நடிகர், தொழில்முனைவர், ஓவியர்: பன்முகம் கொண்ட பாண்டுவின் வாழ்க்கை சொல்லும் பாடம்!
நகைச்சுவை மற்றும் குணாச்சித்திர நடிகர், பாடகர், ஓவியர், தொழில்முனைவோர் என பன்முகத் திறமையாளராக வலம் வந்த நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். தனித்துவமான உடல்மொழி மூலம் சினிமாவில் முத்திரை பதித்த இவர், அதிமுக கொடியை வடிவமைத்தவர்களில் முக்கியமானவரும்கூட.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் நடிகர் பாண்டு. தனித்துவமான தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். நடிகர். நகைச்சுவை பேச்சாளர், ஓவியர், தொழில் முனைவோர் என பலதளங்களில் வெற்றியாளராக பயணைத்த பாண்டு, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
74 வயதான பாண்டு, கொரோனா பாதிப்புக் காரணமாக கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சமீபகாலமாக கொரோனா தொற்றின் காரணமாக திரைப் பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த வாரம் பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த் கொரோனா தொற்றைத் தொடர்ந்து மாரடைப்பால் காலமானார். இப்போது நடிகர் பாண்டுவின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான நடிகர்
நடிகர் பாண்டுவின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆகும். 1947ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி பிறந்த இவரது சகோதரர் இடிச்சப்புளி செல்வராசுவும் நகைச்சுவை நடிகர் தான். 1970ம் ஆண்டு மாணவர் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் பாண்டு.
ஆனால் 1981ம் ஆண்டு வெளியான ’கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சுமார் 40 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
நாட்டாமை, காலமெல்லாம் காதல் வாழ்க, சின்னத்தம்பி, காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பில் போன்ற படங்களில் பாண்டுவின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் பேச்சுமொழியால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிற்கும் பேர் போனவர் பாண்டு. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் 'இந்த நிலை மாறும்'.
திரைப்படங்கள் மட்டுமின்றி தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலுல் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் பாராட்டுகளைப் பெற்றவர்.
தொழில் முனைவோராக வெற்றி
ஓவியம் வரையும் திறமை பெற்றவரான பாண்டு, ஓவியக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். தென்னிந்தியாவில் ஓவியத்தில் ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் வாங்கிய ஒரே நபர் இவர் தான். தனது ஓவியம் மற்றும் கற்பனைத் திறனை வைத்து கேபிடல் லெட்டர்ஸ் (Capital letters) என்ற பெயர் பலகைகளை வடிவமைக்கும் நிறுவனத்தை சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பாண்டு, மிகச் சிறந்த தொழில் முனைவோராகவும் வலம் வந்தார்.
நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்தவர் இவர் தான்.
“மெட்டல்ல லெட்டரிங் போர்டு வைக்கிறதை முதன்முதலா நான்தான் சென்னையில அறிமுகம் செஞ்சேன். நந்தனம் பெரியார் கட்டிடத்தில் மின்னும் உலோக எழுத்துக்கள் நான் வடிவமைத்தவை தான். அதன் பிறகு நிறைய ஆர்டர்கள் எனக்குக் கிடைச்சுது. ’எழுத்துன்னா அது பாண்டுதான்’னு நல்ல பேர் வாங்கினேன்,'' என்ப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பாண்டு.
இவரது சகோதரர் 'இடிச்சபுளி' செல்வராஜ், நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவர் மூலமாக எம்.ஜி.ஆருக்கு அறிமுகமானார் பாண்டு. அதன் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த 'குமரிக்கோட்டம்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுத்தார்.
1973ல் கடும் எதிர்ப்புகளுக்கிடையே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் வெளியான போது, எம்ஜிஆரின் போஸ்டரை ஒட்ட, பேனரை வைக்க முடியாத நிலை நிலவியது. அப்போது புதிய விளம்பர உத்தியாக பாண்டு வடிவமைத்ததுதான் வீடுதோறும் விநியோகிக்கப்படும் டோர் ஸ்லிப் எனப்படும் சிறிய வகையிலான போஸ்டர். அப்போதிருந்து இப்போது வரை இது மிகச் சிறந்த விளம்பர உத்தியாக இருந்து வருகிறது.
திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் தொடங்கியபோது, ஓவியராக அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் பாண்டுதான்.
எம்.ஜி.ஆர். கேட்டு கொண்டதற்கு இணங்க இரவில் ஒரு மணி நேரத்திலேயே அதிமுக கொடியை வடிவமைத்துக் கொடுத்ததாக தனது எல்லா பேட்டிகளிலும் பெருமையுடன் பாண்டு குறிப்பிடுவது வழக்கம்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தற்போதைய சின்னமான குடை, கல்லூரி மாணவராக இருந்த போது பாண்டு வரைந்து கொடுத்தது ஆகும். இவை மட்டுமின்றி, சன் தொலைக்காட்சியின் சின்னம் உள்பட 200க்கும் மேற்பட்ட சின்னங்களை பல நிறுவனங்களுக்கு வடிவமைத்து கொடுத்திருக்கிறார். ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்ட பாண்டு, இந்த சின்னங்கள் வடிவமைப்பதை அதிகாலை 4-4.30 மணிக்கு மட்டுமே செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பாண்டுவின் மனைவி பெயர் அமுதா. இந்தத் தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு, பிண்டு என்ற மூன்று மகன்கள் உள்ளனர். தற்போது பாண்டுவின் கேபிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை அவரது மகன்கள் தான் நிர்வகித்து வருகின்றனர்.
திரைத்துறையில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக எப்போதுமே இன்னொரு தொழிலையும் தொடங்குவது வழக்கம் தான். ஆனால் பெரும்பாலும் அவை உணவகங்கள், ஜவுளி கடைகள் அல்லது ரியல் எஸ்டேட் போன்றவையாகத்தான் இருக்கும். ஆனால் பாண்டு இவர்களில் இருந்து வேறுபட்டு, ஒருபுறம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்துக் கொண்டே, தனது ஓவியம் வரையும் திறமை வைத்து பெயர்ப் பலகை வரையும் தொழிலிலும் வெற்றியாளராக வலம் வந்துள்ளார்.
‘ஒரு திறமையில் மட்டுமே கவனம் செலுத்தி அதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மனமிருந்தால், உரிய முயற்சிகள் இருந்தால் நம்மிடம் உள்ள எல்லா திறமைகளிலும் வருமானத்தையும், வெற்றியையும் வசமாக்க முடியும்’ என நிரூபித்துக் காட்டியுள்ளார் பாண்டு.
நடிப்பு மட்டுமின்றி ஓவியர், தொழில் முனைவோர் என்ற பன்முகத் திறமையாளராக பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்த பாண்டு, தனது படைப்புகளால் எப்போதும் மக்கள் மனதில் வாழ்வார் என்பதில் சந்தேகமேயில்லை.