ரூ.34,723 கோடியில் 52 ஒப்பந்தங்கள்: 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசின் முதலீட்டாளர்கள் மாநாடு!
74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு கோயம்புத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது."
கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் அல்ட்ரா டெக் நிறுவனம், கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா நிறுவனம், கிருஷ்ணகிரியில் மின் வாகனங்கள் ஆலையை டிவிஎஸ் மோடார் நிறுவனமும் ஆலைகளை நிறுவ இருக்கின்றன. இதற்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக டால்மியா நிறுவனம் 2600 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. மேலும், டால்மியா ஆலையால் மட்டும் 3950 வேலை வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.
வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு ரூ.485 கோடியில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. கோவையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளது. 485 கோடி மதிப்பீட்டில் துவங்கப்படும் வான்வெளி நிறுவனம் மூலம்1 960 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டி.வி.எஸ்., டால்மியா பாரத் கிரீன் விஷன் லிமிட்டெட், அதானி எண்டர்பிரைசஸ், ஷெல் இந்தியா மார்க்கெட்ஸ், மில்கி மிஸ்ட், ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டெட், அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிட்டெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் தகவல் தரவு மையம், மின் வாகன தயாரிப்பு, சிமெண்ட் உற்பத்தி, தொழிற்பூங்கா, ஜவுளி உற்பத்தி, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆகியவை தொடங்குவதற்கு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதே நிகழ்ச்சியில் மேலும் பணிகள் முடிக்கப்பட்ட 10 நிறுவனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3,928 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள 10 நிறுவனங்கள் மூலம் 3,944 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இன்றைய நிகழ்வில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 புதிய நிறுவனங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
"திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மூன்று முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தபட்டுள்ளது. தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு விரைவில் எட்டப்படும்," என்று தெரிவித்தார்.