கொங்கு மண்டலத்தில் தொழில்நுட்ப நிறுவன ஆய்வுப் பணிகளில் முதலீடு செய்ய ஜோஹோ திட்டம்!
தமிழகத்தின் கொங்கு மண்டல பொருளாதார வளர்சிக்காக தொழில்நுட்பங்களை உருவாக்க ஆய்வு பணிகளில் முதலீடு செய்ய தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு உருவாக்க ஜோஹோ திட்டமிட்டுள்ளது.
சென்னையை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ கார்ப், தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்ட கூட்டமைப்பை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் மூலம், இப்பகுதியில் இயந்திர கருவிகள், தொழில் தானியங்கி மென்பொருள், உற்பத்தி செயல்முறை ஆகியவற்றை உருவாக்குவதற்கான ஆய்வு மையங்கள் வசதியை நிறுவுவதில் ஜோஹோ முதலீடு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கொங்கு மண்டலத்தில் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் உள்ளூர் தொழிலபதிர்கள், தொழில்முனைவோர், சங்கப் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்த பயணத்தின் போது, தொழில்நுட்பத் திறன் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆய்வுப் பணிகளில் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியதாக ஜோஹோ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“இந்தப் பகுதி பல்வேறு வகையான தொழில்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியின் வரலாற்றைக் கொண்டுள்ளது. உள்ளூர் மக்கள் இணைந்து செயல்படுவதற்கான ஈடுபாட்டை கொண்டுள்ளனர். இப்பகுதி முன்னேற்றத்திற்கு இது காரணமாக அமைந்துள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்த மற்றும் இங்குள்ள இயந்திர உற்பத்தியாளர்கள் ஆற்றலை ஜப்பான் மற்றும் தைவானுக்கு நிகராக உயர்த்த ஆய்வுப் பணிகளில் முதலீடு செய்வது அவசியம்,” என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
"இந்த கூட்டமைப்பு இப்பகுதியில் உள்ள வேறுபட்ட தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வழிவகுப்பதோடு, தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கான முன்னுதாரணமாக இப்பகுதியை உருவாக்கும். இதற்குத் தேவையான, ஆற்றல், சமூக ஈடுபாடு மற்றும் தொழில்முனைவு இப்பகுதியில் உள்ளது என நம்புகிறேன், என அவர் கூறியுள்ளார்.
இந்த முயற்சிக்கு பெரிய அளவில் கூட்டு முயற்சி தேவை என்பதால், இந்த கூட்டமைப்பு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் ஜோஹோவை கொண்டிருக்கும். ஜோஹோவின் முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்புத்தவிர, மற்ற உறுப்பினர்கள் முக்கிய தொழில்நுட்பங்களுக்கான முதலீட்டை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.