2.5 பில்லியன் டாலர் முதலீட்டில் நிறுவன செயற்கை நுண்ணறிவு வணிகத்தில் நுழையும் Microsoft
இந்த முயற்சி வெறும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் துறைசார் அன்றாடப் பணி ஓட்டத்தில் ஏஐ-யை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட், 2.5 பில்லியன் டாலர் முதலீட்டு ஆதரவுடன் 'மைக்ரோசாப்ட் ஃபிரான்டியர் கம்பெனி' (Microsoft Frontier Company) என்ற புதிய வணிகத்தைத் தொடங்கியுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவுப் பொறியியலைத் தொழில் நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம், நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை மிகவும் திறம்படப் பயன்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வணிகங்கள் செயற்கை நுண்ணறிவைச் சோதித்துப் பார்ப்பதிலிருந்து, தங்களின் தரவுகளையும், அறிவுசார் சொத்துக்களையும் பாதுகாக்கும் அதே வேளையில் கணக்கிடக்கூடிய பலன்களைக் கோரும் நிலைக்கு வளர்ந்து வருகிறது.
இந்த புதிய பிரிவின் கீழ், 6,000 தொழில் துறை நிபுணர்கள் மற்றும் ஏஐ பொறியாளர்கள் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்குள்ளேயே பணியமர்த்தப்பட்டு, ஏஐ அமைப்புகளை இணைந்து வடிவமைத்து, செயல்படுத்தி, தொடர்ந்து மேம்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்த முயற்சி வெறும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள், முடிவெடுக்கும் செயல்முறைகள் மற்றும் துறைசார் அன்றாடப் பணி ஓட்டத்தில் ஏஐ-யை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் கமர்ஷியல் பிசினஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜட்சன் அல்தாஃப் கூறுகையில்,
“வாடிக்கையாளர்கள் ஏஐ பயன்பாட்டின் ஆரம்ப கட்டத்தைத் தாண்டிவிட்டனர். நிறுவனங்களின் தனிப்பட்ட தரவுகள், நிபுணத்துவம், ஒர்க்ஃப்ளோ மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் காலப்போக்கில் மேலும் மதிப்பை உருவாக்கும் வகையில் ஒரு ‘Intelligence Platform’ அவசியமாகிறது. அதேசமயம், ஏஐ அமைப்புகளை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும், பாதுகாக்கவும், முதலீட்டின் பலன்களை மதிப்பிடவும் நம்பகமான தளம் தேவைப்படுகிறது,” என்றார்.
தற்போது ஏஐ பயன்பாட்டின் முதல் அலை பெரும்பாலும் சாட்பாட்கள் மற்றும் டிஜிட்டல் உதவியாளர்கள் போன்ற ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை மையமாகக் கொண்டிருந்தாலும், நிறுவனங்கள் இப்போது ஏஐ-யை நேரடியாக வணிக செயல்முறைகளில் இணைக்க விரும்புகின்றன. இதற்காக ஏஐ மாதிரிகளை நிறுவனங்களின் சொந்த தரவுகள், தொழில்துறை அனுபவம் மற்றும் செயல்பாட்டு அறிவுடன் இணைப்பதோடு, வலுவான நிர்வாக மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
‘ஃபிராண்ட்டியர் கம்பெனி’ அணுகுமுறையின் முக்கிய அம்சம், ஏஐ அமல்படுத்தலை ஒருமுறை மேற்கொள்ளப்படும் திட்டமாகக் கருதாமல், தொடர்ந்து மேம்படுத்தப்படும் செயல்முறையாக மாற்றுவதாகும். இதற்கான உதாரணமாக, லண்டன் பங்குச் சந்தை பறிமாற்ற குழுமத்துடன் (London Stock Exchange Group) இணைந்து அதன் LSEG Workspace தளத்தில் ஏஐ-யை ஒருங்கிணைத்ததாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிதித்துறை வல்லுநர்கள் கட்டமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்படாத நிதித் தரவுகளின் மீது சிக்கலான கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெற முடிகிறது. வாடிக்கையாளர் கருத்துகள் மற்றும் நடைமுறை பயன்பாடுகளின் அடிப்படையில் இந்த அமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், லேண்ட் ஓ லேக்ஸ், யுனிலீவர் மற்றும் நோவோ நார்டிஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏற்கனவே இந்த அணுகுமுறையை பயன்படுத்தி வருகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களின் பாதுகாப்பு இந்த முயற்சியின் மையக் கருத்தாக இருக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அல்தோஃப்,
“வாடிக்கையாளரின் அறிவுசார் திறன் முழுமையாக பாதுகாக்கப்படும். அவர்களின் தரவுகள், அறிவுசார் சொத்துகள் அல்லது போட்டியாளர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்தும் அம்சங்கள், அவர்களுக்கே பாதகமாக மாறும் வகையில் ஏஐ மாதிரிகளை பயிற்றுவிக்க பயன்படுத்தப்படாது,” என்று தெரிவித்தார்.
மேலும், வாடிக்கையாளர்கள் ஒரே ஏஐ வழங்குநரிடம் கட்டுப்படாமல், ஓபன் ஏஐ, ஆந்த்ரோபிக் , மைக்ரோசாஃப்ட் ஏஐ, Open Source திட்டங்கள் மற்றும் துறைசார் சிறப்பு ஏஐ மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களில் இருந்து தங்களுக்கு ஏற்றவற்றை தேர்வு செய்ய முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பல்வேறு மாதிரி அணுகுமுறை நிறுவனங்களுக்கு தங்களது தரவுகள் மற்றும் அறிவின் மீதான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஏற்ற ஏஐ அமைப்பை பயன்படுத்தும் வசதியை வழங்கும், என மைக்ரோசாஃப்ட் நம்புகிறது.
நிறுவனங்களுக்கான ஏஐ சேவை சந்தையில் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமேசான் வெப் சர்வீசஸ் தனது வாடிக்கையாளர்களுக்கான ஏஐ பயன்பாடுகளை உருவாக்க உதவும் வகையில் முன்னணி பொறியியல் அமைப்பில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
அதேபோல், பலாந்திர் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்களும் பொறியியல் சார்ந்த ஏஐ ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன. இதேவேளை, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஏஐ பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பொறுப்பான செயல்பாட்டை வலியுறுத்தும் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த புதிய ‘ஃபிராண்ட்டியர் கம்பெனி’ பிரிவின் தலைவராக ரோட்ரிகோ கீடே லிமா நியமிக்கப்பட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தை நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஆழமாக ஒருங்கிணைத்து, தொடர்ந்து மதிப்பை உருவாக்கும் அடுத்த கட்ட வளர்ச்சியை முன்னெடுப்பதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.

