கிராமப்புற பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் 14 வயது சிறுமி!
மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளால் சிறுமிகளின் படிப்பு இடைநிறுத்தம் செய்யப்படுவதை அறிந்து அதிர்ந்துபோன அனன்யா மால்தே `பிராஜெக்ட் பிரகதி’ என்கிற திட்டத்தைத் தொடங்கி மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைக் கொடுத்தும் உதவுகிறார்.
அனன்யா மால்தே 14 வயது சிறுமி. மாதவிடாய் என்கிற நிகழ்விற்குப் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் என்னவென்பதை இவர் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மாதாமாதம் ஏற்படும் உடல் ரீதியான மாற்றம் என்பதை உயிரியல் பாடத்தின்வழி கற்றறிந்து புரிந்துகொண்டிருக்கிறார்.
அறிவியல் ரீதியாக இதன் உண்மை புரிந்தாலும் சமூக அளவில் மாதவிடாய் பற்றிய மக்களின் கண்ணோட்டம் இவருக்கு அதிர்ச்சியளித்தது.
இவரது வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணின் சகோதரி ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக்கொண்டது பற்றி அனன்யா கேள்விப்பட்டார். இதுகுறித்து விசாரித்தபோது மாதவிடாய் காரணமாகவே படிப்பைக் கைவிடவேண்டிய அவல நிலை ஏற்பட்டது புரிந்தது.

”மாதவிடாய் வந்துவிட்டது. அப்படியானால் அந்த சிறுமி கல்யாணத்திற்குத் தயாராக இருக்கிறார். இதை பிரகடனப்படுத்த ஒரு பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாதவிடாய் காரணமாக ஒரு பெண்ணின் படிப்பு தடைபடுமா என அதிர்ந்துபோனேன்,” என்கிறார் அனன்யா.
இந்த சிறுமிக்கு மட்டும்தான் இப்படி ஒரு நிலையா? இன்னும் எத்தனை பெண்களின் முன்னேற்றத்திற்கு மாதவிடாய் தடையாக இருக்கிறது? இதுபோல் அவரது மனதில் ஆயிரம் கேள்விகள் முளைத்தன. இவற்றிற்கு விடைகாண விரும்பியவர் இதுபற்றி இணையத்தில் ஆய்வு செய்யத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட 23 மில்லியன் சிறுமிகள் முறையான மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால் படிப்பை இடைநிறுத்தம் செய்வதாக Dasra வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதை அனன்யா கவனித்தார்.
இதுவே அவர் 'பிராஜெக்ட் பிரகதி’ தொடங்கக் காரணமாக அமைந்தது. மாதவிடாய் தொடர்பான கட்டுக்கதைகளைத் தகர்த்தெறிந்து கிராமப்புறப் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைக் கொடுத்து உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
மாதவிடாய் பற்றிய கண்ணோட்டம்
அனன்யா, பெங்களூரு இந்திராநகரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மானவ் சுபோத் இணைந்து நிறுவியுள்ள, ஐநா அங்கீகாரம் பெற்ற, லாப நோக்கமற்ற 1M1B ஃப்யூச்சர் லீடர் திட்டத்தில் அனன்யா சேர்ந்தார். மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மில்லியன் இளைஞர்களை வளர்த்தெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அனன்யா இத்திட்டத்தைத் தொடங்கினார். கிராமப்புற மக்களுடன் தாய்மொழியில் கலந்துரையாட எளிதாக இருக்கும் என்பதால் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் கவனம் செலுத்தி திட்டத்தைத் தொடங்கினார்.

1M1B ஃபவுண்டேஷன் என்ஜிஓ பார்ட்னர்கள் மூலம் மூன்று கிராமங்களின் தலைவர்களுடன் பேசினார். பள்ளிக்குச் செல்லும் சுமார் 100 சிறுமிகளிடம் பேசினார். இந்த உரையாடல் மூலம் மாதவிடாய் தொடர்பான இவர்களது புரிதலைத் தெரிந்துகொண்டார்.
சிறுமிகளிடமும் அவர்களது பெற்றோர்களிடமும் மாதவிடாய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பது புரிந்தது.
”மாதவிடாய் என்றால் என்ன? அது ஏன் வருகிறது? இதுபோன்ற கேள்விகளுக்கு சிறுமிகளின் பெற்றோர்களுக்கே பதில் தெரியவில்லை. பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் இதுபற்றி நன்கு அறிந்திருந்தாலும்கூட ’சிறுமிகளுக்கு மாதவிடாய் ஏற்படும் அவ்வளவுதான்’ என்கிற வரிகளுடன் நிறுத்திக்கொள்கின்றனர். விரிவாக எடுத்துச்சொல்ல வெட்கப்பட்டு விவரிப்பதில்லை,” என்கிறார் அனன்யா.
மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் கிடைப்பதில்லை. அவற்றை வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி இருப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றை அப்புறப்படுத்தும் விதம் தெரிவதில்லை. பெரும்பாலான மாணவிகள் துணிகளைப் பயன்படுத்துகின்றனர்.
விழிப்புணர்வு பிரச்சாரம்
பள்ளிகளுக்கு சென்று மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனன்யா திட்டமிட்டார். ஆனால் பள்ளி முதல்வர்கள் எளிதாக அனுமதி வழங்கவில்லை.
ஆன்லைனில் கிடைக்கும் தகவல்கள் பெரும்பாலும் ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளிலேயே இருந்தன. எனவே, பருவமடைதல் பற்றியும் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பற்றியும் குஜராத்தி மொழியில் விரிவாக தொகுத்தார் அனன்யா. 10-18 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு மாதவிடாயின் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் பற்றிப் புரியவைத்தார்.
“மாணவிகள் எந்தவித தயக்கமும் காட்டவில்லை. வெளிப்படையாக பேசினார்கள். பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கமுடியாத சந்தேகங்களை எங்களிடம் கேட்டறிந்தனர். சக வயது என்பதால் என்னால் அவர்களுடன் நெருங்கிப் பழகமுடிந்தது,” என்கிறார்.
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆன்லைனில் நிதி திரட்டத் தொடங்கினார். 5.5 லட்ச ரூபாய் வரை சேகரிக்கப்பட்டது. இந்தத் தொகை சானிட்டரி நாப்கின் விநியோகிக்கவும் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டி இயந்திரம் நிறுவவும் பயன்படுத்தப்பட்டது.
குஜராத்தின் தொலைதூரப் பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் இருந்த பகுதிகளுக்குச் சென்று அவர்களிடம் பேசினார். இவர்களில் பலர் சானிட்டரி நாப்கின் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சானிட்டரி நாப்கின் பயன்பாடு, மாதவிடாய் சுகாதாரம் போன்றவை குறித்து இங்குள்ளவர்களுக்கு விவரித்தார் அனன்யா.
அனன்யா இதுவரை 30,000 சானிட்டரி நாப்கின்களை விநியோகித்திருக்கிறார். கட்ச், வதோதரா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு பள்ளிகளில் எரியூட்டி இயந்திரம் நிறுவியிருக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக இவரால் பெங்களூருவில் இருந்து குஜராத் சென்று வர முடியாமல் போனது.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறும் 1M1B உச்சிமாநாட்டில் தனது சேவையை விவரிக்க அனன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்

