16 வயதில் AI ஸ்டார்ட் அப்- அப்பாவுக்கு ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை; யார் இந்த ரவுல் ஜான் அஜு?
கேரளாவைச் சேர்ந்த 12ம் வகுப்பு சிறுவனான ரவுல், சொந்தமாக ஏஐ ஸ்டார்ட் அப் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது தந்தையை வேலைக்கு அமர்த்தி, மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கி அசர வைத்துள்ளார்.
‘மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்’- என்பது திருக்குறள்
இந்த குறளுக்கு ஏற்ப தன் தந்தையைப் பெருமைப் படுத்தியதோடு, அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலையும் போட்டுக் கொடுக்கும் அளவிற்கு, 16 வயது சிறுவன் ஒருவர், ஏஐ ஸ்டார்ட் அப் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், கேரளாவைச் சேர்ந்த ரவுல் ஜான் அஜு என்ற சிறுவன்தான் இந்த வியப்பிற்குரிய சாதனையை செய்திருப்பவர். பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டே, ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இந்த சிறுவன், ‘இந்தியாவின் ஏஐ சிறுவன்’ (AI kid of India) என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இன்றைய பள்ளி, கல்லூரி சிறுவர்கள், கையில் செல்போன் கிடைத்தாலே ரீல்ஸ்களிலும், கேம்ஸ்களிலும் நேரத்தை வீணடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் அதிகமாகியுள்ள நிலையில், அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில், தனது ஸ்மார்ட் போனை ரொம்பவே ஸ்மார்ட்டாக பயன்படுத்தி, 16 வயதிலேயே தொழில்முனைவோர் ஆகி இருக்கிறார் இந்த ரவுல் ஜான் அஜு.

9 வயதில் தொடங்கிய ஏஐ ஆர்வம்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் ரவுல் ஜான் அஜு. 2007ம் ஆண்டு பிறந்த இவர், தற்போது இடைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வணிகவியல் பிரிவில் படித்து வரும் இவருக்கு, 9 வயதில் இருந்தே ஏஐ மற்றும் கோடிங் மீது அதீத ஆர்வம்.
இவரது தந்தை அஜு ஜோசப், அமேசான், விப்ரோ, அடோப், ஐபிஎம் போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மூத்த தொழில்நுட்ப வல்லுநரான தனது தந்தையைப் பார்த்தே, ரவுலுக்கும் சிறுவயதில் இருந்தே ஏஐ மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஜோசப் அடோப் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ரவுலுக்கும் அந்த தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், தனது 12 வயதில் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், ’மீ பாட்’ என்ற மனித ரோபாவை உருவாக்கி, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
பள்ளியில் படித்துக் கொண்டே தொடர்ந்து தனது தேடல்களையும் அவர் விரிவாக்கினார். அதன் பலனாக, சட்ட உதவிக்கான ‘நியாயசதி’ (NyayaSathi), அவசரக்கால வழிகாட்டியான ‘ரெஸ்க்யூ ஏஐ’ (RESQ AI), ZapGap, Investo AI என 15-க்கும் மேற்பட்ட சமூகப் பயன்பாடு மிக்க செயலிகளை ரவுல் உருவாக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தார். இவை அனைத்தையும் அவர் தனது சுய கற்றல் மூலமே உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 12 வயதிலேயே, ‘வொயிட்ஹேட் ஜூஆர்’ (WhiteHat Jr) என்ற பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் கோடிங் ஆசிரியர் பணிக்கு ரவுல் விண்ணப்பித்தார். 12 வயது சிறுவன் எப்படி கோடிங் வகுப்பெடுப்பான் என்ற ஆச்சர்யம் இருந்தபோதும், ரவுலை நேர்காணலுக்கு அழைத்தது அந்நிறுவனம். அப்போதுதான், ரவுலின் கோடிங் திறமை அவர்களை வியப்படையச் செய்தது. எனவே, அவருக்கு, ‘யங் பயனீர் அவார்ட்’ (Young Pioneer Award) விருது வழங்கி அந்நிறுவனம் பாராட்டியது.

12 வயதில் சொந்தமாக ஏஐ ஸ்டார்ட் அப்
ஒரு கட்டத்தில், ‘தான் ஏன் வெளிநிறுவனங்களில் வேலை தேட வேண்டும்.. நாமே ஒரு நிறுவனம் தொடங்கினால் என்ன?’ என்ற கேள்வி ரவுலுக்கு உண்டானது. அதன் தொடர்ச்சியாக உருவானதுதான், ‘AI Realm Technologies’ என்ற ஸ்டார்ட்-அப்.
இந்நிறுவனத்தில் நிறுவனராகவும், தலைவராகவும் செயல்பட்டு வரும் ரவுல், தனது நிறுவனத்திலேயே தனது தந்தையையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். மாதம் அவருக்கு ரூ. 2 லட்சம் சம்பளமாகவும் வழங்கி வருகிறார். ரவுலின் தந்தை உட்பட, இந்நிறுவனத்தில் 15 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
“தொழில்நுட்பத்தை நான் செல்போனில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் பெருநிறுவனங்களை நிர்வகிக்கும் அனுபவம் என் தந்தையிடம் மட்டுமே உள்ளது. அவர் எனது நிறுவனத்திற்கு நல்ல வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவரிடம் இருந்து பல யுக்திகளை நான் கற்று வருகிறேன்,” என தன் தந்தையை தனது நிறுவனத்தில் பணியமர்த்தியது குறித்து கூறுகிறார் ரவுல்.
தனது நிறுவனம் மூலம், ‘திங்க்கிராஃப்ட் அகாடெமி’ என்ற பயிற்சி மையத்தையும் ரவுல் நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம், ஐஐடி, ஐஐஎம் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் என உலகளவில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ரவுல் பயிற்சி அளித்துள்ளார்.

3 முறை TEDxல் பங்கேற்பு
ரவுலின் இந்த சாதனைகள் குறித்துக் கேள்விப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, ‘எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை குழந்தைகளின் பாதுகாப்புக்கு எப்படி பயன்படுத்தலாம்’ என்ற திட்டம் குறித்து ரவுல் விளக்கினார். இந்த திட்டத்திற்கு ஐநா அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இது தவிர, தனது 15 வயதிற்குள்ளாகவே TEDx சர்வதேச மேடையில் மூன்று முறை சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றுப் பேசியுள்ளார் ரவுல்.
இந்தச் சிறிய வயதில் இவ்வளவு தெளிவான எதிர்காலத் திட்டங்களாக என அசர வைக்கிறார் ரவுல். உதாரணத்திற்கு தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அவர், பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கணினி அறிவியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்யாமல், வணிகவியலை தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார். காரணம் கேட்டால்,
‘ஒரு தொழிலை எப்படி நடத்துவது என்பதைத் தெரிந்து கொள்ள வணிகவியல் படிப்பதே நல்லது’ என்கிறார்.

சாதிக்க வயது ஒரு தடையல்ல...
பாக்கெட் மணி கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், தனது தந்தைக்கே வேலை போட்டுக் கொடுக்கும் அளவிற்கு இந்த சிறிய வயதில் தனது தொழில் திறமையை வளர்த்துக் கொண்டுள்ள ரவுலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தொழிலில் சாதிக்க, பொருளாதாரம், சமூகம், கல்வியறிவு போன்றவை மட்டுமின்றி.. வயதும் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ரவுல். திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும், தெளிவான சிந்தனையும் இருந்தால், எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு ரவுல் ஒரு வாழும் உதாரணம்.

