கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் தப்பிய சிறுமி- இன்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக மாறிய கதை!
தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளித் தீவிபத்தில் உயிர் தப்பிய மாணவி ஜெனிபர், இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காதவண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற உறுதிமொழியோடு படித்து, TNPSC தேர்வில் வெற்றி பெற்று தமிழக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக பதவியேற்க உள்ளார்.
2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி.. அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாத நாள். பல்வேறு கனவுகளோடு தங்கள் குட்டிக் குழந்தைகளை, கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள், பதைபதைத்துப் போன நாள். பள்ளியின் சத்துணவுக்கூடத்தில் பற்றிய தீ, கணநேரத்தில் பள்ளி முழுவதும் பரவ,என்ன நடக்கிறதென்று பிஞ்சுக் குழந்தைகள் சுதாரிக்கும்முன், மேற்கூரை சரிந்து விழுந்து, 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நாள்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த தீ விபத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 94 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த அந்த கோர விபத்தில், நூலிழையில் உயிர் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவர்தான், அப்போது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஜெனிபர்.
தன் கண் எதிரேயே தன் நண்பர்களை இழந்த அந்த துயரத்தின் வடுவையே தன் நம்பிக்கையின் விதையாக்கி, அந்த இக்கட்டான காலகட்டத்தில் தங்களுக்கு உதவிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் நடவடிக்கைகளை உரமாக்கி, இனி இதுபோன்றதொரு விபத்து எங்கேயும் நடந்து விடக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடினமாக படித்து, இன்று தன் விடாமுயற்சியால் தமிழக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக பதவியேற்க உள்ளார் ஜெனிபர்.

உயிரைக் காப்பாற்றிய தேர்வு
தீ விபத்து நடந்த அன்று, விபத்தில் சிக்கிய பள்ளியின் தரை தளத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்துள்ளார் ஜெனிபர். அவரது வகுப்புத் தோழர்கள் அனைவரும் மாடிக்கு செல்ல, தேர்வு ஒன்றை எழுதிக் கொண்டிருந்ததால், அதை முடித்து விட்டு தானும் செல்லலாம், என நினைத்திருக்கிறார் அவர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்தக் கட்டிடத்தின் மேல்தளம் தீப்பிடித்தது.
மாணவர்களை அவசரமாக வெளியேறச் சொல்லி ஆசிரியர்கள் கத்தவும், சுதாரித்துக் கொண்ட அச்சிறுமி, பக்கத்து வகுப்பறையில் இருந்த தனது தம்பியையும் அழைத்துக் கொண்டு பத்திரமாக வெளியேறியதால் உயிர் தப்பினார்.
தன்னுடன் படித்த தோழிகள், தன் அக்கம்பக்கத்து குழந்தைகள் என பலரை இழந்து, மனஅழுத்தத்திற்கு ஆளான போதும், அந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு பக்கபலமாக இருந்த அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணனின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தானும் பின்னாளில் இதேபோல் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்துள்ளார்.
'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’என்ற திருக்குறளாஇ உண்மையாக்கி, பொருளாதார சூழ்நிலை, மனக்காயம், என இடையில் பல்வேறு தடைகள் இருந்தபோதும், அதையெல்லாம் உடைத்துத் தள்ளி, இன்று தான் ஆசைப்பட்டபடியே தமிழக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக பதவியேற்க இருக்கிறார் ஜெனிபர்.
தனது வெற்றி குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குக்கு அவர் அளித்த பேட்டியில்,
“2004ம் ஆண்டு ஜூலை மாதம் அந்த விபத்து நடந்தபோது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். விபத்தின் வீரியம் அப்போது புரியவில்லை. அந்த சமயத்தில் தஞ்சாவூர் கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார்.
”அவரது உதவியால் புதிய பள்ளியில் சேர முடிந்தது. ஒரு வருட பள்ளிக் கட்டணம் கட்டவில்லை. புதிய புத்தகங்கள், நோட்டுகள் என அனைத்தும் கிடைத்தது. அப்போதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஒரு கையெழுத்தின் பலத்தை நான் உணர்ந்தேன். அவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் நானும் கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் உருவானது,” எனத் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உடன் ஜெனிபர்
’நான் முதல்வன்’ தந்த வெற்றி
மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவோடு, ஸ்ரீமாதா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்ந்து படித்த ஜெனிபர், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1094 மதிப்பெண்கள் பெற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை சென்று கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக ஆரம்பத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கென தனியாக பயிற்சி மையங்கள் எதிலும் ஜெனிபரால் சேர முடியவில்லை. எனவே, டியூசன் எடுத்து, அதில் கிடைத்த வருமானத்தில் தனது தேர்வுகளுக்கு தயாராகத் தொடங்கினார் அவர்.
“எனது இந்த வெற்றிக்கு மிகவும் உந்துசக்தியாகவும், உறுதுணையாகவும் இருந்தது எனது அம்மா சுஜாதாதான். எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பலதரப்பட்ட அழுத்தங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, நான் பெரிய அதிகாரியாக வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். தொடர்ந்து நான் படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்தார்."
பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்ததால், ஆரம்பத்தில் என்னால் பயிற்சி மையங்கள் எதிலும் சேர்ந்து படிக்க இயலவில்லை.
"2024ம் ஆண்டுதான் நான் முதல்வன் திட்டத்தில் தேர்வானேன். அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றேன். ஐந்து ஆண்டுகால முயற்சியின் பலனாக, கடந்தாண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் ஜெனிபர், மாநில அளவில் 15வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பதவியேற்றதும் முதல் பணி
சிறு வயதில் தன் கண் எதிரேயே தன் பள்ளித் தோழர்கள் தீயில் கருகியதை பார்த்த ரணமே ஆறாத சூழ்நிலையில், அந்த விபத்தில் சிக்கி பலியான தோழிகள் பெற்றோரைப் பார்த்தபோதெல்லாம் மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் ஜெனிபர். ‘என் மகளும் இன்று உன் வயதில் இருந்திருப்பாள்’ எனக் கூறி அவர்கள் அழுவதைப் பார்த்துப் பார்த்து உடைந்து போயிருக்கிறார்.
“தீவிபத்து நடந்தபோது நான் சிறுமி என்பதால், அப்போது அதன் தாக்கம் மிகவும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், வளர வளர அது எவ்வளவு பெரிய விபத்து என்பது புரிய ஆரம்பித்தது. யாரோ செய்த தவறுக்காக 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்ததை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை."
இனி இதுபோன்ற கோரவிபத்துகள் எங்கேயும் நடக்கக்கூடாது. நான் பதவியேற்றதும் இது போன்ற விபத்துக்கள் இனி நடக்காதவண்ணம் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு கட்டமைப்புகள் முறையாக இருப்பதை உறுதி செய்வதும்தான் என் முதன்மையான பணி,” என்கிறார் ஜெனிபர்.
ராதாகிருஷ்ணனுடன் நேரில் சந்திப்பு
கும்பகோணம் பள்ளி தீவிபத்தின்போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்,தற்போது தமிழ்நாடு மின்வாரிய தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்த தீவிபத்தில் தப்பிப் பிழைத்த குழந்தைகளுக்கு மீண்டும் பள்ளிக்குச் செல்ல உதவியது, வழக்கு விசாரணைகளின்போது உடனிருந்து ஆதரவு தந்தது எனப் பல்வேறு விதத்திலும் உதவிய ராதாகிருஷ்ணன், தன்னைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும், என ஜெனிபர் படித்து, ஜெயித்துக் காட்டியிருப்பதைக் கண்டு, பெருமை தெரிவித்துள்ளார்.
ஜெனிபரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், அவரோடு எடுத்துக் கொண்டு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் பதிவாகப் பகிர்ந்துள்ளார்.
“அசாத்திய துணிச்சலையும் மனஉறுதியையும் பிரதிபலிக்கும் ஜெனிபரை நேரில் சந்தித்து வாழ்த்தியதை பெருமையாகக் கருதுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் கோர நாடகத்தை நேரில் கண்டவர் அவர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே அந்தத் துயர சம்பவத்தை நேரில் பார்த்த எனக்கு, இன்று அவரை அவரது சகோதரருடன் நேரில் சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
ஏராளமான சவால்களுக்கு மத்தியில், தனது கல்வியை விடாமுயற்சியோடும் குறிக்கோளோடும் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, தற்போது மதிப்புமிக்க தமிழக ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநராக (Assistant Director of Panchayats) பணியிடத்தை ஜெனிபர் பெற்றுள்ளார்.
துன்பங்கள் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை.. இதற்கு ஜெனிபரின் கதை நல்லதொரு உதாரணம். மக்கள் சேவையில் ஒரு நிறைவான வாழ்க்கையைப் பெறவும், தனது பணியின் மூலம் சமூகத்திற்குப் பங்களித்து அனைத்து வெற்றிகளையும் குவிக்கவும் ஜெனிபருக்கு எனது வாழ்த்துகள்,” என இவ்வாறு அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

