மார்ச் 2025க்குள் மின்சார ஏர் டாக்ஸி முன்மாதிரியை வெளியிடுகிறது சென்னை ஸ்டார்ட்-அப் eplane!
ePlane நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரி சத்யா சக்ரவர்த்தி, எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் விமானத்தை உருவாக்கி வருவதாகவும், முதலில் இது மூன்று அல்லது நான்கு இருக்கைகள் கொண்ட விமானமாக இருக்கும் என்று கூறினார்.
சென்னையில் உள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனமான தி இ-ப்ளேன் கம்பெனி பறக்கும் மின்சார சிறு விமானத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் முகமாக இதனை உற்பத்தி செய்ய இ-ப்ளேன் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
இந்த பறக்கும் மின்சார சிறு விமானத்திற்கான முன்மாதிரியை மார்ச் 2025-க்குள் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரி சத்யா சக்ரவர்த்தி, எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL-electric Vertical Takeoff and Landing) விமானத்தை உருவாக்கி வருவதாகவும், முதலில் இது மூன்று அல்லது நான்கு இருக்கைகள் கொண்ட விமானமாக இருக்கும் என்றும், மேலும், இதனை ஏர் ஆம்புலன்ஸாகவும் மாற்ற முடியும், என்றும் கூறினார்.
ஐஐடி சென்னை மூலம் வளர்ந்த இந்த ஸ்டார்ட்-அப் வரும் மாதங்களில் வணிகப் பயன்பாட்டிற்காக 2 முதல் 6 கிலோகிராம் வரையிலான சுமைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ட்ரோன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
"அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் சான்றளிக்கக்கூடிய முன்மாதிரியை உருவாக்க எதிர்பார்க்கிறோம். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) சான்றிதழைப் பெற இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்," என்று சக்கரவர்த்தி பிடிஐயிடம் கூறினார்.
இந்த ஸ்டார்ட்-அப் நிறுனத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டதன்படி, நாம் தனிப்பட்ட வாகனத்தில் சென்றால் 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் ஆகும் இடங்களை இந்த இ-ப்ளேன் மூலம் 14 நிமிடங்களில் சென்று விடலாம். eVTOL-கள் மூலம் நகர்ப்புறங்களில் நெரிசலைக் குறைப்பதே நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை.
மேலும், ePlane நிறுவனம் ட்ரோன்களை உருவாக்கி வருகிறது, அவை வரும் மாதங்களில் வணிகமயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-6 கிலோ மற்றும் 50 கிலோ சரக்கு ஆகிய இரண்டு செட் ட்ரோன்களும் 40-60 கிலோமீட்டர் வரை பறக்க முடியும் என்று சக்கரவர்த்தி கூறினார்.
இதற்கிடையில், இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து, 2026-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து மின்சார விமான டாக்ஸி சேவையையும் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தச் சேவையானது தலைநகர் டெல்லியில் உள்ள கனாட் பிளேஸில் இருந்து ஹரியானாவில் உள்ள குருகிராம் வரை பயணிகளை வெறும் 7 நிமிடத்தில் கொண்டு சேர்க்குமாம்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் மூல நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானப் பாதுகாப்பு ஆணையம் (EASA) eVTOL விமானங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்துள்ளது, வளர்ந்து வரும் இத்தகைய போக்குவரத்து முறைக்கான பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்கிறது.