தேசிய நல்லாசிரியர் விருது பெறும் இரு தமிழர்கள்- யார் இவர்கள்? அவர்களின் சிறப்பு என்ன?
இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை அமுதா என்ற ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது மத்திய அரசு.
அந்தவகையில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 48 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் இருந்து, தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை அமுதா ஆகியோரும் அடங்குவர்.

தரமான கல்வியே இலக்கு
தென்காசி மாவட்டம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் தங்கராஜ்.
தனது பள்ளி வகுப்பறைகளுக்கு தேவையான ஸ்மார்ட் டிவி, புரொஜக்டர், இண்டராக்டிவ் போர்டு உள்ளிட்ட வசதிகளை மற்றவர்களின் உதவியோடு தனது பள்ளிக்கு செய்துள்ளார் தங்கராஜ். அதோடு, மாணவர்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலிகள், பாய்கள், விளையாட்டு மற்றும் கல்வி உபகரணங்களையும் அவர் பெற்றுத் தந்துள்ளார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களின் கற்றலை மேலும் சுவாரஸ்யமாக்கியது மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், ஸ்டோரி டெல்லிங் (Storytelling), ஆக்டிவிட்டி பேஸ்டு லியர்னிங் (Activity Based Learning) போன்ற முறைகளைப் பின்பற்றியது உள்ளிட்ட பல காரணங்களுக்காக தங்கராஜ் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
“பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளை இணைத்தேன். பல்வேறு நன்கொடையாளர்களின் உதவியைப் பெற்று பள்ளிக்குத் தேவையான வசதிகளை உருவாக்கினேன். பள்ளி என்பது ஆசிரியரின் பொறுப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு என்பதை நடைமுறையில் உருவாக்க முயற்சி செய்தேன்," என்கிறார் ஆசிரியர் தங்கராஜ்.
மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதைவிட, அதை மகிழ்ச்சியுடன் புரிந்துகொண்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது கற்பித்தல் அணுகுமுறை. பாடங்களை கலை ஒருங்கிணைந்த கற்றல், கதை சொல்லுதல், விளையாட்டு வழிக் கற்றல், செயல்பாடுகள், குழு கற்றல், ஆராய்ந்து கற்றல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கற்பித்து வருகிறேன்.
”கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். வறுமையின் காரணமாக எந்தவொரு மாணவரும் கல்வியில் பின்தங்கக் கூடாது. நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, கிராமப்புற மாணவர்களுக்கும் உருவாக்க வேண்டும் என்பதே எனது இலக்கு,” எனக் கூறுகிறார் தங்கராஜ்.

ஆசிரியர் பணி உயர்வானது
மதுரை பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில், அமுதா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
“தேசிய நல்லாசிரியர் விருதுக்காக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை, எனது வாழ்க்கையிலேயே மிக மிக மகிழ்ச்சியான தருணமாகக் கருதுகிறேன். என்னை உருவாக்கிய எனது பெற்றோருக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன். ஆசிரியர் பணி சாதாரண பணியல்ல, இந்தப் பணியில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது,” என்கிறார் அமுதா.
எனக்கு இந்த விருது கிடைப்பதற்கு சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியொரும் முக்கிய பங்காற்றியுள்ளனர். எனக்கு அறிவுரைகளை வழங்கி என்னை ஊக்கப்படுத்தியது அவர்கள்தான்.
குடியரசு தலைவர் கையால் விருது வாங்கப் போகும் தருணம் மிகவும் அழகானது. ஒரு பெண் குடியரசுத்தலைவர் கையால் விருது வாங்கப் போவதை, நினைக்கும் போதே மகிழ்ச்சியாக உள்ளது, என்கிறார் அமுதா.
மேலும், புதிதாக ஆசிரியர் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் அவர் பின்வருமாறு கூறுகிறார்,
“எதிர்கால தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்ச்சியுடன் அதை விரும்பி செய்யுங்கள். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். இதுதான் புதிதாக பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு நான் கூறும் அறிவுரை,”
அதேபோல், மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்றால், அது நிச்சயம் ஆசிரியர்களின் கைகளில் மட்டுமில்லை. ஆசிரியர்களுடன், பெற்றோரும் இணைந்தால்தான் அது சாத்தியப்படும், எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் வாழ்த்து
விருது பெற்ற இரு தமிழக ஆசிரியர்களுக்கும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ‘மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னத பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது. இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!’ எனத் தெரிவித்துள்ளார்.

