‘தையல் இல்லா அறுவை சிகிச்சை’ - அகமதாபாத் ஸ்டார்ட்-அப்’பின் அசாத்திய மருத்துவப் புரட்சி!
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு காப்புரிமை பெற்ற ‘ஷிரா மைக்ரோவாஸ்குலர் கிளாம்ப்’ என்ற இந்தக் கருவி, நுண் ரத்த நாள அறுவை சிகிச்சையை மிகவும் எளிமையாக்குகிறது.
நூடுல்ஸை விடவும் மெல்லிய இரண்டு ரத்த நாளங்களை ஒன்றாக இணைப்பது என்பது மருத்துவ உலகிலேயே மிகக் கடினமான, சவாலான அறுவை சிகிச்சைகளில் ஒன்றாகும். இதனை துல்லியமாகச் செய்யக்கூடிய திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகக் குறைவாகவே இருப்பதால், உலகளவில் பல நோயாளிகள் தங்களது கை, கால்களை, ஏன் உயிரையே இழக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையை மாற்றி, பல உயிர்களையும் உறுப்புகளையும் காப்பாற்றக் களமிறங்கியுள்ளது அகமதாபாத்தைச் சேர்ந்த ‘ஷிரா மெட்டெக்’ (Shira Medtech) என்ற மருத்துவக் கருவி ஸ்டார்ட்அப் நிறுவனம்.
ரத்த நாளங்களை மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் இணைக்கக்கூடிய, குறைந்த விலையிலான, உடலுக்குள் பொருத்தக்கூடிய அதிநவீனக் கருவி ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. Sutureless microvascular anastomosis எனப்படும் தையல்களே இல்லாத இந்த நவீன தொழில்நுட்பம், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத கிராமப்புற மருத்துவமனைகளிலும் எளிதாக அறுவை சிகிச்சை செய்ய வழிவகுப்பதுடன், மருத்துவக் கருவிகள் இல்லாததால் ஏற்படும் உறுப்பு துண்டிப்புகளையும் முற்றிலும் தடுக்க உதவுகிறது.
இதன் பின்னணியில் இருக்கும் சவால் மிகவும் பெரியது. நுண் ரத்த நாள அறுவை சிகிச்சை என்பது துண்டிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த இரண்டு ரத்த நாளங்களின் முனைகளையும் மீண்டும் இணைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் மிகவும் சிக்கலான ஒரு செயல்முறையாகும். இந்தத் துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இதன் கடினமான கற்றல் முறை காரணமாக பல இளம் மருத்துவர்கள் பாதியிலேயே இந்தத் துறையை விட்டு விலகிவிடுகின்றனர்.
ஒரு முந்தைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 கோடி மக்கள் மாற்றுத் திறனாளிகளாக வாழ்கிறார்கள். இதில் பலருக்கு விபத்துகளுக்குப் பிறகு கை, கால்கள் துண்டிக்கப்பட்டதுதான் காரணம் என்பதால், இந்த சிக்கலுக்கான தீர்வு மிக அவசியமான ஒன்றாகிறது.
இந்த மாபெரும் சவாலுக்குத்தான் கடந்த சில ஆண்டுகளாக ஷிரா மெட்டெக் நிறுவனம் தீர்வு கண்டு வருகிறது.

அதிநவீன மருத்துவக் கருவி
சென்னை ஐஐடி பட்டதாரியான ஆனந்த் பரிக் என்பவரால் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2018-ஆம் ஆண்டு ஷிரா கிளாம்ப் என்ற அதிநவீன மருத்துவக் கருவியை உருவாக்கி, மருத்துவர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
இந்த நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்புதான் இந்த மருத்துவப் புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்தது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு காப்புரிமை பெற்ற 'ஷிரா மைக்ரோவாஸ்குலர் கிளாம்ப்' என்ற இந்தக் கருவி, நுண் ரத்த நாள அறுவை சிகிச்சையை மிகவும் எளிமையாக்குகிறது.
இதன் மூலம், குறைவான அனுபவம் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூடப் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சீரமைப்பு மற்றும் உறுப்பு துண்டிப்பைத் தடுக்கும் பிரத்தியேக அறுவை சிகிச்சைகளைப் பாதுகாப்பாகச் செய்ய முடிகிறது.
நமது சுண்டு விரல் நகத்தின் அளவே இருக்கும் இந்தக் குட்டி கருவி, ரத்த நாளங்களின் முனைகளைத் திறந்து வைப்பதுடன், தையல் போடும் இடத்தை மருத்துவர்கள் தெளிவாகப் பார்க்கவும் உதவுகிறது. இது திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, பாரம்பரிய முறையை விட அறுவை சிகிச்சையை வேகமாகவும் நம்பகமானதாகவும் மாற்றுகிறது.
ஆனால், இந்நிறுவனத்தின் தற்போதைய லட்சியம் இதையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுள்ளது. அறுவை சிகிச்சையில் இருந்து ‘தையல்’ என்ற வார்த்தையையே முற்றிலும் நீக்குவதுதான் அது.
ரத்த நாளங்களை இணைப்பதில் தையல்களின் தேவையை முற்றிலும் இல்லாதொழிக்கும் தயாரிப்புகளை இந்நிறுவனம் தீவிரமாக உருவாக்கி வருகிறது.
தற்போது கவனம் பெற்றுள்ள இவர்களது புதிய தயாரிப்பு, தையல்களே இல்லாத அனஸ்டமோசிஸ் முறைக்கான குறைந்த விலையிலான, உடலுக்குள் பொருத்தக்கூடிய ஒரு தீர்வாக அமையவுள்ளது.
ஒரு மைக்ரோஸ்கோப் வழியே பார்த்துக்கொண்டு கைகளால் ரத்த நாளங்களைத் தைப்பது மிகவும் மெதுவான மற்றும் சவாலான காரியம். எனவே, தையல்களே இல்லாத ஒரு நம்பகமான அணுகுமுறை அறுவை சிகிச்சை நேரத்தைக் கணிசமாக குறைக்கும், நிபுணத்துவத்திற்கான தடையை உடைக்கும், மேலும், சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்கள் இல்லாத சிறிய மருத்துவமனைகளிலும் சிறந்த மருத்துவ முடிவுகளைத் தரும்.
குவியும் அங்கீகாரம்
இந்த அசாத்திய முயற்சிக்கு இந்திய அளவில் பெரும் அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. இந்திய அரசு, பயோடெக்னாலஜி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, குஜராத் அரசு, டாடா ட்ரஸ்ட்ஸ், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் டைட்டன் நிறுவனம் ஆகியவற்றின் பாராட்டுக்களையும் அங்கீகாரங்களையும் ஷிரா மெட்டெக் பெற்றுள்ளது.
மேலும், BIRAC பயோடெக்னாலஜி இக்னிஷன் இன்குபேட்டரின் ஆதரவைப் பெற்ற இந்நிறுவனம், மதிப்புமிக்க காந்திய இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர் விருதையும் வென்றுள்ளது.
இவர்களது இந்த கண்டுபிடிப்பு அண்மையிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய பயோடெக் இன்குபேட்டர்களில் ஒன்றான சி-கேம்ப் நடத்திய, நாட்டின் மிக மதிப்புமிக்க தேசிய பயோ தொழில்முனைவோர் போட்டி 2025 நிகழ்வில் இந்த ஐடியா சிறந்த வெற்றியாளர்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் மருத்துவக் களப்பணிகள் சர்வதேச அளவில் சக மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்படும் மருத்துவ இதழ்களிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இவர்களது தயாரிப்புகள் எல்லைகளைக் கடந்து மலேசியாவின் எம்டிஏ அங்கீகாரத்தைப் பெற்று, அங்குள்ள ஒரு பிரத்தியேக விநியோகஸ்தர் மூலம் மலேசிய மருத்துவமனைகளிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
அனஸ்டமோசிஸ் (Anastomosis) என்பது உடலில் உள்ள இரண்டு கட்டமைப்புகளை அறுவை சிகிச்சை மூலம் ஒன்றாக இணைப்பதாகும். நுண் ரத்த நாள அறுவை சிகிச்சையில், விபத்து காயம், புற்றுநோய் கட்டி அகற்றம் அல்லது சீரமைப்பு சிகிச்சைக்குப் பிறகு, இரத்த ஓட்டத்தை மீண்டும் சீராக்குவதற்காக இரண்டு மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட அசாத்திய மெல்லிய ரத்த நாளங்கள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன.
இதன் சவாலே அதன் அளவில்தான் உள்ளது. ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் மைக்ரோஸ்கோப் வழியே உற்றுப் பார்த்துக்கொண்டு, மிக மிக மெல்லிய நூல்களைக் கொண்டு அந்த ரத்த நாளங்களின் ஓரங்களில் வரிசையாகத் தையல்களைப் போட வேண்டும். இதில் சிறிய தவறு நடந்தால் கூட ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படலாம் அல்லது கசிவு ஏற்படலாம். இது ஒட்டுமொத்த அறுவை சிகிச்சையையும் பாழாக்கி, மோசமான சூழ்நிலையில் நோயாளியின் கைகள் அல்லது கால்களையே இழக்கச் செய்துவிடும்.
அதனால்தான் இந்தத் துறையில் கருவிகளின் தரம் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. ரத்த நாளங்களை அசையாமல் நிலையாகப் பிடித்துக் கொள்ளும், அவற்றை விரிந்த நிலையில் வைக்கும் அல்லது தையல்களின் தேவையையே மாற்றும் எந்தவொரு கருவியும், அறுவை சிகிச்சை தோல்வியடைவதற்கான வாய்ப்பைக் குறைப்பதுடன், மணிக்கணக்கில் நீடிக்கும் இந்தச் சிகிச்சை நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது.
எதிர்காலப் பாதை
ஷிரா மெட்டெக் நிறுவனத்தின் எதிர்காலப் பாதை, இந்த தயாரிப்பின் மருத்துவ ரீதியான சரிபார்ப்பு மற்றும் நுகர்வோருக்கான எளிதான அணுகல் ஆகியவற்றின் மூலமாகவே கட்டமைக்கப்படவுள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த பெரிய மருத்துவர்களின் கைகளில் மட்டுமன்றி, சாதாரண அறுவை சிகிச்சை அரங்குகளிலும் தையல்களே இல்லாத இந்தச் சாதனம் நம்பகத்தன்மையுடன் செயல்படும்போது, அது யாருக்கு, எங்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்ற அணுகுமுறையையே மாற்றி அமைக்கும்.
ஏற்கெனவே சந்தையில் நிலவும் வரவேற்பு, தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச அளவில் பரவி வரும் சந்தை ஆகியவற்றின் பின்னணியில், இத்துறையின் அடுத்த மாபெரும் பாய்ச்சல் என்பது மருத்துவ முறையை மேலும் சிக்கலாக்குவது அல்ல, மாறாக அதன் சிக்கலைக் குறைப்பதுதான் என்பதை இந்நிறுவனம் தீர்க்கமாக நம்புகிறது.
இதன் மூலம், அதிக கட்டணம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாததால் இதுநாள் வரை இந்த அதிநவீன சிகிச்சையை வழங்க முடியாமல் தவித்த பல்லாயிரக்கணக்கான நடுத்தர மருத்துவமனைகளுக்கும் இந்த உயர் சிகிச்சை எளிதாகக் கிடைக்கப் போவது உறுதி.
Edited by Induja Raghunathan

