யூட்யூப் vs ஃபேஸ்புக்- சிறந்தது எது? ஆன்லைன் உலகில் வருவாய் ஈட்டுவது எப்படி?
சமூக ஊடகங்கள் பற்றிய விவாதங்களுடன் கலகலப்பாக களைகட்டியது- மதுரை டிஜிட்டல் திருவிழா!
கலகல கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய அனல் பறக்கும் பிரச்சாரங்களால் மதுரை பரபரப்பாகிக் கொண்டிருக்க, மறுபுறம் ஆல்ரெடி சுட்டெரிக்கும் வெயிலில் ஆஃப்பாயில் ஆகிக்கொண்டிருக்கும் மதுரைமக்கள் சித்திரை திருவிழா எனும் கொண்டாட்டத்தை துவங்கி உள்ள அதே வேளையில் அதே கலர்புல் ஜோரூடன் நடந்து முடிந்தது யூட்யூப் ஸ்டார்கள் ஒன்றுக்கூடிய ‘டிஜிட்டல் திருவிழா -2019’.
டெக்னாலஜியை தவிர்த்து நிசப்தத்தை ரசிப்போரது இஷ்டமான இடமாக விளங்கும், இயற்கை எழில் சூழ்ந்த, பசுமலையின் உச்சத்தில் அமைந்துள்ள தாஜ் ஓட்டலிலே, டிஜிட்டலின் பலனால் பயன்பெற்ற யூட்யூப் சூப்பர்ஸ்டார்கள் ஒன்றுகூடிய டிஜிட்டல் திருவிழா நடந்தேறியது. ஏப்ரல் 6ம் தேதி படுஜாலியாய் அரங்கேறிய நிகழ்வினை Adada Creators மற்றும் Dot Com Infoway ஆகிய இரு நிறுவனங்களும் சிறப்பாய் ஏற்பாடு செய்திருந்தது.
இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், Dot Com Infoway-ன் நிறுவனரும் ஆன வெங்கடேஷ் இதன் முக்கியத்துவம் பற்றி பேசுகையில்,
“சமூக ஊடகங்களில் கிரேயட்டர்கள், யூட்யூப், ஃபேஸ்புக்கை சிறப்பாக பயன்படுத்தி, அதில் எப்படியெல்லாம் வருவாய் ஈட்டமுடியும், அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்று தெரிந்து கொள்ளவே இந்த டிஜிட்டல் ஃபெஸ்ட். மேலும் இவ்வழிகள் மூலம் ஒருவர் தொழில்முனைவர் ஆவது எப்படி என்றும் அதன் பலங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது,” என்றார்.
நிகழ்வில் ஃபேஸ்புக், யூட்யூப்பில் எப்படி ஒரு தனிநபர் வருவாய் ஈட்டுவது என்பது குறித்த ஆலோசனைகள், அறிவுரைகள் மற்றும் வருவாய் ஈட்டிவரும் முன்னோடிகள் அவர்களது வெற்றிக்கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். அப்படி, விருந்தினர்களாக வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி, யூட்யூப் சேனல் கோபி, ஸ்மைல் சேட்டை சேனலிருந்து ராம் குமார், நக்கலைட்ஸ் பிரசன்னா, புட் சட்னி ராஜ் மோகன் என பல யூட்யூப் ஸ்டார்களும், ஆன்லைன் உலகில் பிரபலமான பிரபலங்களும் பங்கேற்று, யூட்யூப்/ ஃபேஸ்புக்கில் எப்படி அதிக ஃபாளோயர்களை பெறுவது? சந்ததாரர்களை எப்படி பெறுவது? பார்வையாளர்களுக்கு பிடித்த வீடியோக்களை எப்படி உருவாக்குவது? என பலதரப்பட்ட கோணங்களில் விவாதித்தனர்.
கிரேசி டாக்ஸ், குருபார்வை யூட்யூப் சேனல்களை இயக்கி வரும் முருகேஷ் நிகழ்ச்சியின் முதல் பேச்சாளராய் மேடையேறி, யூட்யூப் அக்கவுண்ட் ஓபன் செய்வது தொடங்கி, வருவாய் ஈட்டுவது வரை உள்ள அனைத்து சமாச்சாரங்களையும் பகிர்ந்து கொண்டார். அடுத்ததாய் குழந்தைகளுக்கு தாலாட்டு பாட்டு முதல் சகலமும் குழந்தைகள் சார்ந்த வீடியோக்களாக பதிவேற்றி அம்மாமார்களது பேவரைட் யூட்யூப் சேனலாக மாறிய மேஜிக் பாக்சின் சிஇஓ சதிஷ் குப்தா, மேடையை அவர்தாக்கி, குட்டி கதையை சொல்லி தொடங்கி அரங்கத்தினரது கவனத்தை பெற்றார். பின், யூட்யூப் சேனல் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் அவையில் அமர்ந்திருந்தவர்களுக்காக பத்து படிநிலைகளை சுருக்கமாய் எடுத்துரைத்தார்.
- முதலில் யூட்யூப் சேனலில் யாருக்காக வீடியோக்களை செய்ய போகிறீர்கள் மற்றும் எதற்காக? என்பதை உள்ளூர கேட்டுக் கொள்ளல் அவசியம்.
- சேனல் பெயர், உங்களது சேனலில் என்ன வகையான வீடியோக்கள் வாசகர்களுக்கு கிடைக்கும் என்பதை சேனல் ஆர்ட் பகுதியில் குறிப்பிடவேண்டும்.
- சேனல் தொடங்கியதும் சேனல் குறித்த 90 விநாடி டிரைலரை சிறப்பாய் செய்தல்.
- சேனலின் அபோட் பகுதியில், சேனல் பற்றி 100 முதல் 200 வார்த்தைகளில் குறிப்பிடுவதுடன், சேனலின் மற்ற சோஷியல் மீடியா அக்கவுண்ட் லிங்குகளை இணைக்க வேண்டும்.
- . உங்களது பார்வையாளர்கள் யார்? அவர்கள் விரும்புவது எதை? என்று தெரிந்து கொள்ளல்.
- ஒவ்வொரு வீடியோ உருவாக்கலுக்கு முன் 10 முதல் 15 நிமிட ஆராய்ச்சி.
- முன்கூட்டிய ஸ்கிரிப்ட் தயாரித்தல்.
- ஒரு மாதத்துக்கு தேவையான அல்லது இரண்டு, மூன்று வீடியோக்களை ஒரு சேர தயாரித்து வைத்து கொள்ளுதல்.
- வீடியோ உருவாக்கலுக்கு பின் நேரம் செலவழித்து தெளிவான எடிட்டிங்
- இறுதியாய் பதிவேற்றம் செய்தல் என்று சுருக்கமாய் விளக்கினார்.
டிஜிட்டலை நன்கு கையாண்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாம் தான் சூப்பர் ஸ்டார்ஸ்...
அடுத்த பேச்சாளரது யூட்யூப் சேனல் 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நக்கல், நையாண்டிகளுக்கும், காமெடிகளுக்கும் பஞ்சமே இல்லாத யூட்யூப் சேனலுக்கு, பார்வையாளர்களும் பஞ்சமில்லை. ஆனால், பர்ஸ் மட்டும் நிரம்பியபாடில்லை. 2018ல் நாளுக்கு 1ஜிபி என்றிருந்த காலத்திலே, 2 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தாலும் நாள்தோறும் சேனலை மூடுமாறு தொடர்ந்து யூட்யூபில் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.
இன்று 150 ஊழியர்களுடன் இளைஞர்கள் பணிபுரிய விரும்பும் சேனலாக விளங்கும் அந்த யூட்யூப் சேனலின் பெயர் ’ஸ்மைல் சேட்டை’. மேடையில் ஏறியது ஸ்மைல் சேட்டை, பிளாக் ஷீப் யூடியுப் சேனல்களின் ஒன் ஆப் தி நிறுவனர் ராம் குமார்.
‘பிக் மை ஸ்லாட்’ என்ற பெயரில் அந்த டீம் தொடங்கிய நிறுவனத்தின் மூலம் மற்ற யூட்யூப் சேனல்களின் வளர்ச்சிக்கும் உதவி வருகின்றனர்.
“யூ டியுப்பில் காசு வருவது ஷேர் மார்க்கெட் போன்றது. எவ்ளோ பணம் எப்படி கணக்கிடுவது என்று ஒன்றும் புரியவில்லை. தொடக்கத்தில் வீடியோக்களுக்கு நல்ல வியூஸ் இருந்து வருவாய் கிடைக்கவில்லை. அப்போது தான் எங்களுடைய வீடியோக்களில் நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரம்படுத்துகிறோம் என்று நிறுவனங்களுடன் பேசினோம். ஆனால், அதுவும் யாரிடம் சென்று அணுகுவது என்பதில் பிற யூட்யூப் சேனல்களுக்கு குழப்பம் இருந்ததால், நாங்களே பிக் மை ஸ்லாட் என்ற நிறுவனத்தை தொடங்கி அதற்கு தீர்வு செய்தோம்,” என்று கூறினார்.
சிறு இடைவேளைக்குபின் மேடை ஏறினார் ரமேஷ் பாலா.
ட்விட்டரில் 3.6 லட்சம் ஃபாளோயர்களை கொண்டவர், ட்விட்டரின் சாதகங்களை பகிர்ந்து, ஃபேஸ்புக்கை விட சக்திவாய்ந்த சமூக வலைதளம் ட்விட்டர் என்றார்.
மாதம் 18 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் யூட்யூப் சேனல்!
தொடர்ச்சியாய் யூட்யூப் பிரபலங்கள் பேச்சாளராய் மாறி மேடையில் ஏறி உரையாற்றியதால் சற்றே சோர்ந்திருந்த கூட்டத்தார், வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற பெயரை கேட்டவுடன் ‘உ’ ஓசையால் அவர்களது உற்சாகத்தை வெளிப் படுத்தினர்.
குழம்பில் தத்தளிக்கும் முழு கோழி, அண்டாவில் மல்லாக்கா கிடக்கும் முழு ஆட்டு வறுவல் என படையலாய் சமைக்கும் ஆறுமுகம் டாடியின் வீடியோக்களை பதிவிடும் அவருடைய மகன் கோபி, பேசத் தொடங்கினார்.
அரங்கத்தினர் ‘டாடி எங்கே’, ‘டாடி எங்கே’ அவர்களது பாசத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்து வந்த ஒரு குரல், ‘யூட்யூப்பில் அதிக வருவாய் ஈட்டும் தமிழக இளைஞர் கோபி’ என்று சொல்லியது. பின், அரங்கத்தினரும் கோபி ஈட்டும் வருவாயை அறிய ஆவலாக,
“கடந்த மாதம் 18லட்சம் ரூபாய், போன மாசம் ரூ 17லட்சம், அதுக்கும் முந்தின மாசம் ரூ16 லட்சம். மொத்தமா 2.5 கோடி ரூபாய் வருமானமாய் பெற்றுள்ளேன்,” என்றுக் கூற, அவரது உழைப்புக்கு கிடைத்த ஊதியத்தை எண்ணி பெருமிதம் கொண்டு கைத்தட்டுகளால் பாராட்டுக்களை தெரிவித்தனர் பார்வையாளர்கள்.
“என்ன வகையான யூ டியுப் வீடியோக்களும் செய்யலாம். ஆனால், அதில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அதே போல் மற்ற யூட்யூப் சேனல்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு நீங்கள் ஒரு யூட்யூப் சேனல் தொடங்குகையில் அதன் ஜெராக்சாக இருக்கக் கூடாது. இன்று யூட்யூப் சேனல்கள் அனைத்திலும் ஒரே போன்ற வீடியோக்கள் தான் இருக்கின்றனர்.
கவரப்படலாம்; ஆனால், அதன் சாயலாகி விடக்கூடாது..
காரணம், ஆசைப்பட்டு எந்த முன்னேற்பாடுகளுமின்றி சேனல் தொடங்கிவிட வேண்டியது. பின் கன்டென்ட் இல்லாமல் திணறுவர். வீடியோ குவாலிட்டியை விட கன்டென்ட் குவாலிட்டி முக்கியமானது.” என்று கூறினார் கொங்கு தமிழால் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா ஸ்டார்ஸ் வரை அனைவரையும் வைத்து செய்யும் நக்கலைட்ஸ் பிரசன்னா.
அடுத்ததாய், சேனல்களின் அக்கவுண்ட் தொடர்ந்து மூடப்பட்ட நிலையிலும் துவண்டு விழாமல் எழுந்த யூட்யூப் சேனல்களாக ஃபைனலி, வீடியோ மீம்ஸ், நீ யாருடா கோமாளி, பீயிங் தமிழன் ஆகிய சேனல்கள் அவர்கள் கண்ட தோல்விகளை பகிர, இன்னபிற சேனல்களின் உரிமையாளர்கள் அவர்களது அனுபவக் கதையை பகிர்ந்தனர். இப்படியாக, கருத்தும் காமெடியுமாக 15 பேச்சாளர்களுக்கு அடுத்தப்படியாக இறுதியாய் மேடை ஏறிய புட் சட்னி யூட்யூப் சேனலை சேர்ந்த ராஜ் மோகன், படிப்பில் சுமாரான மாணவராக இருந்து இன்று பலரால் அறியப்படும் பிரபலமாக மாற வழிவகை செய்த யூட்யூப் பற்றியும், அவரது வாழ்க்கையை பற்றியும் பகிர்ந்தார்.
அதைகேட்ட, பார்வையாளர்கள் இன்றே செல்கிறோம், யூட்யூப் சேனல் திறக்கிறோம், தட்டுறோம், தூக்கிறோம் என்ற பாசி ட்டிவ் எண்ணங்களுடன் விழா முடிந்து அரங்கை விட்டு வெளியேறினர்.