‘இளம் ஓவியர்களுக்கான தளம்’ - Nativekrea மூலம் நவீன கலையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் மதுரை சண்முகம்!
நவீன ஓவியக் கலையைப் பாதுகாத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக 'நேட்டிவ்கிரியா’ நிறுவனத்தை நடத்தி வருகிறார் சண்முகம்.
இளம் ஓவியர்களின் நவீன ஓவியங்களை கலை ஆர்வலர்களிடம் கொண்டு சேர்த்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ’நேட்டிவ்கிரியா’ (Nativekrea) நிறுவனத்தை நடத்தி வருகிறார் சண்முகம்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில், ஓவியர்கள் கைப்பட வரைந்த, அவர்களது கையொப்பம் இடப்பட்ட ஓவியங்கள் விற்கப்படுகின்றன. சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம், ஆரம்பிக்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில் தோராயமாக ஒன்று முதல் இரண்டு கோடிகள் வரை டர்ன் ஓவர் செய்து வருகிறது.

Nativekrea சண்முகம்
காமிக்ஸ் உருவாக்கிய ஓவிய ஆர்வம்
நவீன ஓவியக் கலைகளைப் பாதுகாத்து, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இந்த ;நேட்டிவ் கிரியா; நிறுவனத்தை ஆரம்பித்தது எப்படி, அதற்கான எதிர்கால வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என்பது பற்றி அதன் நிறுவனர் சண்முகம் கூறுகையில்,
“மதுரை அருகேதான் எனது ஊர். எங்களுடையது விவசாயக் குடும்பம். டிவி, செல்போன் போன்றவற்றின் ஆதிக்கம் இல்லாத, காமிக்ஸ் புத்தகங்களில் காலத்தில் வளர்ந்தவன் நான். காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படித்ததாலேயோ என்னவோ, சிறுவயதில் இருந்தே காமிக்ஸ் கதாபாத்திரங்கள் மற்றும் ஓவியங்கள் மீது எனக்கும் ஆர்வம் அதிகரித்தது."
அதனாலேயே பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பிரிண்டிங் டெக்னாலஜி சேர்ந்து படித்தேன். அதனை படித்து முடித்தவுடன் அத்துறையிலேயே வேலையும் கிடைத்தது. வேலை, குடும்பம் என வாழ்க்கை சென்று கொண்டிருந்தபோதுதான், கொரோனா லாக்டவுன் வந்தது. லாக்டவுன் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில், ஜல்லிக்கட்டு, ஆர்கானிக், விவசாயம், என மக்கள் பழைமையையும், நம் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க போராடியபோது, எனக்கு வித்தியாசமாக ஒரு சிந்தனை உதித்தது. அதுதான் நவீன ஓவியங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது. அதன் தொடர்ச்சியாக நேட்டிவ் ஸ்பேஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தேன், என்று ஆரம்பக்கட்டத்தை பகிர்ந்தார்.

நேட்டிவ் ஸ்பேஸ் டு நேட்டிவ்கிரியா
பூங்கா, வீடுகள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்கள் என தனியார் மற்றும் பொது இடங்களை ஓவியங்கள் மூலம் அழகுப்படுத்தி வடிவமைப்பதுதான் நேட்டிவ் ஸ்பேஸின் வேலை. தனிநபர் தொடங்கி, கார்ப்பரேட் மற்றும் கவர்ன்மெண்ட் ப்ராஜெட்கள் பலவற்றை அப்போதிருந்து இப்போது வரை செய்து வருகிறோம். இந்த நேட்டிவ் ஸ்பேஸில் இருந்து பிறந்ததுதான் நேட்டிவ்கிரியா.
”வளர்ந்து வரும் இளம் ஓவியர்களின் நவீன ஓவியங்களை சந்தைப் படுத்துவது, ஓவிய காதலர்களிடம் அவற்றைக் கொண்டு சேர்ப்பது, இதன் மூலம் அந்த இளம் ஓவியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது போன்றவைதான் நேட்டிவ்கிரியாவின் இலக்கு,” என நேட்டிவ்கிரியா ஆரம்பித்த கதையை விவரிக்கிறார் சண்முகம்.
2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டிவ்கிரிவில் தற்போது ஏழு ஓவியர்கள் உட்பட 15 பேர் வேலை பார்க்கின்றனர். குறைந்தபட்சம் 70 ஆயிரம் ரூபாயில் இருந்து பல லட்சங்களில் இவர்களிடம் ஓவியங்கள் கிடைக்கின்றன.
தென்னிந்திய ஓவியக்கலை மற்றும் ஓவியங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்படியான நிறுவனங்கள் சந்தையில் அவ்வளவாக இல்லை. அதோடு புதிய ஓவியர்களுக்கான வாய்ப்பும், வழிகாட்டலும் குறைவாக உள்ளது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகத்தான் நேட்டிவ்கிரியா செயல்பட்டு வருகிறது. இவர்களது நிறுவனத்தில் இளம் ஓவியர்களின் நவீன ஓவியங்களை மேம்படுத்த மூத்த ஓவியர்கள் உள்ளனர்.

ஓவியர்கள் வரைந்த ஒரிஜினல் காப்பி
வீடுகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் தான் இவர்களின் வாடிக்கையாளர்கள். அதுபற்றி பேசிய சண்முகம்,
“என்னதான் ஏஐ, கிராபிக்ஸ், என தொழில்நுட்பம் வளர்ந்தாலும், இப்போதும் கைகளால் வரையப்பட்ட, ஓவியர்களின் கையொப்பம் இடப்பட்ட ஒரிஜினல் ஓவியங்களுக்கான ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். வேறெந்த நகலும் இல்லாமல், அசல் படைப்புகளின் பிரியர்கள், எங்களிடம் அதிகம் ஓவியங்களை வாங்குகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கு எங்களது ஓவியங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்,” என்கிறார்.
முதல் ஆண்டிலேயே, அதாவது 2022ம் ஆண்டு 2 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டுகளில் புராடக்ட் பிக் எனப்படும் மற்ற வித்தியாசமான கலைகளை அறிமுகப்படுத்தும் வேலைகளைத் தொடங்கி விட்டோம்.
தென்னிந்திய கலைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சிகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் எங்களது டர்ன் ஓவரை 20 கோடியாக உயர்த்துவதுதான் எங்களது இலக்கு, என நம்பிக்கையுடனும், தெளிவான திட்டமிடலுடனும் பேசுகிறார் சண்முகம்.

