ஆன்லைன் பேமெண்ட் துறையில் கால்பதிக்கும் Zomato!
Zomato பேமெண்ட்ஸ் பற்றி சில விவரங்கள்!
பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomato அண்மைக் காலமாக தொழில் ரீதியாக சிறப்பான முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் கால்பதித்த Zomato, கடந்த மாதம் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்று முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்க்காத லாபத்தை அள்ளிக் கொடுத்தது. இந்த நிலையில், தற்போது புதிய நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளது Zomato.
இந்தியாவின் தற்போது இருக்கும் முன்னணி பிசினெஸ்களில் ஒன்றான ஆன்லைன் பேமெண்ட் துறையில் கால்பதிக்கும் விதமாக Zomato Payments Private Limited (ZPPL) என்ற புதிய துணை நிறுவனத்தைத் துவக்கி இருக்கிறது. நேற்றுமுன்தினம் அதிகாரப்பூர்வமாக இதனைத் துவங்கியுள்ளது.
பேமெண்ட் அக்ரகேட்டர் மற்றும் பேமெண்ட் கேட்வே சேவைகளை வழங்குவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, துணை நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஒழுங்குமுறை தாக்கல் செய்யப்பட்டது என்று Zomato இது தொடர்பாக அறிவித்துள்ளது.
மேலும், Zomato பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், 10,000 பங்குகள் கொண்ட நிறுவனமாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் வெறும் 1 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவனம் துவங்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் பேமெண்ட் துறை வளர்ச்சியால் பல்வேறு நிறுவனங்கள் இதனைத் துவக்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது Zomato நிறுவனமும் இதில் இணைந்திருப்பது பேமெண்ட் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
Zomato பேமெண்ட்ஸ் பற்றி சில:
மின்னணு மற்றும் மெய்நிகர் கட்டண அமைப்புகள், இ-வாலட்கள், மொபைல் வாலட்கள், கேஷ் கார்டுகள் போன்ற பல சேவைகளை ZOMATO வழங்கும் என்று அந்நிறுவனம் செபிக்கு தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய நிறுவனம், பேமெண்ட்ஸ், செட்டில்மென்ட் சர்வீஸ், பேமெண்ட் கேட்வே சர்வீஸ் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் சேவைகள், மொபைல் போன் மூலம் பில்கள் செலுத்தும் வசதி போன்ற சேவைகளையும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது!
தகவல் உதவி- indiatoday | தமிழில்: மலையரசு