25வது ஆண்டில் Zoho- அட்வென்ட்நெட்டில் இருந்து சுயநிதி யூனிகார்னாக உருவான வெற்றிக்கதை!
ஜோஹோ நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அட்வெண்ட்நெட்டில் இருந்து துவங்கிய நிறுவனத்தின் வெற்றிப்பயணத்தை திரும்பி பார்க்கலாம்.
ஜோஹோ கார்ப்பரேஷன் சர்வதேச தொழில்நுட்பச் சேவை அளிக்கும் நிறுவனமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.வான ஸ்ரீதர் வேம்பு தனக்கே உரிய பாணியில், நிறுவன வலைப்பதிவில் எழுதியுள்ள குறிப்பில்,
“ஜோஹோ பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் 1995ல் இருந்து 1996 க்குள் நிறுவனம் பிறந்தது என்றும், 2002ல் Zoho.com முகவரியை வாங்கினோம் மற்றும் 2009ல் ஜோஹோ கார்ப் என மாறியது என்பது தான். நாம் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும், நிறுவனம் எப்போது பிறந்தது என உறுதியாகச் சொல்ல முடியாது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலதன பணத்தை வேண்டாம் என மறுத்தவரும், இந்தியாவின் சிறிய நகரங்களில் இருந்து வரும் திறமையாளர்களைக் கொண்டு உலகத்தரமான மென்பொருள்களை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கை கொண்டவருமான ஸ்ரீதர் வேம்பு ஸ்டார்ட் அப் உலகிலும், அதற்கு வெளியிலும் தனக்கான அபிமானிகளை கொண்டிருப்பதில் வியப்பில்லை.
இங்கு சுவாரஸ்யமான ஒரு சின்ன சம்பவத்தை பார்க்கலாம். ஜோஹோ டொமைன் பெயர் முதலில் அமெரிக்க விருந்தோம்பல் நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. இந்த ஸ்டார்ட் அப் 1999ல் வளர்ச்சிக்காக 53 மில்லியன் டாலர் திரட்டியது. ஆனால், இந்த ஹோட்டல் திரட்டி சேவைக்கு மதிப்பீடு அம்சம் சரிந்தது, 2001ல் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஸ்ரீதர் வேம்பு மற்றும் குழுவினர் இந்த பெயரை விரும்பியதால், நீதிமன்ற செயல்பாட்டின் மூலம் அதை வாங்கினர்.
2002ல் இதற்காக அவர் 5,000 டாலர் விலை கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது இது அதிகம் என்றாலும், அவரது சிறந்த முடிவாக அமைந்தது.
தாய் நிறுவனமான அட்வெண்ட்நெட்டின் அலுவலகச் சேவைகளை வழங்க இந்த டொமைன் பெயரை பயன்படுத்திக்கொண்டனர். 2010ல் நிறுவனம் Zoho Corp என மாறியது. இந்த காலகட்டத்தில் மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் வர்த்தகம் 100 மில்லியன் டாலரை கடந்து, பிரெஷ் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.
ஸ்ரீதர் வேம்பு நல்ல குழுவை உருவாக்குவதில் நம்பிக்கைக் கொண்டவர். 1999ல் டாட்காம் குமிழ் காலத்தில் ஒரு முதலீட்டாளர் 140 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், 10 மில்லியன் டாலர் காசோலை அளிக்கத் தயாராக இருந்ததை ஸ்ரீதர் வேம்பு ஏற்க மறுத்தார்.
"இன்னொருவர் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் விரும்பியதை செய்வதற்காக வாக்குறுதி அளிப்பது எனக்கு சூதாட்டம் போல தோன்றியது. எனவே நல்ல மனிதராக நான் பணத்தை மறுத்தேன். ஆனால் அப்போது அந்த முதலீட்டாளர் என்னை ஆணவம் மிக்கவர் எனக்கூறி, அறையை விட்டு கோபமாக வெளியேறினார்,” என முந்தைய யுவர்ஸ்டோரி நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.
“இது நல்ல முடிவாக அமைந்தது, ஏனெனில் இன்று என்னால் தொழில்நுட்பத்தில் சோதனை செய்ய முடிகிறது. யாரிடம் என் பணத்தை என்ன செய்கிறேன் எனச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் 50 சதவீத பணத்தை ஆய்விற்காக செலவிட முடிகிறது,” என்கிறார்.
பல முதலீடு நிறுவனங்கள் உருவாகி மறைவதை பார்த்துள்ள ஸ்ரீதர் வேம்பு, 1999 மற்றும் 2008 பொருளாதார நெருக்கடியில் பல நிறுவங்கள் வளர முடியாமல் மூடப்பட்டதையும் கண்டிருக்கிறார்.
இந்த நாட்களை நினைவு கூறும் ஸ்ரீதர் வேம்பு, தனது இணை நிறுவனர்களுக்கும் வலைப்பதிவில் நன்றி கூறியுள்ளார்.
“2001ல் டாட்காம் மற்றும் டெலிகாம் குமிழ் உண்டான நிலையில் 2001ல் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்றது. டெலிகாம் சந்தை மீண்டு வராது எனத்தோன்றியது. எங்கள் வருவாய் முழுவதும் அந்த சந்தையை சார்ந்திருந்தது. எங்களிடம் வங்கியில் ரொக்கம் இருந்தது மற்றும் ஆர்வம் உள்ள இளம் பொறியாளர்கள் இருந்தனர். மறுசீராக்க உத்தியை வகுத்தேன். மேனேஜ் இஞ்சின் மற்றும் கிளவுட் சேவை பிரிவு இதில் அடக்கம்,” என்று அவர் கூறியுள்ளார்.
2020ல், கொரோனா நெருக்கடி உண்டான போது, பல வர்த்தகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து உலகத்தரமான சேவைகளை தனது 6,000 ஊழியர்கள் உருவாக்க வழி செய்யும் வகையில் ஜோஹோ நிலையான ரொக்க இருப்பை கொண்டிருந்தது.
ஸ்ரீதர் வேம்பு நெல்லை மற்றும் தென்காசி அருகே வசிப்பவர் கடந்த பத்து மாதங்களாக, கிராமப்புறங்களில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வர தொழில்நுட்பம் மூலம் முயன்று வருகிறார்.
”1998ல் ஒரு மில்லியன் விற்பனை கொண்ட நிலையிலும் ஆய்வு மற்றும் அபிவிருத்தியில் அதிகம் முதலீடு செய்தோம், 2003–05 ல் அடுத்தக் கட்ட வர்த்தகத்திற்காக மீண்டும் அதிக முதலீடு செய்தோம். நிறுவன வரலாறு என்பது ஆய்வு மற்றும் ஆர்வம் உள்ள ஊழியர்களால் ஆனது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம அலுவலகம் மற்றும் எதிர்கால பணியில் நம்பிக்கை கொண்டவர் என்ற முறையில்,”எந்த காலத்திலும் எங்கள் வேர்களுக்கு உண்மையாகவும், நெருக்கமாகவும் இருக்க தீர்மானித்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர் சிம்மன்