‘இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும்’ - திருப்பூரில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல்!
இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் அரசு வேலைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, அவற்றைத் தேடிக் கொண்டிருக்காமல், திருப்பூரில் உள்ள தொழில் துறையினரைப் போன்று தொழில் முனைவோராக மாற வேண்டும், என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு (FIEO) மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (AEPC) சார்பில் மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாராட்டு விழா மற்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்வு திருப்பூரில் நடைபெற்றது.
இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறையினர் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடினர். கடந்த இரண்டு நாட்களாக மத்திய அமைச்சர் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.
பின்னர், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது,
“நாட்டில் ஜவுளித் துறையில் மிகவும் வெற்றிகரமான ஒரு தொழில் மையமாக திருப்பூர் விளங்கி வருகிறது. திருப்பூரைப் பொறுத்தவரை தற்போது ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறுகிறது. 6 லட்சம் பேர் நேரடியாகவும், 4 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி முதல், அனைத்து சலுகைகளும் தொழில் துறையினரால் பெற்றுத் தரப்படுகிறது,” என்றார்.
திருப்பூரின் தொழில் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கடந்த 1985-ம் ஆண்டில் திருப்பூரின் ஏற்றுமதி மதிப்பு ரூ.15 கோடியாக மட்டுமே இருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் கணக்கிடப்பட்ட அவர்களது ஏற்றுமதி அளவு ரூ.30 ஆயிரம் கோடி ஆகும்.
கடந்த 37 ஆண்டுகளில் 2 ஆயிரம் மடங்கு அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர். கூட்டு முயற்சி மூலமாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் 23 சதவீத சராசரி வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். உலகில் வேறு எந்த தொழில் நகரமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றது கிடையாது, என்றார்.
இருப்பினும், திருப்பூர் தொழில் துறையினர் சார்பில் இங்குள்ள தொழிலாளர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பேசிய கோயல்,
நாட்டில் திருப்பூரைப் போன்று 75 இடங்களில் ஜவுளி மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார்.
”இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் அரசு வேலைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, அவற்றைத் தேடிக் கொண்டிருக்காமல், திருப்பூரில் உள்ள தொழில் துறையினரைப் போன்று தொழில் முனைவோராக மாற வேண்டும். வாய்ப்புகள் அனைத்து துறைகளிலும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களது திறமைகளை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்,” என்றார்.