‘ரூ.58 லட்சம் சம்பளம் வாங்கினாலும் தனிமையில் வாடுறேன்' - கதறிய ஐடி ஊழியருக்கு பயனர்கள் அட்வைஸ்!
ஆண்டுக்கு ரூ.58 லட்சம் சம்பளம் வாங்கினாலும் தனிமையாக உணர்கிறேன் என்று பெங்களூரைச் சேர்ந்த 24 வயது ஐடி ஊழியர் இணையத்தில் பதிவிட்ட கருத்துக்கு பலரும் நேர்மறையான கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
காசு இருந்தா எல்லாத்தையும் வாங்கலாம், ஆனால் மனநிறைவை வாங்க முடியாது... என்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த ஐடி ஊழியர். சமூக ஊடகத்தில் இவர் பதிவிட்ட கருத்து ஒன்று பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
24 வயது ஐடி ஊழியரான இவர், FAANG (five prominent companies: Meta, Amazon, Apple, Netflix and Alphabet) நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர், ’வாழ்க்கை நிறைவுற்றதாக உணர்கிறேன்...’ என்கிற தலைப்பில் எழுதியுள்ள பதிவில்,
“நான் ஒரு மென்பொறியாளர் 2.9 வருடங்களாக பெங்களூரில் வசிக்கிறேன் என்னுடைய வேலையை FAANG நிறுவனத்தில் தொடங்கினேன். வருமானவரியுடன் சேர்த்து ஆண்டுக்கு ரூ.58 லட்சம் சம்பாதிப்பதால் நல்ல வாழ்க்கையை வாழ்கிறேன், பணிச்சூழலும் எந்தவித அழுத்தமுமின்றி நல்லமுறையில் சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் எப்போதும் வாழ்வில் தனிமையில் இருப்பதைப் போன்ற ஒரு அதீத உணர்ச்சி இருக்கிறது. என்னுடைய நேரத்தை செலவிட எனக்கொரு காதலி இல்லை, என்னுடைய நண்பர்களும் அவர்களுடைய வாழ்வில் பிஸியாக இருக்கிறார்கள்....” என்று எழுதியுள்ளார்.
என்னுடைய வேலையும் கூட ஒரே விதமாக அன்றாடம் போய்க்கொண்டிருக்கிறது, என்னுடைய பணியைத் தொடங்கியது முதலே இந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், செய்த வேலையையே தினமும் செய்கிறேன், புதிய சவால்கள் மற்றும் என்னுடைய பணிக்கான வளர்ச்சி வாய்ப்புகளை நான் பார்ப்பதில்லை. என்னுடைய வாழ்வை மேலும் சுவாரஸ்யமானதாக்குவதற்கு நான் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். (தயவு செய்து உடற்பயிற்சி கூடத்திற்கு போ என்று சொல்லாதீர்கள். நான் ஏற்கனவே அதைச் செய்து கொண்டிருக்கிறேன்) என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்தப் பதிவிற்கு பலரும் அவருடைய பிரச்சனையில் இருந்து எப்படி வெளிவரலாம் என்று தங்களது அறிவுரைகளை பதில்பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம் அல்லது சுயமாக எதையாவது செய்யத் தொடங்கலாம் என்று பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஒரு நோக்கத்துடன் தினசரி புதுப்புது பிரச்னைகளுக்குத் தீர்வு காண நேரிடும் அதுவே இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும், அதனால் அவர் தனது சொந்த நிறுவனத்தை வெற்றியாக்குவதோடு தன்னுடைய குழுவினர் முகத்தில் மகிழ்ச்சியை காண முடியும். வாழ்க்கையே கொடுப்பதும் மற்றவர்களின் வாழ்க்கைக்கான மதிப்பை உருவாக்குவதும் தான் என்று நாகராஜ் என்ற பயனர் கூறியுள்ளார்.
அவருக்கு ஒரு முன்னோக்கு பார்வை வேண்டும் மேலும் தான் ஒரு நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறேன் என்கிற உணர்வு வேண்டும். இதற்கான ஒரு வழி தன்னார்வத் தொண்டு அமைப்பு/ஆதரவற்றோர் விடுதியில் சேர்ந்து பணியாற்றலாம். அங்கே இருக்கும் மக்கள் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் அவர் நன்றிக்கடன் பட்ட உணர்வைப் பெறலாம், அதோடு தன்னுடைய ஆற்றலுக்கு நேர்மறை பண்பை வெளிக்காட்டலாம் என்று மற்றொரு பயனாளர் கூறியுள்ளார்.
இல்லாமல் இருப்பது தனிமை இல்லை… இருந்தும் இல்லாதது போல இருப்பது தான் தனிமை. இதை உணர்ந்து தன்னுடைய வாழ்வை அர்த்தமாக்க தேவையற்ற வழியில் பயணித்து எதிர்மறை வினையைப் பெறாமல் மற்றவர்களுக்கு உதவும் வகையில் சமூகத்திற்கு நல்லதை செய்தால் நிம்மதி தானாகக் கிடைக்கும் என்று நேர்மறை வழிகாட்டி இருக்கின்றனர் ட்விட்டர் பயனாளர்கள் பலர்.
சிஏ தேர்வில் வெற்றி பெற இவ்வளவு உழைக்க வேண்டுமா? 12 மார்க்கில் தோல்வி அடைந்த பெண்ணின் பதிவு!

