அக்னிகுல்–ICEYE கூட்டணி: இந்தியாவில் ரேடார் செயற்கைக்கோள் திறனை உருவாக்க ஆய்வு!
இந்த முன்மொழியப்பட்ட கூட்டணி, செயற்கைக்கோள் உற்பத்தி, ஏவுதல் சேவைகள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான உளவுத்துறை திறன்களில் இந்தியாவின் உள்நாட்டு திறன்களை வலுப்படுத்துவதோடு, வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளின் மீதான சார்பைக் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் ஃபின்லாந்தைச் சேர்ந்த செயற்கைக்கோள் இயக்குநரான ICEYE ஆகியவை, இந்தியாவில் இருந்து செயற்கை திறப்புக் கதிர்வீச்சு ரேடார் (SAR) அடிப்படையிலான பூமி கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குதல், ஏவுதல் மற்றும் இயக்குதல் தொடர்பாக ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
இந்த முன்மொழியப்பட்ட கூட்டணி, செயற்கைக்கோள் உற்பத்தி, ஏவுதல் சேவைகள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான உளவுத்துறை திறன்களில் இந்தியாவின் உள்நாட்டு திறன்களை வலுப்படுத்துவதோடு, வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளின் மீதான சார்பைக் குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் கீழ், இந்தியாவில் SAR செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை ICEYE ஆராயவுள்ளது. அதேவேளையில், அக்னிகுல் தனது உள்நாட்டு ஏவுதல் சேவைகளை வழங்கும். மேலும், செயற்கைக்கோள் உற்பத்தி, ஏவுதல் மற்றும் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் நிலையான மாதிரியை உருவாக்கி, நீண்டகால திட்டங்கள் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்குப் பயன்படுத்தும் வழிகளையும் இரு நிறுவனங்களும் ஆய்வு செய்ய உள்ளன.
அக்னிகுல் காஸ்மோஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்,
“இதற்கு முன்பு இந்தியாவில் தனியார் துறையில் ஒரு செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்கி ஏவுவது என்பது பெரும்பாலும் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து, நமது நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லாத காலக்கெடுக்களை காத்திருப்பதையே குறித்தது. இந்த கூட்டணி அந்த நிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேரிடர் மீட்பு, முக்கிய பகுதிகள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பயன்பாடுகள் தேசிய முன்னுரிமைகளாக உள்ளன,” என்றார்.
ஃபின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ICEYE, உலகின் மிகப்பெரிய SAR செயற்கைக்கோள் கூட்டமைப்புகளில் ஒன்றை இயக்கி வருகிறது. மேலும், பல ஐரோப்பிய அரசுகளுக்கு சுயாட்சி செயற்கைக்கோள் திறன்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
ICEYE நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரஃபால் மோட்ர்ஸ்வ்ஸ்கி கூறுகையில்,
“சுயாட்சி உளவுத்துறை திறன்களுக்கான தேவை உலகளவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தையாக உள்ளது. வேகம், நம்பகத்தன்மை மற்றும் நீண்டகால செயல்பாட்டை மையமாகக் கொண்ட கூட்டாண்மைகள் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோன்ற ஒரு கூட்டுறவையே அக்னிகுலுடன் உருவாக்க விரும்புகிறோம்,” என்றார்.
2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe) அமைப்பு உருவாக்கப்பட்டதன் மூலம் தனியார் துறையின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.
அக்னிகுல் மற்றும் ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் இந்த மாற்றங்களால் முன்னேறியுள்ளன. அதேசமயம், கட்டமைப்புகள், காலநிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்பு தேவைகள் அதிகரித்துள்ளதால், பூமி கண்காணிப்பு துறை வேகமாக வளர்ந்து வரும் வணிக விண்வெளி பிரிவாக மாறியுள்ளது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அக்னிகுல் காஸ்மோஸ், IIT Madras-இல் வளர்க்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்திலிருந்து 2024-ஆம் ஆண்டு தனது ‘அக்னிபான் SOrTeD’ முன்னோடி ராக்கெட்டின் முதல் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு, ஒரே துண்டாக 3D அச்சிடப்பட்ட அரை-கிரையோஜெனிக் இயந்திரத்தின் திறனை சோதித்தது.

