23 வயதில் இந்திய பணக்காரர் பட்டியலில் இடம்: யார் இந்த ஷஷ்வத் நக்ரனி?
ஷஷ்வத், இந்தியாவின் பணக்கார பட்டியலில் எப்படி இடம் பிடித்தார்?!
சமீபத்தில் ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர் 23 வயதே ஆகும் ஷஷ்வத் நக்ரனி (Shashvat Nakrani). ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இளம்வயது நபர் இவர் மட்டுமே. குறிப்பாக 1990களுக்கு பிறகு பிறந்து பட்டியலில் இடம்பிடித்த 13 நபர்களில் இவரும் ஒருவர்.
ஷஷ்வத் நக்ரனி, புகழ்பெற்ற பணம் செலுத்தும் சேவை நிறுவனமான ’பாரத் பே’ ’Bharat Pe' நிறுவனத்தை நிறுவிய இவர்களில் ஒருவர். ஷஷ்வத் நக்ரனி, ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ஆஷ்னீர் குரோவர் (Ashneer Grover) என்பவர் உடன் இணைந்து 'பாரத் பே' நிறுவனத்தை தொடங்கினார்.
இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும்போது இந்த பேமன்ட் சேவை குறித்த ஐடியா வர அதைப்பற்றி விவாதித்துத் தொடங்கியுள்ளனர். இவர்கள் பாரத் பே-வை தொடங்கும்போது மற்ற பேமெண்ட் சேவை நிறுவனங்களான பேடிஎம் மற்றும் போன்பே இந்தியாவில் முன்னணி நிறுவனங்களாக இருந்தன. என்றாலும், தங்களின் தனித்துவமான சேவையால் வாடிக்கையாளர்களிடம் கவனம்பெற்றனர்.
குறிப்பாக மற்ற பேமெண்ட் சேவை நிறுவனங்களால் சிறு நிறுவனங்கள் அல்லது கடைக்காரர்களிடம் வசூலிக்கும் சேவைக்கட்டணத்தை பாரத் பே வசூலிக்காதது இவர்களின் ப்ளஸ்.
இது மற்ற நிறுவங்களில் இருந்து தனித்து இவர்களைக் காட்டியது. ரீடெயில் நிறுவனங்களுக்கு கடன் வசதி வழங்குவது போன்ற வசதிகளையும் பாரத் பே வழங்கி வருகிறது. இது போன்ற சேவைகளால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையையும் அதிகரித்து கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த பாரத் பே நிறுவனம் கடந்த பிப்ரவரிக்கு பிறகு அசுர வளர்ச்சி கண்டது.
ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்டு யுனிகார்ன் நிலையை அடைந்தது பாரத் பே. இதற்கு முன்பு 90 கோடி டாலர் என்னும் அளவில் இருந்த ’பாரத் பே’வின் சந்தை மதிப்பு, பிப்ரவரிக்கு பிறகு 285 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்தது.
இந்த அசுர வளர்ச்சி ஷஷ்வத் நக்ரனி சொத்து மதிப்பிலும் அதிகரிக்கவே, தற்போது ஹுருன் இந்தியாவின் பணக்காரப் பட்டியலில் இணைந்துள்ளார். இதனிடையே, இந்த ஆண்டு, இந்தியாவில் மேலும், 179 பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளனர்.
தற்போது 1000க்கும் மேற்பட்ட இந்திய தனிநபர்கள் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். 1,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் தரவரிசை அதிகமாகியுள்ளது என ஹுருன் இந்தியா பணக்காரர்களின் பட்டியலில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 10 நகரங்களைச் சேர்ந்த 100 நபர்கள் மட்டுமே இந்த தரவரிசையில் இடம்பிடித்திருந்த நிலையில் தற்போது இது 76 நகரங்களில் இருந்து 1,007 நபராக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள பெண்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 47 ஆக உள்ளது, இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த ஐந்து என்ற அளவிலேயே இருந்தன.
10 வருடங்களுக்கு முன்பு இளம் வயது பணக்காரர்கள் பிரிவில் இடம்பிடித்திருந்தவரின் வயது. ஆனால் தற்போது இடம்பெற்றுள்ள ஷஷ்வத் நக்ரனியின் வயது 23 வயது மட்டுமே.