
பஸ் நிலையத்தில் உறக்கம், பல மைல்கள் நடந்து படிப்பு, ஒரு வேளை உணவே அரிது, இப்படி சிரமப்பட்ட ஒரு சிறுவன் கர்நாடகாவில் இருந்து ஜப்பான் சென்று சாதித்த கதை இது.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கர்நாடகாவின் மாண்டியாவில் பிறந்த பிரதாப்பின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. 18 வயதான அந்த இளைஞர் குறைந்த செலவில், பேரிடர் நிகழ்ந்த இடங்களின் புகைப்படங்களை எடுக்கவும், அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் நோக்கத்தில், மின்னணுக் கழிவுகளில் இருந்து ஒரு ட்ரொனை வடிவமைத்துள்ளார். அதன் மூலம் சர்வதேச இயந்திர கண்காட்சியில் வெற்றியும் பெற்றுள்ளார்.
பேருந்து நிலையத்தில் அன்று தூங்கிய சிறுவன், இன்று இந்தியாவின் ட்ரோன் விஞ்ஞானியாகியுள்ளார். இப்பொழுது வரையிலும் பல்வேறு பணிகளுக்கான 600 ட்ரோன்களை உருவாக்கியுள்ளார்.
அதன் பிறகு பிரதாப்பிற்கு பல விருதுகளும் பாராட்டுகளும், சர்வதேச பல்கலைகழகங்களில் இருந்து அழைப்பும், அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பும் தொடர்ந்துள்ளது. இது அவரின் கதையாகும்.
ட்ரோன்கள் தந்த விடுதலை :
நிதி நெருக்கடி கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பிரதாப். தந்தைக்கு உதவும் எண்ணத்தில் சிறுவயதிலேயே நிலத்தில் இறங்கி விவசாய பணிகள் செய்ய துவங்கிவிட்டார். சுட்டெரிக்கும் சூரியனும், கடின உடல் உழைப்பும் அவரை வாட்டி எடுத்தாலும், வானில் பறக்கும் கழுகு போல உயரவேண்டும் என்ற எண்ணம் அவரை மேலும் ஊக்குவித்தது.
இவை அனைத்தும் தொலைக்காட்சி பெட்டியில் ஒரு ட்ரோன் அவர் கண்ணில் படும் வரைதான்.
"ட்ரான்கள் எனக்கு கழுகினை நினைவூட்டியது. நானே எனக்கான ஒரு ட்ரொனை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்பொழுது நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இணைய வசதியோ, ஸ்மார்ட் போனோ என்னிடம் இல்லை. எனவே எனது பெற்றோருக்குத் தெரியாமல், எனது ஊரில் இருந்த ஒரு சைபர் கஃபேவில் சுத்தம் செய்யும் வேலையில் சேர்ந்தேன். அதற்கு சம்பளமாக 45 நிமிடம் நான் இணையத்தில் உலவ அந்த கடை முதலாளி அனுமதிப்பார். அது தான் எனது விடுதலையின் துவக்கம்," என்கிறார் பிரதாப்.
ட்ரொனின் அடிப்படை என்ன என்பதை அவர் அறிந்துகொண்டாலும், அதன் பாகங்களை சரியாக பொருத்துவது சவாலாக இருந்துள்ளது.
"வயர்கள், மோட்டார், மதர்போர்டு போன்ற பாகங்களை வாங்க என்னிடம் பணம் இல்லை. எனவே மின்னணு கழிவுகள் பக்கம் எனது கவனம் சென்றது. மின்னணு சாதனங்கள் விற்கும் கடைககுச் சென்று அங்குள்ள கழிவுகளை குறைவான பணத்தில் வாங்கி வருவேன்," என்கிறார் பிரதாப்.
தேவையானப் பொருட்கள் மற்றும் அறிவை பெற்ற பொழுது, மைசூரில் ஜெஎஸ்எஸ் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அங்கு செலவுகளுக்காக அவரது தந்தை ரூபாய் 8000 கொடுத்துள்ளார். அதனை கல்லூரி கட்டணமாக செலுத்திவிட்டு, தங்கும் இடம் மற்றும் உணவுச் செலவு தேவைக்கு மற்றவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்கத் துவங்கியுள்ளார்.
இவை அனைத்திற்கு இடையிலும் ட்ரோன் பணிகளை அவர் விடவில்லை. கிடைக்கும் சம்பளம் அனைத்தையும் ட்ரோன் பாகங்கள் வாங்கவே செலவிட்டுள்ளார். ஒரு சமயத்தில் வாடகைக் கொடுக்காததால் வீட்டை காலி செய்யும் நிலைமையும் வந்துள்ளது.
"எனது கனவை கைவிடுவதை விட பேருந்து நிலையத்தில் தூங்குவது ஒன்றும் கடினம் இல்லை," என்கிறார் அவர்.
16 வயதில் தனது ட்ரொனை அவர் செய்திருந்தாலும், 50 முயற்சிகளுக்குக்குப் பிறகே அது பறக்கத் துவங்கியது. அது பரந்த பொழுது நிலத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்தில் அது பறந்தது.
அந்த நேரத்தில் ஏரோடைனமிக்ஸ் மற்றும் பொறியியல் எனக்கு புரியவில்லை. எனக்கு வழி காட்டவும் யாரும் இல்லை. எனக்கான வழிகள் அடையும் பொழுது எனக்குத் தெரிந்த அளவு அறிவை பயன்படுத்தி, சில மாற்றங்கள் செய்தேன். பிலைட் கண்ட்ரோலரை முன்பக்கத்தில் வைத்தேன், புவி ஈர்ப்பு சமமாக, அனைத்து பாகங்கள் மீதும் இயங்கும் வண்ணம் அமைத்தேன்," என விளக்குகிறார் அவர்.
கல்லூரி ஆசிரியர்கள் உதவியுடன் பல தேசியப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார் பிரதாப். அதன் மூலம் ஜப்பான் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.
"ஒரு மாணவனாக பிரதாப் எப்பொழுதும் துரு துறுவென இருப்பான். கிடைக்கும் நேரத்தை அவனது ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவான். என்ன யோசனைகள் கூறினாலும் அதன் சாதக பாதகங்களை அலசி அதனை ஏற்பதில் தெளிவாக இருப்பான். புதிய விஷயங்களை கற்க வேண்டும் என்ற எண்ணமே அவனை இந்த உயரத்தில் நிறுத்தியுள்ளது," என்கிறார் பிரதாப் கல்லூரியில் அவரது துறையின் தலைவர் நவ்யாஸ்ரீ.
இறுதியாக ஜப்பான் செல்லும் வாய்ப்பு வந்தபொழுதும் ஒரு முட்டுக்கட்டை விழுந்தது. ஜப்பான் செல்லும் செலவுதான் அது. இந்நிலையில் தனது நகைகளை விற்று அந்த செலவை ஏற்க அவரது அம்மா முன்வந்தார். பிரதாப்பின் கல்லூரியில் இருந்தும் அவருக்கு உதவி கிடைத்தது.
ஜேஎஸ்எஸ் கல்லூரி முதல்வர் மஹாதேவப்பா கூறியது,
"எங்கள் கல்லூரி ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து கொஞ்சம் பணம் போட்டு, விமானச் செலவு மற்றும் கண்காட்சி செலவு ஆகியவற்றை சரிசெய்தனர்."
அனைவரின் ஆசிகளோடு தனது கனவுகளையும் சுமந்து பிரதாப் ஜப்பான் பறந்தார்.
விதியை மாற்றிய ஜப்பான் :
300 கிலோ எடை கொண்ட ட்ரோன் பாகங்கள், 2 செட் துணி என ஜப்பான் சென்று இறங்கிய பிரதாப்பிற்கு ஓர் எண்ணம் மட்டுமே இருந்தது. டோக்கியோ பிக் சைட் இன்க் செல்லவேண்டும். அங்கு நடக்கும் இயந்திரக் கண்காட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதே அது. விமான நிலையத்தில் இருந்து 25 நிமிட தொலைவில் அந்த இடம் இருந்துள்ளது.
"அந்த விமான நிலையத்தின் பிரமாண்டமா அல்லது அந்த நாட்டின் குளிரா எனத் தெரியவில்லை. ஆனால் இறங்கியவுடன் சில நிமிடம் நான் உறைந்துவிட்டேன்," என்கிறார் பிரதாப்.
இயல்பு நிலை வந்தவுடன் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அங்கிருக்கும் பணியாளர்களிடம் பேசி தன்னிடம் உள்ள 1500 ரூபாய் கொண்டு ரயிலில் செல்ல முடிவு செய்தார். மேலும் அவரிடம் இருந்த 300 கிலோ பாகங்களை கண்காட்சி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல அவருக்கு நான்கு முறை ஆனது.
அங்கு சென்றதும் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. 120 நாடுகளில் இருந்து மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களோடு வந்திருந்தனர். அதை விட அவர்கள் பேசிய நுனிநாக்கு ஆங்கிலம் பிரதாப்புக்கு கொஞ்சம் பயத்தை கொடுத்துள்ளது.
ஆனால் அவை எதுவும் இவரின் நம்பிக்கையை குறைக்கவில்லை. காரியத்தில் கண்ணாக இருந்தார். தனது அன்னையின் முகத்தை மனதில் வைத்திருந்தார். அடுத்த நாள் 7 சுற்றுகளாக தனது படைப்பை அவர் காட்சிப் படுத்தினார். தேவையான அறிவு மற்றும் நம்பிக்கை உள்ளது ஆனால் அதை வெளிப்படுத்தும் மொழி தான் என்னிடம் இல்லை என பிரதாப் நினைத்துள்ளார்.
வெறும் 20 அணிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. அதில் பிரதாப்பின் பெயர் இல்லை. அனைத்தும் முடிந்துவிட்டது என பிரதாப் நினைக்கும் பொழுது அவரது பெயர் அங்கு ஒலிபெருக்கியில் ஒலித்துள்ளது.
"எனக்குக் கேட்டது வெறும் இரண்டு வார்த்தைகள் தான், எனது பெயர் மற்றும் தங்கப் பதக்கம். என்னைச் சுற்றி அனைத்தும் ஸதம்பித்து விட்டது. இன்றும் எப்படி அந்த மேடை வரை நான் நடந்து சென்றேன் என எனக்கு நினைவில்லை," என அந்தத் தருணத்தை வருணிக்கிறார் பிரதாப்.
ஒரு காலத்தில் இவரின் இலட்சியத்தை அலட்சியம் செய்த அனைவரும் இன்று அவரை கைதட்டி வரவேற்றனர்.
"அனைவரும் என்னால் முடியாது எனக் கூறிய பொழுது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் புகைப்படத்தை நான் வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு முறை அதை பார்க்கும் பொழுதும் எனக்கான உத்வேகம் எனக்குக் கிடைத்தது," என்கிறார் பிரதாப்.
அடுத்தாக 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த சர்வதேச ட்ரோன் கண்காட்சியில் தங்கம் வென்றார். மேலும் 2 வருடங்களில் 87 நாடுகளுக்கு ட்ரோன் பற்றி வகுப்பு நடத்தவும், கற்கவும் சென்று வந்துள்ளார்.
சென்ற வருடம் கர்நாடகாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த ஆயிரக்கணக்கான மக்களை மீட்க இவரது ட்ரோன் மூலம் அவர்கள் நிலை அறியப்பட்டது. பல்வேறு பகுதிகளுக்கு ட்ரோன் சென்று புகைப்படங்கள் கொடுக்க, அதன் மூலம் போலீசார் மீட்புப் பணி நிகழ்த்தியுள்ளனர்.
பல நாடுகள் சென்று வந்தாலும், பல பரிசுகள் பெற்றுவந்தாலும், நமது நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாக உள்ளது.
தனக்கு பரிசாகக் கிடைத்த பணம் அனைத்தையும் பெங்களூருவில் ஒரு ஏரோஸ்பேஸ் ஆய்வுக்கூடம் அமைக்க பயன்படுத்தியுள்ளார் பிரதாப். அங்கு தனது ட்ரோன்களை மேலும் மாற்றி அமைப்பது குறித்து ஆய்வுகள் செய்து வருகிறார்.
"எதனை இன்னல்கள் வந்தாலும் என் மீது நான் கொண்ட நம்பிக்கையை நான் இழக்கவில்லை. அதன் மூலம் தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன். நீங்களும் உங்கள் கனவுகளை துரத்துவதை நிறுத்தாதீர்கள்," என்கிறார் பிரதாப்.
தமிழில் : கெளதம் தவமணி | தகவல் உதவி தி பெட்டர் இந்தியா