ஐஐடி மெட்ராஸ் Plugzmart ஸ்டார்ட்-அப் முற்றிலும் உள்நாட்டில் தயாரித்துள்ள EV சார்ஜருக்கு ARAI சான்றிதழ்!
பிளக்ஸ்மார்ட் பெற்றிருக்கும் இந்த மத்திய அரசு அங்கிகாரச் சான்றிதழ் இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பு சார்ஜர்களுக்கான உள்கட்டமைப்பை வளர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட் அப் நிறுவனமான 'பிளக்ஸ்மார்ட்' நிறுவனத்தின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார வாகன சார்ஜர் தயாரிப்புக்கு தானியங்கி வாகன ஆராய்ச்சிக் கூட்டமைப்பான ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ARAI என்பது இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகம் மற்றும் வாகனத் தொழில்துறையின் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். மின் வாகன உற்பத்தியும் விற்பனையும் நாட்டில் அதிகரித்து வரும் காரணமாக சார்ஜிங் என்பது பெரிய உள்கட்டமைப்பு வசதியாகும், ஆகவே, பிளக்ஸ்மார்ட் பெற்றிருக்கும் இந்த மத்திய அரசு அங்கிகாரச் சான்றிதழ் இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பு சார்ஜர்களுக்கான உள்கட்டமைப்பை வளர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கடுமையான செயல்பாட்டு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் செயல்திறன் நெறிமுறைகளுக்கு இணங்குவதைக் குறிக்கும் விதமாக Plugzmart-இன் 60kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் தனியுரிம கன்ட்ரோலர் கார்டுக்கான இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தூய்மையான எரிசக்தி மற்றும் போக்குவரத்து தீர்வுகளை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில் திறம்படச் செயல்படுவதும் எளிதில் அனைவருக்கும் கிடைகக் கூடியதுமான EV சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத்துறை அரசின் ஊக்கத்தொகை மற்றும் தனியார் முதலீடுகளால் ஆதரிக்கப்படுகிறது, ஆகவே, முன்னுதாரணமில்லாத வகையில் இந்தத் துறை வளர்ந்து வருகிறது.
இந்த மைல்கல்லின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, Plugzmart இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் சாமிநாதன் கூறும்போது,
“எங்கள் சொந்த கன்ட்ரோலர் கார்டு மூலம், 60kW DC ஃபாஸ்ட் சார்ஜருக்கான ARAI சான்றிதழைப் பெறுவது, எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த மைல்கல் தரம் மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை ஸ்திரப்படுத்துவது மட்டுமல்லாமல், EV சார்ஜிங் துறையில் எங்கள் நிலையை வலுப்படுத்துகிறது. இந்த நிதியாண்டில் பல அற்புதமான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம், இது சந்தையில் எங்கள் இருப்பை மேலும் வலுப்படுத்தும்,” என்றார்.
இது குறித்து மேலும் விரிவாகக் கூறிய Plugzmart இன் இணை நிறுவனர் ராகவேந்திரா ரவிச்சந்திரன், “Plugzmart EV சார்ஜிங் தொடர்பான அனைத்து தயாரிப்புகள் மற்றும் மென்பொருள் சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் இரண்டிலும் எங்களின் தனித்துவமான திறனைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இதை இந்தியாவில் உள்ள வேறு எந்த நிறுவனமும் கோர முடியாது, என்றார்.