2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்: மீண்டும் ‘செல்லாக்காசு’ அறிவிப்பு வருமோ...!
ரூ.2000 நோட்டுக்களை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்து மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால் நாட்டில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏடிஎம்களில் பணத்தை எடுக்க மக்கள் அலை மோதினர். இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு காரணமாக சில உயிரிழப்புகளும் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. மீள் பணமதிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தும் முடிவுடன் புதிய ரூ.500 நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. இவை மக்களின் வசதிக்காக அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டது.
1000 ரூபாய் நோட்டுக்களை நிறுத்திவிட்டு 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வதன் முலம் கருப்புப் பணப் பதுக்கல் அதிகரிக்கும் என இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை உறுதி செய்வதைப் போல கடந்தாண்டு ஏப்ரல் மாதம், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. வருமான வரித்துறையினர் நடத்திய பெரும்பாலான சோதனைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் தான் கட்டுக்கட்டாக சிக்கியது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை உண்மை என நிரூபித்தது.
அச்சடிப்பு குறைப்பு?
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாகவும், அதன் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவதாகவும் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ‘தி பிரிண்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு குறைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றபோதிலும், மத்திய அரசின் உயரதிகாரி இதனை கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,
“ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்கும். அதன்படி தான் ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளைக் குறைந்த அளவில் வைத்திருக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல," எனத் தெரிவித்துள்ளார்.
'அதிகளவில், 2,000ரூபாய் நோட்டுகள் புழங்குவதன் மூலம், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தின் நோக்கத்தை சிதைந்து விடும் என மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.
ஆனால், 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு குறைப்பினால், விரைவில் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் வர்த்தகம் செய்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்படி மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு இல்லையென்றாலும், அரசின் இந்த நடவடிக்கையால் 2000 ரூபாய் நோட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் இருந்து வெளியேறிவிடும் என்பது தான் பொருளாதார வல்லுநர்களின் கருத்து.
கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்தம் ரூ. 18.03 லட்சம் கோடி பணப்பழக்கத்தில் இருந்தது. இதில், 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37.3 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும். இது 2017-ல் 50.2% என இருந்தது. இதேபோல், 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்களே.
ரிசர்வ் வங்கி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதில், 2017-18ம் நிதியாண்டில் 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக சேர்க்கப்படும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
அதாவது இக்காலகட்டத்தில் மொத்த பண மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுக்கள் 7.8% மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. அதேநேரம், 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது அதிகரித்துள்ளது அந்த அறிக்கை மூலம் தெரிய வந்தது. 2017ம் ஆண்டு மார்ச் மாதம், 22.5% என்ற அளவில் இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள் பங்களிப்பு, கடந்த வருடம் மார்ச் மாதம் 42.9 சதவீதமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.