அனைவரும் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி: சாதித்த 'வயநாடு' மாவட்டம்!
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மூன்றாவது அலைக்கு முன்பு தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்றுவரை 55 கோடி தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய கேரளாவின் முதல் மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது மலையக மாவட்டமான வயநாடு. இந்தத் தகவலை கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இது தொடர்பாக பேசுகையில்,
“மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போட மறுத்தவர்கள் தவிர, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 6.51 லட்சம் நபர்களில் 6.16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வயநாடு மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 2.13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இரண்டாவது டோஸைப் பெற்றுள்ளனர். இது மாவட்ட மக்கள்தொகையில் 31.67% ஆகும்,” என்றார்.
தடுப்பூசி பிரச்சாரங்கள் இந்த சாதனையை நிகழ்த்த கைகொடுத்தன. ஒரு நாளைக்கு 1,00,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு மெகா பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. கிராமப்புறங்களை உள்ளடக்கும் வகையில், சிறப்பு மொபைல் தடுப்பூசி பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
”இதில் பழங்குடி குக்கிராமங்களுக்குச் செல்லும் வகையில் 28 மொபைல் அலகுகள் இருந்தன. மேலும், வீட்டை விட்டு வெளியேற முடியாத, 636 நோயாளிகளுக்கு வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி போட முடிந்தது. இந்த சாதனை செய்ய உறுதுணையாக இருந்த வயநாடு மாவட்ட நிர்வாகம் சுகாதாரப் பணியாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், பழங்குடியினர் துறை மற்றும் குடும்பஸ்ரீ தொழிலாளர்களுக்கு பாராட்டுக்கள்," என்றுள்ளார்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை, வயநாடு மாவட்டத்தில் 497 பேர் கொரோனா நேர்மறை சோதனை செய்தனர். இதன்மூலம் சோதனை நேர்மறை விகிதம் 20.07% ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 6616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5123 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மாவட்டத்தில் இதுவரை 6,47,284 பேர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், கேரளாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - thenewsminute | தொகுப்பு: மலையரசு