பங்கு வர்த்தகம் உள்ளிட்ட நிதிச் சேவைகளை எளிதாக்கும் சென்னை நிறுவனம்!
பங்கு வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட நிதிச் சேவைகளை அனைத்தையும் ஒரு கிளிக்கில் செய்யக்கூடிய ஆப் அறிமுகம் செய்துள்ளது கடந்த நிதியாண்டில் ரூ.24 கோடி விற்றுமுதல் கண்ட இந்த சென்னை நிறுவனம்.
’ஜெபு ஷேர் அண்ட் வெல்த் மேனேஜ்மண்ட்ஸ்’ (Zebu Share and Wealth Managements Pvt Ltd) நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.வான விஜய்குமார் தனது நிறுவனம் பற்றி பேசும் போது வாடிக்கையாளர்கள் பற்றி தான் அதிகம் பேசுகிறார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கான வசதியை எளிதாக்குவதே தங்கள் நோக்கம் என்கிறார். அவரது நிறுவன சேவைகளும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றன.
பங்கு வர்த்தகம், முதலீட்டு உள்ளிட்ட நிதிச்சேவைகளை அளிக்கும் நிறுவனமாக ’ஜெபு ஷேர் அண்ட் வெல்த் மேனேஜ்மண்ட்ஸ்’ விளங்குகிறது. இத்துறையில் துடிப்புடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், அண்மையில், பங்கு பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை மொபைலில் இருந்தே எளிதாக மேற்கொள்வதற்கான 'Zebull' செயலியை அறிமுகம் செய்துள்ளது.
பண்டக்கச்சந்தை பயணம்
வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த செயலி நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகக் கூறும், விஜய்குமார், கெமிக்கல் இஞ்சினியரான தான், நிதித்துறைக்கு வந்த பயணம் தொடர்பாக சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
” பொறியியல் பட்டம் முடித்த பிறகு, 2004ல் இந்தியன் நிதி கழகத்தில் (ஐஐஎப்) எம்பிஏ படிப்பில் சேர்ந்தேன். அப்போது பெரும்பாலும் நிதித்துறை என்றால் மூலதனச்சந்தை என்று மட்டுமே கருதப்பட்டது. 2005ல், எம்சிஎக்ஸ், கச்சா எண்ணெய் முன்பேர ஒப்பந்த வர்த்தகத்தை அறிமுகம் செய்தது. எனக்கு எண்கள் பிடிக்கும் என்பதால் இதில் ஆர்வம் உண்டானது,” என்கிறார் அவர்.
எம்பிஏ படிப்பின் பயிற்சி திட்டத்திற்காக எம்சிஎக்ஸ் நிறுவனத்திலேயே பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கோழிமுட்டைகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார். இதன் ஒரு பகுதியாக புரோக்கர் நிறுவனத்தில் பணியாற்றும் அனுபவமும் கிடைத்தது.
“எம்சிஎக்ஸ் சந்தையில் உறுப்பினரானேன். முன்பேர ஒப்பந்த வர்த்தகத்தில் ஈடுபாடு உண்டானது. நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து 2007ல் நிறுவனத்தை துவங்கினோம். வேளச்சேரியில் தான் துவங்கினோம்” என்கிறார் அவர்.
மேலும் முன்னேற்றம்
தொடர்ந்து என்.சி.டி.எக்ஸ், என்.எஸ்.இ உள்ளிட்ட சந்தைகளிலும் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். பண்டகச்சந்தை தவிர பங்கு பரிவர்த்தனையிலும் சேவை அளிக்கத் துவங்கினர். வழக்கமாக பின்பற்றப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட, துணை புரோக்கர் சேவை முறையில் செயல்பட்டனர்.
”பண்டகச்சந்தையில் வளர்ச்சி பெற்றோம். இந்தத் துறையில் அறிவு மற்றும் தொழில்முறை தன்மை எங்கள் பலமாக இருந்தது. இதனால் வளர்ச்சி பெற்றோம்,” என்கிறார்.
துவக்கத்தில் இருந்தே நவீன தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு செயல்படுத்துவதும் இக்குழுவின் பலமாக இருந்தது. புத்தாயிரமாண்டு துவக்கத்தில் காசோலை பரிவர்த்தனை ஆதிக்கம் செலுத்திய காலத்தில், தங்கள் வங்கி இநெட் எனும் இணைய வங்கிச்சேவையை அறிமுகம் செய்த போது அதை முதலில் பயன்படுத்திக் கொண்டனர்.
“தொழில்நுட்ப வசதி மூலம் வாடிக்கையாளர்களுக்கான வசதியை அளிப்பதே எங்கள் தனிச்சிறப்பாக இருக்கிறது,” என்கிறார் விஜய்குமார்.
தனிப்பாதை
பல ஆண்டு செயல்பாடுகளுக்குப் பிறகு, 2017ல், நண்பர்கள் நிறுவனத்தை பிரித்துக் கொண்டனர். விஜய் குமார், தன் பங்கிற்கு நிறுவனத்தை மாற்றி அமைத்து, ஜெபு சாப்ட்வேரை துவக்கினார். பங்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்தத் தீரமானிக்கப்பட்டது. நிதி சேவைக்கு உதவுபவர்கள் மட்டும் அல்ல, நிதிச்சேவை தீர்வு வழங்குபவர்கள் என்றும் உணர்ந்தனர். இது நிறுவன வளர்ச்சி பாதையில் வழிகாட்டியது.
”வாடிக்கையாளர்கள் முதலீட்டு உத்தியை வகுத்துக் கொள்வதிலும் வழிகாட்டினோம். நாங்கள் எதையும் பரிந்துரைப்பதில்லை. ஆனால், அவர்கள் தங்கள் உத்தியை கண்டறிய உதவுகிறோம்,” என்கிறார் விஜய் குமார்.
இன்று, இந்தியா முழுவதும் செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனமாக ஜெபு சாப்ட்வேர் வளர்ந்திருக்கிறது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு, அனைத்து மெட்ரோக்கள், கோவை, ஈரோடு, மதுரை, ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா உள்ளிட்ட இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் பிராந்திய அலுவலகங்களைப் பெற்றுள்ளது. 750க்கும் மேற்பட்ட துணை புரோக்கர்களை தனது வலைப்பின்னலில் கொண்டுள்ளது.
”வாடிக்கையாளர்கள் எங்களைத் தேடி வரவேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் அளிக்கும் தொழில்நுட்ப மேடை கொண்டு அவர்களே வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்,” என்கிறார் விஜய்குமார்.
ஒரு கிளிக் சேவை
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ’ஜெபுல்’ (Zebull) செயலியை, வர்த்தகத்திற்கான ஒரு கிளிக் சேவை என அவர் வர்ணிக்கிறார். பங்கு வர்த்தகம், பண்டகம், கரென்சிகள், இடிஎப்கள் என எல்லாவற்றையும் இந்த செயலி மூலம் எளிதாக அணுக முடியும். எல்லா சேவைகளையும், எந்த சிரமும் இல்லாமல் ஒரே கிளிக்கில் பெறும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
’வர்த்தகம் முதல் பணம் செலுத்தும் வாய்ப்பு வரை எல்லாவற்றையும் இதில் எளிதாக்கித் தந்திருக்கிறோம்” என்கிறார் விஜய்குமார். துவக்கம் முதல் முடிவு வரையான வசதி வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமாகிறது, என்கிறார்.
“இது மிகவும் லேசு ரக செயலி. இதில் தரவுகள் உடனடியாக பாய்ந்து வருவதை வாடிக்கையாளர்கள் உணரலாம் என்றும் அவர் உற்சாகமாகக் கூறுகிறார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி திட்டமிடலை மேம்படுத்திக்கொள்ள இந்த செயலி மூலம் உடனடித் தகவல்களை பெறலாம். வாடிக்கையாளர் பயன்பாடிற்கு ஏற்ப இந்த செயலியின் சேவை அமையும் வகையில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் இந்த செயலியில் நிதித் தகவல்களை ஸ்கேன் செய்வது உள்ளிட்ட வசதிகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு, வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து நல்லவிதமான வரவேற்புக் கிடைத்து வருகிறது.
ஏ.ஐ கவனம்
நிறுவன வருவாய் பற்றி குறிப்பிடும் விஜய்குமார், கடந்த நிதியாண்டில் ரூ.24 கோடி விற்றுமுதல் கண்டதாகவும், இந்த ஆண்டு இது இரட்டிப்பாகும் என எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார்.
நிறுவன பணி கலாச்சாரம் பற்றி குறிப்பிடுபவர், திறந்த வெளி அலுவலக அணுகுமுறையை பின்பற்றுவதாகவும், அலுவலகத்தில் தேவையில்லாத அடுக்குகள் கிடையாது, டீம்லீடர் உள்ளிட்டவர்கள் தங்கள் பணியை செய்கின்றனர் என்கிறார். எவரும் தன்னை எளிதாக அணுகலாம் என்றும் புன்னகையோடு கூறுகிறார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகிய நுட்பங்கள் அடிப்படையிலான நிதிச்சேவைகளை அளிப்பதை நிறுவனம் எதிர்கால திட்டமாக கொண்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: http://www.zebuetrade.com/
செயலி டவுன்லோட் செய்ய: Zebull APP