‘டிஜிட்டல் வாழ்க்கையின் மையமாக AI ஏஜென்ட்கள்’ - Qualcomm சிஇஒ கிறிஸ்டியானோ அமோன் கணிப்பு!
ஏஐ தற்போது ஒரு உதவிக் கருவியாக இருந்து, பயனர்களின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றை பல கட்டப் பணிகளாகப் பிரித்து, தேவையான டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி குறைந்த மனித மேற்பார்வையுடன் பணிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட அமைப்பாக மாறி வருவதாக அவர் விளக்கினார்.
தைவானின் தைபேயில் நடைபெற்ற உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்காட்சியான கம்ப்யூடெக்ஸ் 2026 நிகழ்வில், எதிர்காலத்தில் தன்னாட்சி திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட்கள் மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையின் மையமாக மாறும் என்றும், தற்போது வகித்து வரும் ஸ்மார்ட்போன்களின் முக்கியத்துவம் படிப்படியாக குறையும் என்றும் குவால்காம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ ஆர்.அமோன் தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“2026 என்பது AI ஏஜென்ட்களின் ஆண்டாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு இனி கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தாண்டி, பயனர்களுக்காக நேரடியாக செயல்படும் நிலைக்கு வளர்ந்து வருகிறது,” என்றார்.
ஏஐ தற்போது ஒரு உதவிக் கருவியாக இருந்து, பயனர்களின் நோக்கங்களைப் புரிந்து கொண்டு, அவற்றை பல கட்டப் பணிகளாகப் பிரித்து, தேவையான டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி குறைந்த மனித மேற்பார்வையுடன் பணிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட அமைப்பாக மாறி வருவதாக அவர் விளக்கினார்.
குவால்காம் கருத்துப்படி, இந்த 'ஏஜென்டிக் ஏஐ' தொழில்நுட்பம் வழக்கமான ஜெனரேட்டிவ் ஏஐ-யிலிருந்து மாறுபட்டது. இது வெறும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, ஒரு டிஜிட்டல் பணியாளரைப் போல பல கட்ட பணிகளை சுயமாக மேற்கொள்ளும் திறன் பெற்றதாகும்.
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தேவைகளில் பயனர்களுக்கு உதவும் இந்த ஏஐ ஏஜென்ட்கள், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக உருவெடுத்து வருவதாகவும், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அமோன் கூறினார்.
“இன்று அனைவரின் டிஜிட்டல் வாழ்க்கையின் மையமாக ஸ்மார்ட்போன் உள்ளது. அனைத்தும் தொலைபேசியை சுற்றியே இயங்குகின்றன. ஆனால், எதிர்காலத்தில் ஏஐ ஏஜென்ட்கள்தான் டிஜிட்டல் அனுபவத்தின் மையமாக இருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த ஏஐ ஏஜென்ட்கள் ஒரு குறிப்பிட்ட சாதனம் அல்லது இயங்குதளத்துடன் கட்டுப்படாமல் செயல்படும் என்று கூறிய அவர்,
“ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் என அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களும் AI ஏஜென்ட்களுடன் தொடர்பு கொள்ளும் முனையங்களாக மாறும்,” என்றார்.
இந்த மாற்றம் புதிய தலைமுறை சாதனங்களின் தேவையை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இன்றைய சாதனங்கள் இந்த அனுபவங்களுக்காக வடிவமைக்கப்படவில்லை. ஏஜென்டிக் ஏஐ அன்றாட வாழ்க்கையின் முக்கிய செயல்பாடாக மாறும் போது, குறிப்பாக தனிப்பட்ட கணினி பயன்பாட்டில், முற்றிலும் புதிய வகை சாதனங்கள் தேவைப்படும்,” என்றார்.
சாதனங்களின் மின்சார திறன் (Power Efficiency) மிக முக்கியமான அம்சமாக இருக்கும், என வலியுறுத்திய அவர், “ஒரு பயனர் மட்டும் பயன்படுத்தும் போதே தொலைபேசியின் பேட்டரி முழு நாளும் நீடிப்பது சவாலாக உள்ளது. அதே நேரத்தில், பயனரும் ஏஐ ஏஜென்டும் இணைந்து செயல்பட்டால் என்ன ஆகும்? இதற்காக சக்திவாய்ந்த மற்றும் அதிக மின்திறன் கொண்ட செயலி அவசியமாகும்,” என்று கூறினார்.
குவால்காமின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசிய அமோன்,
“டிராகன்ஃப்ளை” என்ற புதிய தயாரிப்பு தளத்தின் அறிமுகத்தை முன்னோட்டமாக வெளியிட்டார். இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும்," என்றும் தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் சிப் வணிகத்தைத் தாண்டி, வாகனத் தொழில்நுட்பம், தனிப்பட்ட கணினிகள், தொழில்துறை IoT மற்றும் எட்ஜ் AI போன்ற அதிவேக வளர்ச்சி துறைகளில் விரிவடைவதே குவால்காமின் நீண்டகாலத் திட்டமாகும்.
குறிப்பாக, ஸ்னாப்டிராகன் டிஜிட்டல் சேசிஸ் தளத்தின் மூலம் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனத் துறையில் குவால்காம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் துறையில் நிறுவனத்தின் வடிவமைப்பு ஒப்பந்தங்களின் மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. சமீபத்திய காலாண்டில் வாகனப் பிரிவின் வருவாய் மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.
இந்தியாவில், டிஜிட்டல் காக்பிட், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இணைப்பு தீர்வுகளுக்கான குவால்காம் ஆட்டோமொட்டிவ் மாட்யூல்களை உற்பத்தி செய்வதற்காக குவால்காம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
தொழில்துறை நிபுணர்களின் கருத்துப்படி, மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனங்கள், எட்ஜ் ஏஐ மற்றும் தன்னாட்சி ஏஐ ஏஜென்ட்கள் ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் தொழில்நுட்ப உலகை மாற்றக்கூடிய மிகப்பெரிய முன்னேற்றங்களாக இருக்கும். கிளவுட் மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகளிலிருந்து, குறைந்த தாமதம், அதிக தனியுரிமை மற்றும் மேம்பட்ட ஆற்றல் திறன் கொண்ட உள்ளூர் ஏஐ சாதனங்களுக்கான மாற்றம் வேகமெடுத்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொகுப்பு: முத்துகுமார்

