தமிழ்நாட்டில் தொழில்துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்க 14 தமிழக ஸ்டார்ட் அப்களுக்கு அரசு நிதியுதவி!
தமிழ்நாட்டில் சிப்காட் தொழில் புதுமையாக்க மையங்கள் சார்பில், தொழில் புதுமையாக்க மற்றும் வளர்ச்சி நிதி பெற 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சிப்காட் தொழில் புதுமையாக்க மையங்கள் சார்பில், தொழில் புதுமையாக்க மற்றும் வளர்ச்சி நிதி பெற 14 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான நிதியை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
தொழில்துறையில் புதுமையாக்கத்தை ஊக்குவிக்க, ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு கைகொடுக்க, ஸ்ரீபெரும்பத்தூர் மற்றும் ஓசூர் சிப்காட் வளாகங்களில், ரூ.33.46 கோடி நிதியில் சிப்காட் தொழில் புதுமையாக்க மையங்கள் (SIIC) அமைக்கப்பட்டன. மாநில திட்ட கமிஷன் கீழ் இயங்கும் தமிழ்நாடு புதுமையாக முயற்சி வாயிலாக ரூ.14.20 கோடி வழங்கப்பட்டது.

இந்த மையங்கள் உலகத்தரம் வாய்ந்த இன்குபேஷன் மையங்களாக விளங்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டன. மாநிலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்து வளர்த்தெடுப்பதும் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த மையங்கள் 23,500 சதுர அடி பரப்பில், இணை பணி வசதி, மாநாடு சந்திப்பு அரங்குகள், கருவிகளுடன் கூடிய புதுமையாக்க மையம், உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளன. இங்கு 228 அதிக கொள்திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம், 1000க்கும் மேலான புதுமையாக்க எண்ணங்கள், 200 முன்னோட்ட சாதனங்கள், 30 ஸ்டார்ட் அப்கள் ஆகியவற்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்த மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
ஃபோர்ஜ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த மையங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த இரு மையங்களிலும் முறையே 12 மற்றும் 22 ஸ்டார்ட் அப்கள், நிறுவனர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஸ்டார்ட் அப் நிதி
இதனிடையே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு, சிப்காட் தொழில் புதுமையாக்கம் மற்றும் வளர்ச்சி நிதி அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு, இதற்காக ரூ.3.80 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி பெறுவதற்காக நாளிதழ் விளம்பரம் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட் ஆய்வு செய்யப்பட்டன. வளர்ச்சி, சந்தை மற்றும் பிராடகட் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மொத்தம் பெறப்பட்ட 174 விண்ணப்பங்கள் பல்வேறு நிலைகளில் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி செய்யப்பட்ட நிறுவனங்கள் வல்லுனர் குழு முன் வைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 14 ஸ்டார்ட் அப்கள் நிதி பெற தேர்வு செய்யப்பட்டன. சிப்காட் நிர்வாக இயக்குனர், செயல் இயக்குனர், போர்ஜ் சி.இ.ஓ, நிதி செயலர், ஸ்டார்ட் அப் டிஎன் சி,இ.ஓ உள்ளிட்டோர் குழுவில் இருந்தனர்.
நிதி வழங்கல்
வளர்ச்சிப் பிரிவில் பேப்ஹெட்ஸ் ஆட்டமேஷன், ஜிடோகா டெக்னாலஜிஸ், ரூ.40 லட்சம் நிதி பெறுகின்றன. டாம்கோ அக்ரோ மெஷின்ஸ், சுழியம் இண்டஸ்டிரியல் மிஷின்ஸ், வெல்கின்ரிம் டெக்னாலஜிஸ், யூனிபோஸ் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் சந்தை பிரிவில் ரூ.10 லட்சம் நிதி பெறுகின்றன.
டெராலூமன் சொல்யூஷன்ஸ், செராடாட்வா இன்னொடெக், ஸ்ரீராம் ஆகியோர் பிராடகட் பிரிவில் ரூ.10 லட்சம் நிதி பெறுகின்றனர். ஆகுரை நிறுவனம் ரூ.8 லட்சம் நிதி பெறுகிறது.
காரோட்டிமம் இன்னோவேஷன்ஸ், ராப்டி எனர்ஜி, யாளி ஏரோஸ்பேஸ் ரூ.6 லட்சம் நிதியும், சிமெர்டெக் ரூ.4 லட்சம் நிதியும் பெறுகின்றன.
இவற்றுக்கான முதல் கட்ட நிதி வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கான நிதியை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.
Edited by Induja Raghunathan

