‘மேட் ஃபார் இந்தியா’ தொழில்நுட்பச் சேவைகளை அறிவித்துள்ள Zoho!
பள்ளி/கல்லூரிகள் மற்றும் அரசுத் துறைக்கு முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான ஆன்லைன் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது Zoho.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் உலகமே முடங்கிப் போய்வுள்ள இந்த சிக்கலான சூழலிலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளையும், தற்போதுள்ள தேவைகளுக்கான தொழில்நுட்பs சேவைகளையும் உருவாக்கி வருகிறது.
அலுவலக ஊழியர்கள் அனைவரும் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டபோது, நிறுவன அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே பாலமாக வந்தது ‘Zoom' ஆப். இதைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்பது போல எல்லாரும் மீட்டிங், வீடியோ கால்ஸ் மற்றும் விவாதங்களை இந்த தளத்தில் நடத்திவருகின்றனர். ஆனால் அதில் ஒரு சில பாதுகாப்பு அம்சங்களும், டேட்டா செக்யூரிட்டி இல்லாததும் வெளிச்சத்துக்கு வந்ததால், பல நிறுவனங்கள், அரசு நிலையங்கள் Zoom ஆப்’னை பயன்படுத்த தடை விதித்தது.
இப்படி ஒரு பிரச்சனை வரும்போது அதற்குத் தீர்வு காண்பது தானே ஒரு நிறுவனத்தின் சிறப்பம்சமாகும். அதுவும் கொரோனா போன்ற பெரிய சிக்கலால் முடக்கப்பட்டுள்ள இந்தியா போன்ற மக்கள் அதிகம் உள்ள நாட்டின் உள்நாட்டுத் தேவைகள் மிக அதிகம். அதைப் புரிந்து கொண்டு தேவையான தொழில்நுட்பச் சேவையை அளிக்க இந்திய நிறுவனங்கள் பல முன் வந்தது. அதில் முன்னோடி Zoho நிறுவனம் எனலாம்.
ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டவுடனே சிறு நிறுவனங்கள், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள ஜோஹோ நிறுவனம், 3 மாதங்களுக்கு தங்களின் மென்பொருள் சேவையை இலவசமாக வழங்கும் ஒரு அவசரத் திட்டத்தை அறிவித்தது.
அதேபோல் ஜோஹோ, அனைத்து வகை நிறுவனங்களும் தொலைதூரப் பணியை மேற்கொள்ள உதவும் 11 கூட்டுமுயற்சி சேவைகள் அடங்கிய ‘ரிமோட்லி’ (Remotely) சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜோஹோ நிறுவன நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மேலும் பல புதிய சேவைகளை இந்தியாவுக்காக தயாரித்து வெளியிடப்படும் தகவலை தெரிவித்தார்.
தென்காசி அருகே ஒரு சிறிய ஊரில் ஊரடங்கு தொடங்கியது முதல் வசித்து வரும் ஸ்ரீதர் வேம்பு, வீட்டில் இருந்து பணிபுரியும் தங்கள் ஊழியர்களைக் கொண்டு பல புதிய சேவையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைந்தார்.
“நான் தென்காசி அருகே ஜியோ 4ஜி நெட் கனெக்ஷன் கொண்டு இயங்குகிறேன். இதைவைத்து தான் எங்கள் பொறியாளர்களுடன் ஆலோசித்து ‘ஸ்வதேசி சங்கல்ப்’ அதாவது ‘மேட் இன் இந்தியா’, ‘மேட் ஃபார் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் அரசு மற்றும் கல்வி நிலையங்களுக்கு பல புதிய சேவைகளை உருவாக்கி இன்று அறிவிக்கிறோம்,” என்றார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கல்வித்துறை, அரசு அலுவலகங்கள், மற்றும் தொழில்நிறுவனங்களுக்குச் சிறப்பு தொழில்நுட்ப பிரத்யேக சேவைகளை அறிமுகம் செய்வதாக ஸ்ரீதர் இன்று அறிவித்தார்.
கல்வித்துறை: Zoho Classes
ஊரடங்கால் தடைப்பட்டுள்ள வகுப்புகளைத் தொடங்க உதவிடும் ‘Zoho Classes' என்ற பிரத்யேக ஆப் அறிமுகம் செய்தார் ஜோஹோ-வின் முதன்மை மார்கெடிங் அதிகாரி ப்ரவல்.
‘Zoho Classes' ஆப் பள்ளி/கல்லூரிகளை தங்கள் மாணவர்களுடன் இணைத்து, அடெண்டன்ஸ் முதல், வகுப்பு எடுப்பது, வீடியோஸ் ஷேர் செய்வது, டெஸ்ட் வைப்பது மற்றும் கேள்வி-பதில்கள் என ஒரு வகுப்பில் நடைப்பெறும் அனைத்தையும் ஆன்லைனில் சாத்தியப்படுத்தும், என்றார். பள்ளிகள் எதற்கேனும் கட்டணம் பெறவேண்டி இருந்தால் அதுவும் இச்செயலி மூலம் முடியும் என விளக்கினார் ப்ரவல்.
“பரிட்ச்சார்த்த முறையில் சென்னை உட்பட இந்தியா முழுதும் சில பள்ளிகளுக்கு இந்த ஆப் வழங்கி பரிசோதித்துவிட்டோம். ஒரு வாரத்தில் 850 மாணவர்களை 70 ஆசிரியர்களுடன் இணைத்து பாடங்கள் எடுக்கப்பட்டன. அரசுப் பள்ளிகளுக்கு இந்த ஆப் இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு முதல் 100 மாணவர்களுக்கு இலவசம் மற்றும் அதற்கு மேல் ஒவ்வொரு மாணவருக்கும் 250ரூபாய் ஆண்டுக்கு வசூலிக்கப்படும்,” என்றார், ஸ்ரீதர்.
மற்ற கல்வி ஆப்’களை ஒப்பிடும் போது இதில் மாணவர்களின் பெயர், விவரம் என எல்லாம் பாதுகாக்கப்படும் என்பது இதன் சிறப்பம்சம்.
அரசுத்துறைகள்: Zoho Meeting
Zoho; அரசுத்துறையில் உள்ள பிரிவுகளுக்கு ஆன்லைனில் குழுக் கூட்டங்கள் மற்றும் வெபினார் நடத்திட உதவிடும் ‘Zoho Meeting’ எனும் பிரத்யேக ஆப் அறிமுகம் செய்தனர்.
“அரசு அலுவலர்கள் தங்களின் ஊழியர்களின் விவரங்களின் பாதுகாப்பு மற்றும் விவாதிக்கப்படும் விஷயங்கள், எடுக்கப்படும் முடிவுகள் பாதுகாப்புடன் இருக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப் ஏதுவாக இருக்கும். இதில் மூன்றாம் நபரின் ஈடுபாடு இல்லாததால் தகவல் திருட்டு நடைப்பெறவோ, சமூக ஊடகக் கணக்கு வாயிலாக லாக்-இன் செய்யவோ தேவையே இல்லை. எல்லா விவரங்களையும் ரகசியமாக வைத்து இதில் செயல்படமுடியும்,” என்றார் ஸ்ரீதர் வேம்பு.
Zoho Meeting மூலம் 25 பேர் வீடியோவிலும், 100க்கும் மேல் ஆடியோ மட்டும் கேட்கும் வகையில் தற்போது செயல்படமுடியும். இது வரும் நாட்களில் மேலும் அப்க்ரேட் செய்யப்படும் என்றார். வெளிநாடுகளைச் சேர்ந்த ஆப் அல்லது சேவைகளை பயன்படுத்துவதைக் காட்டிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எங்கள் சேவைகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகும் என்றார்.
கற்பித்தல்: Zoho Showtime
தனிப்பட்டவர்கள், கற்றல் அல்லது கற்பித்தலுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள உதவும் ஆப் இது. Zoho Showtime நிகர்நிலை லேர்னிங் ஆப். இதில் ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள், நிகழ்ச்சிகள் நடத்த வடிவமைக்கப்பட்டது. இது ப்ரீமியம் வகை கற்றலுக்கு பயன்படுத்தக்கூடியது என்பதால் அதற்கான கட்டணப்பட்டியல் அடிப்படையில் இருக்கும்.
இவற்றைத்தவிர, Zoho Creator Covid-19 App; இது கோவிட் 19 தொடர்பான பணிகளில் இருக்கும் மருத்துவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு, கொரோனா நோயாளிகள் தகவல், உணவுத்தேவை, மற்றும் அது தொடர்பான முயற்சிகள் குறித்த விவரங்களை வைத்துக்கொள்ள உதவும். அதேபோல் Zoho Desk, Zoho forms என கொரோனா தொடர்பான மென்பொருள் சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
தொழில் நிறுவனங்களின் தற்போதைய நிலை பற்றி பேசிய ஸ்ரீதர் வேம்பு,
“பிசினஸ் என்பது என்ன? பலருக்கு பல சேவைகளை வழங்க முடிந்ததாக இருப்பதே. தற்போதைய நிலையில் அதிகமான, தேவையான சேவைகளை நாங்கள் வழங்கினால் மட்டுமே இங்கு நிலைத்திருக்க முடியும். அதனால் குறைந்த வருவாய் இருப்பினும் அதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தேவையான செலவுகளைக் குறைத்துள்ளோம், என்றார்.
இறுதியாக, Zoho-வை பொறுத்தவரை தங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் தற்போது முறைப்படை ஊதியங்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார் ஸ்ரீதர். இருப்பினும் வரும் சில மாதங்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை பொறுத்து நடவடிக்கைகள் இருக்கும் என்பதையும், தான் ஊழியர்களுடன் வெளிப்படையாக பேசிவிட்டதாகக் கூறி முடித்தார் ஸ்ரீதர் வேம்பு.