Zerodha 2024-இன் வருவாய் ரூ.8,000 கோடியை கடந்தது: லாபம் ரூ.4,700 கோடி!
நிதியாண்டு 2024 வளர்ச்சியை மீறி செபி உத்தேசித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, நடப்பு நிதியாண்டில் வருவாய் 10 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக நிதின் காமத் தெரிவித்துள்ளார்.
பங்கு வர்த்தக மேடையான Zerodha, 2024 நிதியாண்டில், நூறு கோடி டாலர் வருவாயை எட்டியுள்ளதோடு, அதன் லாபமும் 56 சதவீதமாக அமைந்து, இந்தியாவின் லாபகமரமான புதுயுக நிறுவனமாக விளங்குகிறது.
"2023-24 நிதியாண்டு, வருவாய் (ரூ, 8320 கோடி) மற்றும் லாபவிகிதத்தில் (ரூ.4,700 கோடி) சிறப்பாக அமைந்துள்ளது. ரூ.1,000 கோடி அளவிலான கைவரப்பெறாத லாபம் இதில் சேர்க்கப்படவில்லை. இது நிதி நிலையில் இடம்பெறும்," என நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ, நிதின் காமத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெரோதாவின் 2024 நிதியாண்டின் (FY24) எண்ணிக்கை, 2023 நிதியாண்டில் இருந்து பாய்ச்சலை குறிக்கிறது. அப்போது, வருவாய் ரூ.6,875 கோடி மற்றும் லாபம் ரூ.2,907 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர மதிப்பு இப்போது, அது கையாளும் மொத்த வாடிக்கையாளர் நிதியில் 40 சதவீதமாக இருக்கிறது.
இருப்பினும், இந்த ஆண்டு ஜூலையில் செபி கொண்டு வந்த கட்டுப்பாடு காரணமாக, வருவாய் மற்றும் லாபம் நடப்பு ஆண்டில் 10 சதவீதம் குறையலாம் என காமத் தெரிவித்துள்ளார். அக்டோபர் 1 முதல் அனைத்து உறுப்பினர்களிடமும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க செபி வலியுறுத்தியது.
மேலும், இண்டக்ஸ் டிரைவேட்டிவ் கட்டுப்பாடுகள் தொடர்பாக 30 முதல் 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"செபி அண்மையில் இண்டக்ஸ் டிரைவேட்டிவ் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. அடுத்த காலாண்டில் இது கட்டுப்பாடுகளாக வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இண்டக்ஸ் டிரைவேட்டிவ் எங்கள் வருவாயில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் வரும் எந்த மாற்றமும் தாக்கத்தை ஏற்படுத்தும். வருவாயில் 30 முதல் 50 சதவீதம் சரிவு ஏற்படலாம் என எதிர்பார்க்கிறோம்,” என நிறுவன பதிவு தெரிவிக்கிறது.
நிறுவனம் உச்சத்தை தொட்டுள்ள சந்தையில் போட்டியையும் எதிர்கொண்டு வருகிறது. அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இடையே சமநிலை காண முயல்கிறது.
“கட்டுப்பாடுகள் வர்த்தகத்தை குறைக்கும், சந்தையில் சரிவு உண்டாகலாம். போட்டி அதிகரிக்கும். எங்களுக்கு ஒரு புயல் காத்திருக்கிறது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடர்களை எதிர்கொள்ள, ஜெரோதா, தனது வருவாய் வழிகளை விரிவாக்கம் செய்து வருகிறது. மார்ஜின் டிரேடிங் நிதி அறிமுகம், பொது, தனியார் சந்தை முதலீடுகள், பத்திரங்கள், பங்குகள் மீதான கடன் ஆகியவை இதில் அடங்கும். அதன் முதலீடு பிரிவு ரெயின்மேட்டர் மூலம், நிறுவனம், 120 நிறுவனங்களில் ரூ.680 கோடி முதலீடு செய்துள்ளது.
நிதிநுட்பம், காலநிலைமை மற்றும் சுகாதாரம் சார்ந்த ஸ்டார்ட் அப்`களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ரெயின்மேட்டர் அறக்கட்டளை மூலம், ரூ.1,000 கோடி காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் நோக்கத்திற்கு ஒதுக்கியுள்ளது.
எதிர்கொள்ள உள்ள சவால்களை மீறி, நீண்ட கால நோக்கில், வாடிக்கையாளர் சார்ந்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும், பொது பங்கு வெளியீட்டிற்கு அவசரம் கொள்ளவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan