திடீர் தொழில்நுட்பக் கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளிப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து!
ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளிப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக மேற்கொள்ள இருந்த விண்வெளிப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அவரை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரது விண்வெளிப் பயணம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளித் துறையில் ஆர்வம் மிக்கவர். ஏற்கனவே, இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் செய்துள்ள இவர், அங்கு 322 நாட்கள் தங்கி இருந்தவர் ஆவார். அதோடு, விண்வெளியில் அதிக மணிநேரம் நடந்த பெண் என்ற சாதனையையும் சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். அவரது இந்தச் சாதனையை பின்னாளில் பெக்கி விட்சன் முறியடித்தார்.
திடீர் ரத்து
இந்நிலையில், மூன்றாவது முறையாக இந்திய நேரப்படி இன்று காலை 8.04 மணிக்கு, சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள இருந்தார். இவருடன் பேரி வில்மோர் என்ற மற்றொரு விண்வெளி வீரரும் விண்ணில் பறக்கத் தயாராக இருந்தார்.
அவர் பயணிக்க இருந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்படுவதாக இருந்தது. ஆனால், அந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கு 90 நிமிடக்கள் முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் செல்லவிருந்த பேரி வில்மோர் ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விண்கலத்தில் உள்ள ஆக்ஸிஜன் வால்வில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால், இந்தப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
தள்ளிப் போன புதிய சாதனை
திட்டமிட்டபடி, சுனிதா வில்லியம்ஸ் இன்று விண்ணில் பறந்திருந்தால், அவரது மூன்றாவது விண்வெளிப் பயணமாக இது அமைந்திருக்கும். முன்னதாக, கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தனது முதல் விண்வெளிப் பயணத்தை சுனிதா மேற்கொண்டார். 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி வரை அவர் விண்ணில் தங்கி இருந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.
அப்போது விண்வெளியில் நான்கு முறை அவர் ஸ்பேஸ்வாக் செய்தார். மொத்தம் 29 மணிநேரம் 17 நிமிடங்கள் ஸ்பேஸ்வாக் செய்து அவர் உலக சாதனை படைத்தார். அதன் தொடர்ச்சியாக பூமி திரும்பிய அவர், மீண்டும் 2012ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி இரண்டாவது முறையாக விண்ணில் பறந்தார். அதே ஆண்டு நவம்பர் 18ம் தேதி வரை விண்வெளியில் தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொண்ட அவர், பின்னர் பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்.
தற்போது 59 வயதாகும் சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்திற்காக, ஸ்டார்லைனர் விண்கலத்தை வடிவமைக்கும் பணியிலும், நாசா மற்றும் போயிங்கின் பொறியாளர்களுடன் பணிபுரிந்தார். இந்த விண்கலத்தை சுனிதா வில்லியம்ஸ்தான் இயக்குவதாக இருந்தது.
"நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், என் வீட்டிற்கு திரும்பிச் சென்றது போல் இருக்கும்," என்றும் அவர் கூறி வந்தார்.
ஆனால், எதிர்பாராத விதமாக விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், அவரது மூன்றாவது விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த பயணம் வெற்றிகரமாக தொடங்கி இருந்தால், உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையையும் சுனிதா வில்லியம்ஸ் படைத்திருந்திருப்பார்.
பெருமை
முன்னதாக இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில்,
"நாங்கள் அனைவரும் தயாராக இருப்பதால் இங்கு வந்துள்ளோம். எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றனர். நாங்கள் அதைப் பற்றி பேசினோம். அவர்கள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கின்றனர்," என சுனிதா வில்லியம்ஸ் கூறியிருந்தார்.
இதேபோல், இந்த விண்கலத்தில் பயணிக்கவிருந்த பாரி வில்மோர், இந்தத் தொழில்நுட்பச் சிக்கல்களை 'பின்னடைவுகள்' என்று விவரிப்பது தவறு என்று கூறியுள்ளார்.
"நாங்கள் அவற்றை முன்னேற்றப் படிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் ஒரு சிக்கலைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்வோம். அதை நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளோம். அதனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள்," என்கிறார் பார் வில்மோர்.
தொடரும் தொழில்நுட்பக் கோளாறுகள்
ஸ்டார்லைனர் விண்கலம் 2015-ஆம் ஆண்டில் தனது முதல் ஆளில்லா சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தது. ஆனால், விண்கலம் கட்டமைக்கப்படுவதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்தது. பின்னர், ஒரு வழியாக அனைத்தும் சரி செய்யப்பட்டு, இன்று அந்த விண்கலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் புதிய கோளாறு கண்டறியப்பட்டு, இப்போது மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு வீரர்களை அனுப்பி அங்கிருந்து அவர்களை பூமிக்குக் கொண்டுவரும் இரண்டாவது தனியார் நிறுவனமாக போயிங்க் மாறியிருக்கும். முதல் நிறுவனம், எலோன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது.