குழந்தைப் பருவத்தில் பலூன்கள் மீதிருந்த காதலை இன்று தன் தொழிலாக்கிக் கொண்ட சென்னை இளைஞர்!
உயரப்பறக்கும் பலூன்கள் மீதிருந்த ஈடுபாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் பலூன் திருவிழா நடத்தி பலரை மகிழ்விக்கிறார் பெனெடிக்ட் சேவியோ.
கடந்த மாதம் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் ஒன்று திரண்டனர். இங்கு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற ’இளையராஜா 75’ என்கிற இசை நிகழ்ச்சி குறித்த அறிமுக விழா நடைபெற்றது. இதில் தரையிலிருந்து 50 அடி உயரத்தில் 2.0 திரைப்படத்தில் வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உருவத்துடன்கூடிய பிரம்மாண்டமான பலூன் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
பல்வேறு சிறந்த தொழில்நுட்ப முயற்சிகள், ஸ்டார்ட் அப்கள், டிஜிட்டல் மார்கெட்டிங் போன்றவற்றிற்கு சென்னை பெயர் போனது. இங்கு அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக பலூன் திருவிழா பார்க்கப்படுகிறது. பலூன் காற்றில் பறந்தபோது மக்கள் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர். இங்கு கூடியிருந்த பார்வையாளர்களில் இருந்த இளைஞர் ஒருவர் தனது கனவு நனவாகிக்கொண்டிருப்பதை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த இளைஞரின் பெயர் பெனெடிக்ட் சேவியோ. இந்தியாவில் ஹாட் ஏர் பலூன் பகுதியில் முன்னோடியாகத் திகழும் இவர் தமிழகத்தில் பலூன் திருவிழா துவங்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
”என்னுடைய பள்ளி நாட்களில் மாறுபட்ட விதத்தில் புதுமையாக செயல்பட விரும்பினேன். எனக்கு விண்ணில் பறப்பது, பறக்கும் இயந்திரம், விமானப் போக்குவரத்து போன்றவற்றில் ஆர்வம் அதிகம்,” என்று நினைவுகூர்ந்தார்.
இவர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த பிறகு சென்னையில் உள்ள சில நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினார். அந்த சமயத்தில்தான் சிறுவயதில் இருந்த ஆர்வத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. பெனெடிக்ட் ஜெர்மனி சென்றபோது முதல் முறையாக பலூன் திருவிழாவைப் பார்த்தார்.
”அது அற்புதமாக இருந்தது. இதை ஏன் இந்தியாவில் செயல்படுத்தக்கூடாது என எண்ணினேன். எனவே பலூன் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளத் துவங்கினேன். பிராண்டிங்கை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்த்தேன்,” என்றார்.
பெனெடிக்ட் தனது முதல் க்ளையண்ட் எமிரேட்ஸ் குறித்தும் அவர்களிடம் தங்களது சொந்த பலூனில் உலகை வலம் வரலாம் என பரிந்துரை செய்தது குறித்தும் நினைவுகூர்ந்தார். அதேபோன்ற பிரச்சாரத்தை மெரினா கடற்கரையிலும் பெசண்ட் நகரிலும் துவங்கினார். ஆனால் சட்டரீதியான செயல்பாடுகள், ஆவணப்படுத்துதல் மற்றும் இதர சிக்கல்கள் காரணமாக பலூன் திருவிழா தொடர்பான அவரது கனவு நிறைவேறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இறுதியாக தாய்வான் சுற்றுலா குழுவிடம் தனது யோசனையை முன்வைத்தார். அவர்கள் சம்மதித்தனர். ரோவியோ மிகவும் பிரபலமாகியிருந்த காலகட்டமான 2012-ம் ஆண்டு அந்நிறுவனத்தை அணுகிய பிறகு அவர் ஆங்கிரி பேர்ட்ஸ் பலூன் உருவாக்கினார்.
பெனெடிக்ட் 2013-ம் ஆண்டு பொள்ளாச்சி, விழுப்புரம், செஞ்சி ஆகிய பகுதிகளில் தனது முதல் பலூனைக் கொண்டு சோதனை ஓட்டம் மேற்கொண்டார். அடுத்ததாக கூடுதலாக ஐந்து பலூன்களை ஏற்பாடு செய்து பொள்ளாச்சியில் முதல் பலூன் திருவிழாவை நடத்தினார்.
பிராண்டிங் வலிமை
“பலூனிங் பார்வையாளர் நிகழ்வு. பலூனிங் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு வான்வழிப் போக்குவரத்து ஆகும். அத்துடன் இது சாகச விளையாட்டாகவும் கருதப்படுகிறது. இதில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் உள்ளூர் விமானப்படை நிலையத்துடனான ஒருங்கிணைப்பு உள்ளது,” என்றார் பெனெடிக்ட்.
தமிழ்நாடு பலூன் திருவிழா நீண்ட நேரம் நடைபெறும் பிரத்யேக விழாவாகும். மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி நிகழ்விற்காக புக்மைஷோ வாயிலாக மட்டுமே 35,000 புக்கிங் செய்யப்பட்டதாக பெனெடிக்ட் தெரிவிக்கிறார்.
ஹாட் ஏர் பலூனின் விலை 30,000 டாலர்களுக்கு மேல் ஆகும். ஒரு சில பலூன்களின் விலை 1.00,000 டாலருக்கும் மேல் உள்ளது. ஒரு நபர் ஒரு முறை சவாரி செய்வதற்கு 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தாலும் கூட முதலீட்டைத் திரும்பப் பெறுவது கடினம். ஜெர்மனி விழாவில் வார்ஸ்டெயினர் (Warsteiner) ஒரு ஹாட் ஏர் பலூனை வாங்கி உரிமம் பெற்ற விமானியிடம் சவாரிகள் மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வழங்கியுள்ளார்.
அதேபோன்ற மாதிரியை இந்தியாவிலும் பின்பற்றி ஒரு நபர் சவாரி செய்ய 5,000 ரூபாய் கட்டணம் வசூலித்தால் ஐந்தாண்டுகளில் முதலீட்டை திரும்பப் பெறலாம்.
புதுச்சேரியில் குழந்தைகளுக்கான அப்துல் கலாமின் கனவு குறித்த வரிகளை மையமாகக் கொண்டு பலூன்களைப் பறக்கவிட திட்டமிட்டுள்ளார் பெனெடிக்ட்.
முன்னாள் குடியரசுத் தலைவரின் தீவிர ரசிகரான அவர், குழந்தைகள் நலனில் அப்துல் கலாம் காட்டிய அக்கறை தன்னை பெரிதும் கவர்ந்ததாக கூறினார்.
ஆங்கில கட்டுரையாளர்கள் : கே. மணிகண்டன், ஹனி | தமிழில் : ஸ்ரீவித்யா