ஜீரோ முதலீடு; அதிக லாபம் - தூத்துக்குடி பெண்களின் வாழ்வை மாற்றிய சிறு ஐடியா!
இந்தியா முழுவதும் ஆகாயத்தாமரை என்ற களைச்செடி நீராதாரங்களை காலி செய்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 40 கிராமப்புற பெண்கள் கொண்ட குழு ஒன்று, ஆகாயத்தாமரை தாவரத்தை வைத்து கலைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
இந்தியா முழுவதிலும் ஆகாயத்தாமரை என்ற களைச்செடி நீராதாரங்களை காலி செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் பல ஆறுகள், குளங்களில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரைகள் நீரை வெகுவிரைவில் ஆவியாக்கி பேராபத்தை ஏற்படுத்துகிறது. இதனை அகற்ற முடியாமல் அரசு இயந்திரங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன.
இப்படியான நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 40 கிராமப்புற பெண்கள் கொண்ட குழு ஒன்று, ஆகாயத்தாமரை தாவரத்தையும், தென்னை நார் கயிறு மற்றும் வீணாகும் தேங்காய் சில்லை வைத்து கலைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டுகிறார்கள்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் திறன் மேம்பாட்டு மையத்தின் திட்டத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. அரசு ஒதுக்கிய ரூ.33 லட்சம் நிதியில் பயிற்சி பெற்றுள்ள இந்தப் பெண்கள் இன்று நிலையான வேலைவாய்ப்பை தங்களுக்காக உருவாக்கியுள்ளனர்.
தாமிரபரணி ஆறு, கல்லார், நம்பியார் ஆறு போன்ற நீர்நிலைகளில் இருந்து ஆகாயத்தாமரையை அகற்றி வந்து அதில் ‘ஷாப்பிங் பேக்’, அலங்காரப் பொருட்கள், சிறு கூடைகள், தொப்பி தயாரிக்கிறார்கள். மூலப்பொருளான ஆகாயத்தாமரை இலவசமாக கிடைப்பதால், உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அதிக லாபத்தை அடைய முடிகிறது என்கிறார்கள். தூத்துக்குடி பெண்கள் குழுவின் வெற்றிக்கதையை பார்க்கலாம் வாங்க…

ஆகாயத்தாமரை சேகரிக்கும் பெண்கள்
மூலப்பொருள் விலை பூஜ்ஜியம், லாபம் 100 சதவீதம்!
நம்மிடம் பேசிய ஆகாயத்தாமரை தயாரிப்பு செய்யும், 25 வயதான பெண் குடிசைத் தொழிலாளியான சுஜிதா, இந்தத்தொழில் மூலம் வாழ்வே மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்.
‘‘நாங்கள் மத்திய வன அமைச்சகத்தின் உதவியுடன், கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் தொடர்ச்சியாக ஒரு மாதம் இலவச பயிற்சி பெற்றோம். இந்தப்பயிற்சி வகுப்பில் எங்களுக்கு ஆகாயத்தாமரை என்றால் என்ன, அதை எப்படி நீராதாரங்களில் இருந்து பாதுகாப்பாக சேகரிப்பது, அதை எப்படி உறுதியான நார் போல மாற்றுவது என, கலைப்பொருட்கள் தயாரிப்பு குறித்து கற்றுத்தரப்பட்டது,” என்கிறார்.
இதனைக் கற்றுக்கொண்ட நாங்கள் தற்போது 40 பேராக ஒன்றிணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் உள்ள குளங்களுக்குச் சென்று நாங்களே ஆகாயத்தாமரையை அகற்றுகிறோம். அதனை டெம்போவில் ஏற்றி வந்து, அதில் கிருமிகளை அழிப்பதற்காக மஞ்சள், உப்பு சேர்த்து நீரில் ஊர வைக்கிறோம். அதன் பிறகு, சோலார் உலர்த்தியில் போட்டும், தரையில் வெயிலில் மூன்று நாட்கள் உலர வைத்தும் எடுக்கிறோம். உலர்த்தி எடுத்ததும் ஆகாயத்தாமரை, வாழை நார் போல மிகவும் உறுதித்தன்மையுடன் கயிறு போல மாறிவிடும்.

அதன்பிறகு, வெறும் தர்மாகோலில் வட்ட வடிவில் டேப் சுற்றி அதை அச்சு (Mold) போல தயாரிக்கிறோம். ஒவ்வொரு நார் போல மாற்றப்பட்ட ஆகாயத்தாமரையில் லேசாக தண்ணீர் தெளித்து, இந்த அச்சுக்களில் சுற்றி தான் பொருட்கள் போட்டு வைக்கும் கூடை, Dustbin, அலங்கார பொருட்கள், bowl போன்றவை தயாரித்து வருகிறோம், என விவரமாக தெரிவித்தார்.
ஒரு Laundry Bag மார்க்கெட்டில் 800-900 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு நாளில் ஒரு நபர் 6–7 மணி நேரம் உழைத்தால் ஒரு Laundry Bag தயாரிக்க முடியும், 400 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் போட்டு வைக்கும் கூடை ஒரு நாளில் மூன்று தயாரிக்க முடியும்.
”இதை மார்க்கெட்டில் விற்பனை செய்தால் மொத்தமுமே லாபம் தான். ஏனெனில், ஆகாயத்தாமரை தான் எங்கள் மூலப்பொருள், இது இலவசமாக எங்களுக்குக் கிடைப்பதால் எங்களின் உழைப்பு அப்படியே லாபமாக கிடைக்கிறது. அதிகபட்சமாக எங்கள் செலவு என்று பார்த்தால், ஆகாயத்தாமரையை டெம்போவில் எடுத்து வருவோம் அதுவும் வாரம் இருமுறை என்பதால் பெரிய அளவில் செலவு ஏற்படுவதில்லை,’’ என்கிறார் சுஜிதா.

மேலும், தொடர்ந்த சுஜிதா,
‘‘மக்களிடையே இந்தப் பொருட்களுக்கு தற்போது தேவை அதிகரித்து, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன. மத்திய அரசின் இந்த பயிற்சியால் தற்போது 40 பெண்கள் இணைந்து குடிசைத் தொழில் அமைத்துள்ளோம். மூக்குப்பேரி ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை ஊராட்சியினர் எங்களுக்கு வழங்கியுள்ளதால், வாடகையின்றி அதில் கலைப்பொருட்கள் தயாரித்து வருமானம் ஈட்டி வருகிறோம்.”
இந்த பயிற்சி வகுப்பில் பெரும்பாலும் படிப்பறிவு இல்லாத ஏழை பெண்கள், 10ம் வகுப்பு 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாத பெண்கள் தான் பயிற்சி பெற்றோம். நான் பி.காம் படித்துள்ளேன் இந்தத்தொழிலை குடிசைத்தொழிலாக செய்து பொருட்கள் தயாரித்து, நான் கற்ற கல்வியை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக மார்க்கெட்டிங் செய்து பொருட்களை விற்பனை செய்கிறோம்.
”மற்றவர்களுக்கும் இந்தத்தொழிலை கற்றுக்கொடுத்து வேலைவாய்ப்பு உருவாக்கி வருகிறோம். பெண்களாக வீட்டில் முடங்கிக் கிடக்காமல், கூலி வேலைகளுக்குச் சென்று சிரமத்தை சந்திக்காமல், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் மரியாதையான, லாபகரமான இந்தத்தொழிலை செய்து நாங்களே மேம்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,’’ என்கிறார் சுஜிதா.

வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது!
நம்மிடம் பேசிய மற்றொரு பெண்ணான எல்சி,
‘‘எங்கள் பகுதியில் பலரும் பலவிதமான குடிசைத்தொழில்கள் செய்கிறார்கள், உணவுப்பொருட்கள் உற்பத்தி, ஸ்னாக்ஸ், கயிறு என பல பொருட்கள் தயாரிக்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஆகாயத்தாமரை இலவசமாக கிடைப்பதால் எளிதாக நாங்கள் கலைப்பொருட்கள் தயாரிக்கிறோம்.”
முன்பு கூலி வேலைக்குச் சென்றால் வெறும் 250 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், தற்போது ஆர்டகள் அதிகமாகி வருவதால் தினமும் எப்படியும் 350 முதல் 600 ரூபாய் வரையில் கிடைக்கிறது. ஆர்கானிக் ஸ்டோர்ஸ், திருமண நிகழ்ச்சிகளில் பரிசுப்பொருட்கள் வைக்கவும், பள்ளிகளில் பரிசுப்பொருட்கள் வழங்கவும், துணிகள் போட்டுவைக்கும் Laundry basketஆகவும் ஆர்டர்கள் கிடைப்பதால், தொடர்ச்சியாக நாங்கள் தயாரிப்புகளை செய்து வருகிறோம்.
”எங்களின் பெரிய நம்பிக்கை என்னவென்றால் ஆகாயத்தாமரை தங்குதடையின்றி எங்கள் குளங்களில் பரவிக் கிடைக்கிறது, இதனை நாங்கள் சுத்தம் செய்யச்செய்ய நீராதாரம் சுத்தமாகிறது. இலவச மூலப்பொருளாக கிடைப்பதால் அதிக லாபம் ஈட்ட முடிகிறது,” என்கிறார்.
இன்னமும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நாங்கள் ஆகாயத்தாமரை அகற்றினாலும் எங்களுக்கு போதுமான மூலப்பொருள் கிடைக்கும் என்பதால், இந்தத்தொழில் மூலம் எங்கள் பகுதி பெண்களின் வாழ்வில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. தற்போது, ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு கட்dஇடத்தில் தான் இந்தப்பணிகளை செய்கிறோம், எங்களுக்கு அரசு சோலார் Dryer, பேட்டரியில் இயங்கும் சிறிய வாகனம், கட்டிடம் போன்ற உதவிகளைச் செய்தால் தொழிலை இன்னமும் விரிவுபடுத்த முடியும்,’’ என்கிறார் எல்சி.

தென்னிந்தியா முழுவதிலும் விரிவுபடுத்தப்படும்…
இது குறித்து நம்மிடம் பேசிய, இந்தத்திட்டத்தின் மேலாளர் முனைவர் விக்னேஸ்வரன்,
‘‘மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தின் கீழ் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆகாயத்தாமரையில் கலைப்பொருட்கள் தயாரிக்கும் திட்டம் கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டு, பிப்ரவரியில் பயிற்சி வழங்கப்பட்டு மார்ச் இறுதி முதல் தயாரிப்புக்களை துவங்கியுள்ளனர்.”
விரைவில் இத்திட்டம் தமிழ்நாடு முழுவதிலும் விரிவுபடுத்தப்படும், பின் மற்ற மாநிலங்களில் ஆகாயத்தாமரை, Lantana Camara (உண்ணிச்செடி) போன்ற களைச்செடிகளில் கலைப்பொருட்கள் தயாரிக்கும் பணி துவங்கப்படும், என்கிறார் அவர்.
சிறிய ஐடியா தான், ஆனால் இது சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி பெண்களுக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மாநில அரசும் இது போன்ற திட்டங்களுக்கு கைகொடுத்தால் போதும் தமிழகம் முழுவதிலும் பலரின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

