‘ஆட்டோ ராணிகள்’ - பெண் ஆட்டோ டிரைவர்களின் போராட்டங்கள், சவால்களை பேசும் டாக்குமெண்ட்ரி!
இந்தியாவிலேயே முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமான ‘வீர பெண்கள் முன்னேற்ற சங்கம்’ தமிழ்நாட்டில் நிறுவி, பெண் ஓட்டுநர்களுக்கெதிரான சவால்களை எதிர்கொண்டு, சம வாய்ப்புக்காகப் போராடும் மோகனா மற்றும் லீலா ஆகியோரின் கதையைப் பேசுகிறது ‘Auto queens’ ஆவணப்படம்.
'ஆட்டோ குயின்ஸ்' (Auto Queens) - இன்ஸ்பிரேஷன் மற்றும் சாதனைகள் என்ற வழக்கமான கதையோட்டத்தில் இருந்து வேறுபட்டு, ஆட்டோ ஓட்டும் பெண்களின் அன்றாட வாழ்க்கை, அவர்களுக்கு இடையேயான நட்பு, கோபம், நகைச்சுவை மற்றும் அக்கறை என பல வேறுபட்ட கோணங்களை எடுத்துக்காட்டி கவனம் ஈர்க்கிறது இந்த ஆவணப்படம்.

'ஆட்டோ குயின்ஸ்' ஆவணப்படத்தில் இருந்து ஒரு காட்சி
வீர பெண்கள் முன்னேற்ற சங்கம்
ஆண்களின் வெற்றியைவிட, பெண்களின் வெற்றி எப்போதுமே ஒருபடி மேலே கொண்டாடப்பட வேண்டியதாகவே உள்ளது. எந்தத் துறையில் அவர்கள் சாதித்தாலும், அது மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக, தடைகளை உடைத்த சாதனைகளாகவே கொண்டாடப்படுகிறது. இது போன்ற ஹீரோயிசம் பேசும் கதைகளைப் பேசும் ஆவணப்படங்களும் நம்மூரில் அதிகம்.
ஆனால், அவற்றில் இருந்து வேறுபட்டு, தனித்துவமான கதை சொல்லலிலும், காட்சிப்படுத்துதலிலும் கவனம் ஈர்த்து, சமூகவலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது, ‘ஆட்டோ குயின்ஸ்’ என்ற ஆவணப்படம்.
ஹெச்.ஸ்ரயந்தி இயக்கிய இந்த ஆவணப்படத்தின் நாயகிகள், விளிம்பு நிலையில் வாழும், ஆட்டோ ஓட்டும் பெண்கள்தான். இந்தியாவின் முதல் பதிவு செய்யப்பட்ட, பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் சங்கமான, ‘வீர பெண்கள் முன்னேற்ற சங்கம்’ (Veera Pengal Munnetra Sangam - VPMS), மற்றும் அதில் உறுப்பினர்களாக உள்ள பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது இந்த ஆவணப்படம்.

ஆட்டோ குயின்ஸ் ஆவணப்படத்தில் இருந்து ஒரு காட்சி
பெண் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
சென்னையில் ஆட்டோ ஓட்டுவதற்கு உரிய உரிமம் மற்றும் முறையான போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். ஆனாலும் இந்த அமைப்பு ஒழுங்குப்படுத்தப்படாத நெட்வொர்க்குகள் மூலம் செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
பெரும்பாலும் ஆண் ஆதிக்கம் உள்ள தொழில்களில் இந்த ஆட்டோ ஓட்டுவதும் ஒன்று. அதனாலேயே ஆட்டோ ஸ்டாண்டுகள் தொடங்கி, தினமும் போக்குவரத்து போலீசார், பயணிகள் மற்றும் சக ஓட்டுநர்களுடன் தங்களது உரிமைக்காக பெண் ஓட்டுநர்கள் போராட வேண்டி இருக்கிறது. இது அவர்களது தொழிலை மிகவும் பாதிக்கிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த வீர பெண்கள் முன்னேற்ற சங்கம். தங்களது தினசரி அவமானங்கள் மற்றும் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும் சிறிய வாட்ஸப் குரூப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக வளர்ந்துள்ளது.
இந்தச் சங்கம் மூலம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்கள், உடல்நலப் பாதிப்பு அல்லது பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அவசர காலங்களில் உதவி போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
ஆட்டோ ஸ்டாண்டுகளில் இருந்து கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப்படும்போது, ஆண் ஓட்டுநர்கள் அல்லது அதிகாரிகளுடனான பிரச்சினைகளின் போது, என பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் தொழில் கண்ணியத்தைக் காக்கவும் இந்தச் சங்கம் அவர்களுக்கு உதவுகிறது.

ஆட்டோ குயின்ஸ் ஆவணப்படக் குழுவினர்
நட்பைப் பேசும் 'ஆட்டோ குயின்ஸ்'
ஆட்டோ குயின்ஸ் ஆவணப்படம், வீர பெண்கள் முன்னேற்றச் சங்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டு பேசுவதாக இருந்தாலும், அச்சங்கத்தின் தலைவர் மோகனசுந்தரி மற்றும் அதன் பொருளாளரான லீலா ராணிக்கு இடையேயான நட்பையும் அழகாகப் பதிவு செய்துள்ளது.
கடற்கரையில் நீண்ட நேரம் செலவிடுவது, அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி பேசுவது, அவர்களின் தற்போதைய போராட்டங்களை விவரிப்பதோடு மட்டுமல்லாமல், தன்னிச்சையாக பாடல்களைப் பாடுவது, புதிய வறுத்த மீன்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் விளையாட்டுத்தனமான நகைச்சுவைகள் என கலவையாக உள்ளது.
இந்த ஆவணப்படம் குறித்து அதன் இயக்குநர் ஸ்ரயந்தி கூறுகையில்,
"சாதாரண மக்களின் மீதான இந்த கவனம் அவசியமானது. இதுபோன்ற படங்களையே நான் எப்போதும் எடுக்க விரும்பினேன். போராட்டக் கதைகளைச் சொல்வதில் பிரச்சனை இல்லை, மாறாக அந்தக் கதைகள் எவ்வளவு குறுகிய முறையில் சொல்லப்பட்டுள்ளன என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது,” என்கிறார்.
மேலும், “பொதுவாக, நாம் பார்க்கக் கிடைக்கும் ஆவணப்படங்கள் மிகவும் தரப்படுத்தப்பட்டவை, நேர்காணல் அடிப்படையிலானவை. சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கையின் துணுக்குகளை நாம் பெறுகிறோம். ஆனால், அவை நமக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை,” எனக் கூறுகிறார் ஸ்ரயந்தி.

போராட்டங்கள் பற்றியதல்ல..
பின் தங்கிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களைப் பற்றிய திரைப்படங்கள், அந்த யதார்த்தங்களில் இருந்து வெகு தொலைவிற்கு சென்று விட்டவர்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதாகவே உள்ளதாகவும், இது போராட்டங்களைப் பற்றியதாக மாறி விடுவதாகவும் ஸ்ரயந்தி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார்.
“யாருடைய வாழ்க்கையும் போராட்டங்களைப் பற்றியது அல்ல. மக்கள் வாழ்கிறார்கள், சிரிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள், முட்டாள்தனமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். துன்பத்தையும் போராட்டத்தையும் பற்றி யோசிப்பது வாழ்க்கையைத் தட்டையாக்குகிறது, அவற்றை கந்தல் கதைகளாகவோ அல்லது முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் வரும் சகிப்புத்தன்மையின் கதைகளாகவோ மாற்றுகிறது."
ஆட்டோ குயின்ஸ் மோதலில் இருந்து பின்வாங்குவதில்லை என்றாலும், தன்னைத் துன்புறுத்தும் அல்லது அச்சுறுத்தும் ஆண்களுடன் ராணியின் கடுமையான மோதல்கள் படத்தின் மையமாக உள்ளன. நீதி உணர்வுக்கு பெயர் பெற்ற அவர், அடிக்கடி துன்புறுத்தல்களை நேரடியாகச் சந்திக்கிறார், சில சமயங்களில் ஆண்களுடன் உடல் ரீதியான சண்டைகளிலும் ஈடுபடுகிறார். இதற்கு நேர்மாறாக, சுந்தரி மிகவும் உறுதியானவராகவும், அமைதியாகவும் இருக்கிறார். ராணி மற்றும் தொழிற்சங்கத்தில் உள்ள பிற பெண் ஓட்டுநர்களை சமூக ஒற்றுமையை நோக்கி அழைத்துச் செல்கிறார்.
ஆனால், இந்த வேறுபாட்டை பெரிதான விசயமாக இந்த ஆவணப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போது என்ன மாதிரியாக செயல்படுகிறார்கள் என்பதுதான் காட்டப்படுகிறது.
"அவர்கள் இந்தத் தொழிலில் எப்படி நுழைந்தார்கள், அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், உலகம் காண விரும்பும் மாற்றங்கள் என வழக்கமான உரையாடலாகத்தான் இது தொடங்கியது. ஆனால், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளியேறியபின், சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. திடீரென அவர்கள் இருவரும் சகோதரிகளைப் போல மாறி விட்டார்கள்,” என தனது படப்பிடிப்பு அனுபவங்களை நினைவு கூர்கிறார் ஸ்ரயந்தி.

ஒளிந்திருந்து படப்பிடிப்பு
சுந்தரியும், ராணியும் சாதாரணமாகப் பேசுவதையும், ஒருவரையொருவர் கேலி செய்வதையும் பார்த்து, அவர்களின் நட்பிலிருந்து உருவான ஒற்றுமையைப் படம்பிடிக்க ஸ்ரையந்தி முடிவு செய்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெண் ஓட்டுநர்கள் எவ்வாறு பயணிக்கிறார்கள் என்பதையும், சாதி, மதம் மற்றும் சுற்றுப்புறம் பொது இட அனுபவத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும் இந்த ஆவணப்படம் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது.
“காலனித்துவ மற்றும் சாதி வரலாறுகளால் ஏற்கனவே ஆழமாகப் பிரிக்கப்பட்ட ஒரு நகரத்திற்குள், பெண்கள் ஆக்கிரமிப்பது, பயணிப்பது மற்றும் போட்டியிடுவது எவ்வாறு? அதோடு, தொழிற்சங்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மக்கள் பின்வாங்குகின்றனர். அரசியல் என்பது தனிப்பட்டது. அரசியல் என்பது அன்றாட வாழ்க்கை, இதை பெரிய தலைப்புச் செய்திகளுக்கு அப்பால் மட்டுமே பார்க்க முடியும்."
பெரும்பாலும், ஆவணப்படங்களில் ஒலியை நாம் கவனிக்காமல் தவற விட்டு விடுகிறோம், ஆனால், இந்த ஆவணப்படத்தில் அது கொஞ்சமும் தவற விட்டு விடாமல், பார்ப்பவர்களுக்கு சென்று சேர பெரிதும் உழைத்துள்ளனர் புத்திர பாலன் மற்றும் ராகவ்.
‘சம்பந்தப்பட்ட பெண் ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள், அவர்களது கோபம் மற்றும் எதிர்ப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன, அவை அனைத்தும் எவ்வாறு அர்த்தமுள்ளதாக இருக்கின்றன என்பதை உன்னிப்பாகக் கவனித்ததாக,’ அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆவணப்படத்தை அதன் வண்ணம் மாறாமல் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளாகப் பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம் அக்காட். அங்கு நிலவிய சூழலை அப்படியே பதிவு செய்து ஆவணப்படுத்துவதற்கு, படப்பிடிப்புக் குழுவினரை அங்கு சம்பந்தப்பட்டவர்களின் கண்களுக்கு தெரியாதவாறு திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தியுள்ளார் ஸ்ரையந்தி.
ஆரவாரத்துடன் ரசித்த பெண் ஓட்டுநர்கள்
முழு ஆவணப்படத்தையும் VPMS உறுப்பினர்களுக்கு போட்டிக் காட்டியுள்ளனர். அப்போது அந்த அரங்கமே ஆரவாரத்தாலும், சிரிப்பாலும் நிறைந்திருந்ததாகவும், அதுவே தங்களது ஆவணப்படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு எனவும் ஆவணப்படக்குழு பூரிக்கிறது.
"நாங்கள் ஒரு பெரிய ஹீரோ படத்தைப் பார்ப்பது போல் உணர்ந்தோம். ஆனால் அதையும் தாண்டி, மக்கள் தங்களைத் திரையில் பார்ப்பது போல் உணர்வதை என்னால் காண முடிந்தது. அவர்களின் சொந்த வாழ்க்கை அவர்களுக்குள் மீண்டும் பிரதிபலித்தது," எனப் பூரிப்புடன் கூறுகிறார் ஸ்ரையந்தி.
தொகுப்பு: ஜெயஸ்ரீத்ரா

