யுவர்ஸ்டோரி தமிழ்: 4 ஆண்டுகள் முடிந்து 5ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்!
யுவர்ஸ்டோரி தமிழ் தொடங்கி 5000 கதைகள் வெளியிட்டு, இன்று மாதம் 1 மில்லியன் வாசகர்களைக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இந்த ஆதரவை தந்த உங்கள் எல்லாருக்கும் எங்களின் நன்றி.
எல்லாருக்கும் என்னுடைய வணக்கங்கள்...!
இன்று எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். ஆம் இதே தினத்தன்று தான் யுவர்ஸ்டோரி தமிழ் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி ஆன்லைன் பதிப்பில் காலடி வைத்தது. யுவர்ஸ்டோரி என்ற பிரபலமான ஆங்கில ஆன்லைன் தளம் தனது பிராந்திய மொழி பதிப்பை செப்டம்பர் 5ம் தேதி 2015ல் சுமார் 12 மொழிகளில் தொடங்கியது. அதில் ’யுவர்ஸ்டோரி தமிழ்’ மிக முக்கியமான ஒன்றாகும்.
நாங்கள் தொடங்கிய போது இத்தளம் இத்தனை பெரிய வளர்ச்சியை எட்டும் என்று நினைக்கவில்லை. ஏனெனில் அப்போது பல பிரபல பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகளின் ஆன்லைன் பதிப்பும் எங்களுக்கு போட்டியாளர்களாக இருந்தனர். ஆனால் இவற்றைத் தாண்டி நாங்கள் இந்த இடத்தை எட்டி இருப்பது வாசகர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியமானது என்று சொல்லிக்கொள்வதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை.
’யுவர்ஸ்டோரி தமிழ்’ அதிலென்ன சிறப்பு? இதில் புதிதாக என்ன இருக்கிறது? எல்லா ஆன்லைன் தளங்களும் இதைத்தானே செய்கிறார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்தது.
எங்களின் தாய் நிறுவனமான Yourstory Media Ltd பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இத்தளத்தின் சிறப்பே- நேர்மறையானக் கதைகள், உலக வெளிச்சத்திற்கு வராத மனிதர்களின் வாழ்க்கை, இளம் தொழில் முனைவோர்களின் ஊக்கமிகு பயணம், சமூக செயற்பாட்டாளர்களின் அளப்பறியும் பணிகள் ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமே.
பொதுவாக ஊடகங்கள் வெளியிடும் அரசியல் செய்திகள், சினிமா, விளையாட்டு, உச்சியில் உள்ளோர்களைப் பற்றி மட்டும் எழுதி வந்த சமயத்தில் சாமானியனின் கதைகளை, அவர்கள் செய்துள்ள சிறிய சாதனையையும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் எண்ணத்துடனும், தொழிலில் வெற்றி மட்டும் பேசு பொருளல்ல, அவர்களின் தோல்வியும் வெளிவந்து பலருக்கு பாடமாய் அமையவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மட்டும் நடத்தப்படும் யுவர்ஸ்டோரியின் அதே கருத்தாக்கத்தை நாம் தமிழிலும் பரிச்சார்த்த முறையில் தொடங்கினோம்.
தமிழகத்தை பொறுத்தவரை அரசியல், சினிமாவை தாண்டி மக்களை செய்திகள் படிக்கவைப்பது சவாலான ஒன்றே. ஆனால் நாங்கள் தொடங்கிய தினம் முதல் தமிழக மூலை முடுக்கில் உள்ள சிறிய, அரியப்படாத சாதனையாளர்கள், தமிழகத்தில் இருந்து உலகளவில் கோலோச்சியவர்கள் வரை அவர்களின் கதைகளை முதன்முதலில் கட்டுரைகளாக வெளியிட்டோம். இதுவே எங்களை மக்கள் திரும்பிப் பார்க்கவைத்தது.
யுவர்ஸ்டோரி தமிழ் ஒரு வாசகருடன் தொடங்கி இன்று மாதம் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் வாசகர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதே எங்களின் வெற்றியைக் குறிக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் 5ஆயிரம் கதைகளை வெளியிட்டுள்ளோம். இந்த வெற்றி நிச்சயம் உங்களையே சாறும். ஒவ்வொரு முறை நாங்கள் வெளியிடும் கதையை படித்துவிட்டு பலர் அனுப்பும் கருத்துக்களும், அதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுமே எங்களின் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். தொடர்ந்து இந்த ஆதரவை தந்த உங்கள் எல்லாருக்கும் எங்களின் நன்றி. இது மேலும் தொடரட்டும்.
சிறுதொழில் புரிவோருக்கு ஊன்றுகோலாய் இருக்கவேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். அதே போல தங்களின் முயற்சியால் கண்டுபிடிப்புகளை செய்துள்ளவர்கள், சமூகத்துக்கு தங்களால் முடிந்த உதவிகளை, பணிகளைச் செய்வோரையும் நாங்கள் போற்றிப்பாடி வருகிறோம்.
யுவர்ஸ்டோரி தமிழ் தொடங்கி நான் சந்தித்த சில குறிப்பிட்ட மனிதர்களின் கதைகள் என் வாழ்க்கையையே மாற்றி அமைத்ததாக அமைந்துள்ளது. அவர்கள் சொல்லும் வாழ்க்கைக் கதை நம்மில் பலர் நினைத்துக்கூடப் பார்த்திராத சவால்கள்.
உதாரணத்துக்கு, தைரோகேர் நிறுவனர் டாக்டர்.வேலுமணி அவர்களை சந்தித்து அவரின் கதையை எழுதினேன். அது ஒரு மறக்கமுடியாத சந்திப்பு. அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் நம் மனதில் ஆணியாக பதியும். அப்படியான பின்புலத்தில் இருந்து வந்து மிக உயரிய இடத்தை இன்று எட்டிய தமிழர் என்பதில் நாம் எல்லாரும் பெருமிதம் கொள்ளவேண்டும்.
அடுத்த என்னால் மறக்கமுடியாத நபராக இருப்பவர் தோசா பிளாசா ப்ரேம் கணபதி. அவரை தொலைப்பேசியில் தான் பிடிக்கமுடியும் ஏனென்றால் நாடுவிட்டு நாடு பறந்து கொண்டே இருப்பார். அப்படி துபாயில் இருந்து எனக்கு 2 மணி நேரம் அளித்த பேட்டி இனிமையான நிகழ்வு. ஆனால் அவருடைய எளிமை என்னை திகைக்கவைத்தது. ஏணியின் உச்சத்தை எட்டினாலும், தன்னடக்கம் ஒரு மனிதனின் வெற்றியை நிர்ணயிக்கும் என்று அன்று புரிந்து கொண்டேன்.
நம்ம சென்னைத் தெருக்களில் தள்ளுவண்டியில் சமோசா விற்ற ஒருவர் இன்று ஏரோப்ளேன் பயணிகளுக்கு ஸ்னாக்ஸ் அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையை நிறுவி இருக்கிறார். அவரின் முழுக்கதையை கேட்கவே நாட்கள் வேண்டும். அவரின் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு தருணமும் ஒரு அத்தியாயமாக இருந்தது.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவர்களின் கதை மட்டுமல்ல இன்னும் எத்தனை எத்தனையோ கதைகள் சொல்லப்படாமல் ஒளிந்திருக்கிறது. அதை வெளியில் எடுத்து வருவதே யுவர்ஸ்டோரியின் நோக்கம். வெற்றியோ, தோல்வியோ ஒருவர் எடுக்கும் முயற்சி, தன்னம்பிக்கையே இங்கே மிகமுக்கியம்.
‘வேலையில்லாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு நான் போனேன், ஆனால் யுவர்ஸ்டோரியின் கதைகளை படித்துவிட்டு, என் சொந்த ஊரில் ஒரு பெட்டிக்கடைப் போட்டு இன்று ஒரு மரியாதையான வாழ்க்கை வாழ்கிறேன்,” என்று ஒரு இளைஞர் எனக்கு அனுப்பிய கடிதம் என்னை நெகிழவைத்திருக்கிறது.
நாங்கள் செய்யும் இந்த செயலால் இத்தனை உள்ளங்கள் ஊக்கமடைகின்றன, தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்க வழிசெய்கிறது என்றால் எங்களின் பொறுப்பு இன்னும் கூடியுள்ளது என்றே சொல்வேன்.
5ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் யுவர்ஸ்டோரி தமிழுக்கு நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று தீர்கமாக நம்புகிறேன். வெறும் ஆன்லைன் சைட்டில் மட்டும் இல்லாமல் நாங்கள் தற்போது எல்லா சமூக ஊடக தளத்திலும் எங்கள் கதைகளை பகிர்கிறோம்.
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், டெய்லிஹன்ட், ஹலோ ஆப், ஜியோ எக்ஸ்பிரஸ் என்று பல தளங்களில் எங்களை நீங்கள் அனுகமுடியும். வாரம் ஒரு முறை எங்களின் சிறந்த கட்டுரைகள் உங்கள் மெயிலுக்கு வரும் விதத்தில் ‘நியூஸ்லெட்டர்’ வழியே அனுப்புகிறோம். அதையும் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
இவற்றைத் தாண்டி நீங்கள் எங்களுக்குச் சொல்ல நினைக்கும் கருத்துக்கள், கதைகள், மேலும் எங்களிடம் நீங்கள் எதிர்ப்பார்ப்பவை குறித்து [email protected] என்ற மெயில் ஐடி-க்கு அனுப்பிடுங்கள்.
இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி
இந்துஜா ரகுனாதன்,
ஆசிரியர், யுவர்ஸ்டோரி தமிழ்
(யுவர்ஸ்டோரி தமிழ் தளத்துக்கு உங்களின் வாழ்த்துக்களை, நீங்கள் எங்களிடம் மேலும் என்ன எதிர்ப்பார்க்கிறீர்கள், உங்களின் கருத்துக்களை ஒரு செல்ஃபி வீடியோ எடுத்து 6364300222 என்ற எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் கருத்துக்களை கமென்ட்களாகவும் இதே எண்ணிற்கு அனுப்பலாம். உங்களின் பெயர், ஊர் விவரம் மற்றும் உங்கள் தொழில் விவரம் பற்றி மறக்காமல் குறிப்பிட்டு வீடியோவை அனுப்புங்கள்! )