மருத்துவக் காப்பீடு எடுக்க இனி வயது வரம்பு இல்லை - புதிய விதிமுறைகள் என்ன?
உடல் நலப்பாதுகாப்பு காப்பீட்டுப் பயன்களை விரிவுபடுத்தவும் அதற்கான அணுகலை மேலும் நீட்டிக்கவும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும் தனிநபர்களுக்கு 65 வயது என்ற வரம்பை நீக்கியுள்ளது.
உடல் நலப்பாதுகாப்பு காப்பீட்டுப் பயன்களை விரிவுபடுத்தவும் அதற்கான அணுகலை மேலும் நீட்டிக்கவும் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும் தனிநபர்களுக்கு 65 வயது என்ற வரம்பை நீக்கியுள்ளது.
மக்கள் தொகையின் அனைத்துப் பிரிவினரும் மருத்துவக் காப்பீட்டின் பயன்களைப் பெறவும், அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளுக்கான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏப்ரல் 1, 2024 முதல் வயது வரம்பு நீக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் மருத்துவக் காப்பீடு பெற இந்தியக் காப்பீட்டு ஒழுங்குறை ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
“அனைத்து வயது வரம்பினருக்கும் மருத்துவக் காப்பீடு உள்ளதை காப்பீட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மகப்பேறு மற்றும் வேறு எந்த குழுவிற்கும், தகுதிவாய்ந்த அதிகாரியால் குறிப்பிடப்பட்டபடி, காப்பீட்டாளர்கள் தங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை வடிவமைத்துக் கொள்ளலாம்.”
அரசின் இந்த முடிவை இந்தத் தொழிற்துறை சார்ந்தவர்களும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. ஆனால், நிறுவனங்களின் பாலிசிகள் வடிவமைப்பையும் அது அமல் செய்யப்படும் வழிமுறைகளும், பயன்பெறுதலுக்கான வழிமுறைகளும் விதிமுறைகளையும் பொறுத்துதான் அது பொதுமக்களுக்கு எந்த அளவில் பயன் தரும் என்பதைப் பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
பிற விதிகளில் மாற்றங்கள்:
ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான காப்பீட்டின் அதிகபட்ச காத்திருப்பு காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது, அதாவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒருவர் பிரீமியம் செலுத்தியிருந்தால், காப்பீடு செய்திருந்தவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது
60 மாதங்கள் பாலிசியின் தொடர்ச்சியான கவரேஜ்க்குப் பிறகு, நிரூபிக்கப்பட்ட மோசடி நிகழ்வுகளைத் தவிர, முன்பே இருக்கும் நோய்களை (PEDs) வெளிப்படுத்தாததைக் காரணம் காட்டி வாடிக்கையாளர்கள் கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்க முடியாது.
உதாரணமாக, ஒருவர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் முன்பிருந்தே இருக்கும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், காப்பீடு செய்தவர் 60 மாதங்கள் தொடர்ந்து காப்பீடு செய்திருந்தால், முந்தைய நோய்களை ஒருவர் வெளிப்படுத்தாவிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களின் சிகிச்சைக்கு பணம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மருத்துவக் காப்பீட்டில் 60 மாதங்கள் தொடர்ச்சியாக ஒருவர் பிரீமியம் செலுத்தி தொடர்ச்சியாக கவரேஜில் இருந்து 60 மாதங்கள் பூர்த்தியாகிவிட்டது என்றால் பாலிசி மாற்றம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவை உட்பட கருத்தில் கொண்டு முன்பே இருந்த நோய்களை காப்பீடு எடுத்தவர்கள் காட்டவில்லை என்பதற்காக பாலிசி உரிமை கோரலை காப்பீட்டு நிறுவனங்கள் தடுக்க முடியாது.
நிரூபிக்கப்பட்ட மோசடி என்பதைத் தவிர தவறாகக் கூறியதைக் காரணம் காட்டியும் உரிமைத் தொகையை தராமல் இருக்க முடியாது. 60 மாத காலம் நீடிக்கும் இந்தக் காலக்கட்டம் ‘தடை காலம்’ என்று அழைக்கப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், காப்பீட்டாளர்கள் புற்றுநோய், இதயம் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு, மற்றும் எய்ட்ஸ் போன்ற முன்பே இருக்கும் நோய் நிலைமைகளைக் கொண்ட தனிநபர்களுக்கும் பாலிசி வழிகளைத் திறந்து விட வேண்டும், அவர்களுக்குக் காப்பீட்டை மறுக்கக் கூடாது.
கூடுதலாக, பாலிசிதாரர்களின் வசதிக்காக பல தவணைகளில் பிரீமியம் செலுத்துவதற்கான விருப்பங்களையும் காப்பீட்டாளர்கள் வழங்க வேண்டும்.
மேலும், இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் கூறுகையில், பயண பாலிசிக்களை பொது மற்றும் மருத்துவக் காப்பீட்டாளர்கள் மட்டுமே வழங்க வேண்டும். கூடுதலாக, ஆயுஷ் கவரேஜை வழங்குவதற்கான போர்டு-அங்கீகரிக்கப்பட்ட பாலிசியைக் காப்பீட்டாளர்கள் கொண்டிருக்க வேண்டும், இது பாலிசிதாரருக்குத் தாங்கள் விரும்பும் சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறது.
மேலும், மற்ற மருத்துவக் காப்பீட்டிற்கான மற்ற சிகிச்சைகளுக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சைகளை வைப்பதற்கான அணுகுமுறையை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.