14 வயதில் 1,000 ரூபாயுடன் வீட்டிலிருந்து வெளியேறி, இன்று ரூ.3.5 கோடி கல்வி உதவித்தொகை பெற்ற பீகார் சிறுவனின் உத்வேகக் கதை!
பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார், தனது 14-வது வயதில் பழைய மடிக்கணினி ஒன்றையும் கையில் ரூ.1,000-ஐயும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு, 20,000 மாணவர்களைச் சென்றடைந்துள்ள ஒரு கல்வித் தளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் குமார், தனது 14-வது வயதில் பழைய மடிக்கணினி ஒன்றையும் கையில் ரூ.1,000-ஐயும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். தனது சூழ்நிலைகள் அனுமதித்ததைவிட மிகப் பெரிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற தேடல்தான் அவரை அந்தப் பயணத்திற்குத் தள்ளியது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 20,000 மாணவர்களைச் சென்றடைந்துள்ள ஒரு கல்வித் தளத்தை உருவாக்கியிருக்கிறார். மதிப்புமிக்க ‘Global Student Prize’ விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிடமிருந்து 22 முறைநிராகரிப்புகளைச் சந்தித்த பிறகு, தற்போது மீண்டும் இந்தியாவை விட்டு புறப்படத் தயாராகிறார்.
இந்த முறை அவரது கையில் இருப்பது ரூ.1,000 அல்ல; சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான முழு கல்வி உதவித்தொகை.
கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் அவருக்கு முழு கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது. கல்விக் கட்டணம், தங்குமிடம், உணவு, விமானப் பயணம், விசா, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கல்வி சார்ந்த செலவுகள் அனைத்தையும் இந்த உதவித்தொகை ஏற்கிறது. தோஹாவில் உள்ள Education City வளாகத்தில், 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் அவர் கல்வி பயில உள்ளார்.
ஒரு காலத்தில் கோட்டாவில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் சேரக்கூட பணம் இல்லாமல் இருந்த ஆதர்ஷுக்கு, இந்த வாய்ப்பின் பரிமாணம் உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது.
ஆனால், ஜார்ஜ்டவுன் அவரது வாழ்க்கையில் திடீரென நிகழ்ந்த திருப்பம் அல்ல. பீகாரில் உள்ள அரசு பள்ளியிலிருந்து உலகளாவிய மாணவர் போட்டிகள், கூகுள் இளைஞர் திட்டங்கள், தொழில்முனைவோர் முயற்சிகள், என நீண்ட பயணத்தின் அடுத்த அத்தியாயமே இது.

ரூ.1,000 மற்றும் பழைய மடிக்கணினியில் தொடங்கிய பயணம்
ஆதர்ஷின் குழந்தைப் பருவம் பொருளாதார சிரமங்களால் நிரம்பியிருந்தது. ஒற்றைத் தாயால் வளர்க்கப்பட்ட அவர், பீகாரில் வளர்ந்தபோது திறமைக்கும் வாய்ப்புக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை நேரடியாக அனுபவித்தார்.
14 வயதில், சிறந்த எதிர்காலத்திற்கான வழியைத் தேடி கோட்டாவுக்குச் சென்றார். ஆனால் அங்குள்ள பயிற்சி நிறுவனத்தில் சேருவதற்கான கட்டணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. வழக்கமான பாதை அவருக்கு மூடப்பட்டுவிட்டதாகத் தோன்றியது. ஆனால் அவர் கைவிடவில்லை. வேறொரு பாதையைத் தேடத் தொடங்கினார்.
பல்வேறு ஸ்டார்ட்அப் முயற்சிகளில் ஈடுபட்டார். அடித்தள அளவிலான சமூகத் திட்டங்களில் பணியாற்றினார். இறுதியில், மாணவர்கள் திறன்கள், வழிகாட்டிகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகளை அணுக உதவும் ‘Skillzo’ என்ற தளத்தை உருவாக்கினார்.
இன்று Skillzo கிட்டத்தட்ட 20,000 மாணவர்களைச் சென்றடைந்துள்ளது.
அதே நேரத்தில், ஆதர்ஷ் தனது கல்விப் பயணத்தையும் தொடர்ந்தார். பல்வேறு கல்வி உதவித்தொகைகளைப் பெற்றார். Google Youth Advisor ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச அளவிலான தொழில்முனைவோர் திட்டங்களில் பங்கேற்றார். உலகளாவிய போட்டிகளில் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.
2025-ல், 148 நாடுகளில் இருந்து பெறப்பட்ட கிட்டத்தட்ட 11,000 பரிந்துரைகளில் இருந்து ‘Global Student Prize’ விருதின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது அவரது அடுத்த இலக்கு ஜார்ஜ்டவுன்.
“நான் என் அம்மாவுடன் அமர்ந்திருந்தேன்”
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைத்த செய்தி, சர்வதேசப் பல்கலைக்கழக விண்ணப்ப நடைமுறைகளுக்குரிய எந்தவொரு ஆடம்பரமான சூழலிலும் அவருக்குக் கிடைக்கவில்லை.
“நான் என் அம்மாவுடன் அமர்ந்திருந்தபோதுதான் அந்த மின்னஞ்சல் வந்தது. அதை வாசித்தபோது மிகுந்த உற்சாகமாக இருந்தேன். என்ன நடக்கிறது என்பதையே என்னால் நம்ப முடியவில்லை. சேர்க்கைக்காக நான் கடந்து வந்த அனைத்திற்குப் பிறகு, முழு உதவித்தொகையுடன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பார்த்த அந்த நிமிடம் மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது,” என்கிறு ஆதர்ஷ் இந்தியா டுடே பேட்டியில் தெரிவித்திருந்தார்.
முதலில் இந்தச் செய்தியைத் தனது தாயிடம்தான் கூறினார்.
“எனது இந்தப் பயணம் முழுவதிலும் எனக்குப் பின்னால் இருந்தவர் அம்மாதான். அவரது மகிழ்ச்சியை பார்த்தபோது அந்தத் தருணம் இன்னும் சிறப்பானதாக மாறியது,” என்கிறார் அவர்.
ஆதர்ஷின் கல்வியே பல்வேறு உதவித்தொகைகளையும், அவரது திறமையில் நம்பிக்கை வைத்து உதவ முன்வந்தவர்களையும் சார்ந்திருந்ததால், இந்த உதவித்தொகைக்கு அவரைப் பொறுத்தவரை தனிப்பட்ட முக்கியத்துவமும் உள்ளது.
ஒரு கதவு மூடப்பட்டபோது மற்றொரு கதவு திறந்தது
ஜார்ஜ்டவுன் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு ஆதர்ஷ் 22 பல்கலைக்கழகங்களின் நிராகரிப்பை எதிர்கொண்டிருந்தார்.
Cornell University-யின் முன்னாள் மாணவி Joan Liu உருவாக்கிய ‘Second Chance’ அமைப்பில் அவர் இணைந்திருந்தார். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அவர் அனுப்பிய விண்ணப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிராகரிக்கப்பட்டன. இறுதியில் அவருக்குக் கிடைத்த வழக்கமான சேர்க்கை வாய்ப்புகளும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன.
அப்போது ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் வழக்கமான சேர்க்கை காலமும் முடிந்திருந்தது.
“அந்த நேரத்தில், பாலஸ்தீனிய மாணவர்களுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக Second Chance அமைப்புக்கும் கத்தாரில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்துக்கும் ஒரு கூட்டாண்மை இருந்தது. Joan, எனது சுயவிவரத்தைப் பல்கலைக்கழகம் பரிசீலிக்க வேண்டும் என்றும், எனது விண்ணப்பத்தை விதிவிலக்காக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,” என்கிறார் ஆதர்ஷ்.
அந்த ஒரு விதிவிலக்கே அவரது வாழ்க்கையின் பாதையை மாற்றியது.
“சில நேரங்களில் திறமைதான் பிரச்சினை அல்ல என்பதை அது எனக்குக் கற்றுக்கொடுத்தது. ஒருவருக்கு ஒரு கதவைத் திறந்து, ஒரு வாய்ப்பை வழங்கத் தயாராக இருக்கும் ஒருவர் தேவைப்படுகிறார்,” என்கிறார் அவர்.
இந்தப் பாடம் Skillzo மூலம் அவர் மேற்கொண்டு வரும் பணிக்கும் மிகவும் பொருத்தமானது.
தனக்காகப் பலர் கதவுகளைத் திறந்ததால் தனக்கு வாய்ப்புகள் கிடைத்ததாகக் கூறும் ஆதர்ஷ், இனி மற்றவர்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்க விரும்புகிறார்.

ஏன் ஜார்ஜ்டவுன்? ஏன் கத்தார்?
ஆதர்ஷ் முதன்மையாக அரசியல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகள் ஆகியவற்றைப் படிக்கத் திட்டமிட்டுள்ளார். அதேவேளை, பல்வேறு பாடங்களை ஆராய்வதற்கான சுதந்திரத்தையும் ஜார்ஜ்டவுன் மாணவர்களுக்கு வழங்குகிறது.
கொள்கை உருவாக்கத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வம், பீகாரில் அவர் கண்ட அனுபவங்களிலிருந்தும் உருவானது.
“சில கொள்கைகள் ஏன் வெற்றியடைகின்றன, சில ஏன் தோல்வியடைகின்றன, அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகள் இறுதியில் சாதாரண மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்துள்ளது,” என்கிறார் அவர்.
“பீகாரிலிருந்து வந்திருப்பதும் அந்த ஆர்வத்தை வடிவமைத்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் அரசின் திட்டங்களை அணுகுவதற்கான வாய்ப்பு ஆகியவை ஒருவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.”
Skillzo மூலம் மாணவர்களுடனும் சமூகங்களுடனும் நேரடியாகப் பணியாற்றியது அவரது சிந்தனையை மேலும் விரிவுபடுத்தியது. தனிநபர் அளவிலான முயற்சிகள் மாற்றத்தை உருவாக்க முடியும் என்றாலும், பெரிய அளவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். அதனால்தான் தோஹாவும் அவரை ஈர்த்தது.
பல்வேறு பிராந்தியங்களும் கலாசாரங்களும் சந்திக்கும் இடமாக கத்தார் இருப்பதாக அவர் கருதுகிறார். அங்கு படிப்பதன் மூலம் மத்திய கிழக்கைப் புரிந்துகொள்ளவும், அதே நேரத்தில் சர்வதேச மாணவர்கள் நிறைந்த வளாகச் சூழலில் கல்வி கற்கவும் முடியும் என்கிறார்.
“கொள்கை முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன, நாடுகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன, நிறுவனங்கள் எவ்வாறு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்கிறார் அவர்.
வாஷிங்டன் டி.சி. மற்றும் இத்தாலியில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களிலும் கல்வி கற்கும் வாய்ப்பை ஜார்ஜ்டவுன் வழங்குகிறது. அந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள ஆதர்ஷ் ஆர்வமாக உள்ளார்.
கொள்கை உருவாக்கத்தை நோக்கி பீகார் சிறுவனின் பார்வை:
Global Student Prize விருது ஆதர்ஷுக்கு அவரது பள்ளி மற்றும் சமூகத்தைத் தாண்டிய மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
அதன் பின்னர், பீகார் ஆளுநர் மற்றும் மாநிலக் கல்வி அமைச்சர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளையும் கல்வித் துறை தலைவர்களையும் அவர் சந்தித்துள்ளார். கல்வி, கொள்கை மற்றும் பொது வாழ்க்கைத் துறைகளைச் சேர்ந்த பலரின் கவனத்தையும் அவரது பணிகள் ஈர்த்துள்ளன.
இந்த அங்கீகாரம் Skillzo-வுக்கும் உதவியதாக அவர் கூறுகிறார்.
“Global Student Prize விருதை வென்றது, Skillzo மூலம் நான் செய்து வந்த பணிக்கு அதிகமான வெளிச்சத்தை ஏற்படுத்தியது. இல்லையென்றால் சென்றடைவது கடினமாக இருந்திருக்கும் பலர் மற்றும் நிறுவனங்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அது உருவாக்கியது,” என்கிறார் அவர்.
இந்தச் சந்திப்புகள், Skillzoவை தனித்துப் பயணிக்கும் ஒரு முயற்சியாக மட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய அமைப்பாக மாற்றுவது குறித்தும் அவரைச் சிந்திக்க வைத்துள்ளன.
அதைவிட முக்கியமாக, ஒரு பெரிய உண்மையை இந்த அங்கீகாரம் வலுப்படுத்தியுள்ளதாக அவர் கருதுகிறார்: சாதாரண பொருளாதாரப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களாலும் நிறுவனங்களை உருவாக்க முடியும்; உண்மையான சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை உருவாக்குவதிலும் அவர்கள் பங்களிக்க முடியும்.
“எனது பயணத்தை தனிப்பட்ட வெற்றிக் கதையாக மட்டும் பார்க்க நான் விரும்பவில்லை...” என்கிறார் ஆதர்ஷ்.
தனது ஜார்ஜ்டவுன் சேர்க்கை சிறிய நகரங்களில் இருந்து தன்னைப் போன்ற மாணவர்களைப் பார்க்கும் விதத்தையே மாற்ற வேண்டும் என்று ஆதர்ஷ் விரும்புகிறார்.
“நான் பீகாரின் மோதிஹாரியைச் சேர்ந்தவன். சிறிய நகரங்களிலிருந்தும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பின்னணியிலிருந்தும் வரும் பல மாணவர்கள், ஜார்ஜ்டவுன் போன்ற பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு உரியவை அல்ல என்று நினைப்பார்கள் என்பதை நான் அறிவேன்,” என்கிறார் அவர்.
அனைவருக்கும் தன்னைப் போன்ற முடிவு கிடைக்கும் என்று அவர் கூறவில்லை. ஆனால், குறைந்தபட்சம் முயற்சி செய்யும் உரிமையை மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்க வேண்டும் என்பதே அவரது செய்தி.
“பீகாரில் உள்ள ஒரு அரசு பள்ளிப் பின்னணியைச் சேர்ந்த மாணவர் இறுதியில் ஜார்ஜ்டவுனில் முழு உதவித்தொகையுடன் படிக்க முடியும் என்றால், மற்ற மாணவர்களும் தங்களுக்கு அத்தகைய வாய்ப்பை முயற்சி செய்து பார்க்கும் உரிமை இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.”
ஆதர்ஷின் இலக்கு, தனக்கான கடினமான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதைக் கடந்து இப்போது வெகுதூரம் சென்றுவிட்டது.
கொள்கை, நிர்வாகம் மற்றும் சமூக மாற்றம் ஆகியவை சந்திக்கும் துறையில், குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு, இளைஞர் மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாகப் பணியாற்ற அவர் விரும்புகிறார்.
அந்தக் கனவில் பீகாருக்கும் முக்கிய இடம் உண்டு.
“ஒருவர் பிறக்கும் சூழ்நிலைகள், அவர் வாழ்க்கையில் எவ்வளவு உயரம் செல்ல முடியும் என்பதைத் தீர்மானிக்காத இடமாக பீகாரையும் இந்தியாவையும் மாற்றுவதற்கு எனது பணி பங்களிக்க வேண்டும் என்பதே இறுதியில் எனது விருப்பம்,” என்கிறார் ஆதர்ஷ்.

அவரது அறிவுரை: "உங்களை நீங்களே நிராகரித்துக்கொள்ளாதீர்கள்"
ஆதர்ஷின் பயணத்தில் மீண்டும் மீண்டும் வெளிப்பட்ட ஒரு பாடம் உள்ளது: நிராகரிப்பு என்பது பாதையின் முடிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஜார்ஜ்டவுன் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு அவர் எதிர்கொண்ட பல்கலைக்கழக நிராகரிப்புகளும் இதற்கு சாட்சி.
உயர்தரப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு எட்டாதவை என்று நினைக்கும் மாணவர்களுக்கு அவரது அறிவுரை எளிமையானது.
“நிராகரிப்புகள் இருக்கும். ஆனால் உங்களை நீங்களே நிராகரித்துக்கொள்ள வேண்டாம் என்று அவர்களிடம் சொல்வேன். நானும் பல நிராகரிப்புகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரு நிராகரிப்பு உங்கள் திறனைப் பற்றிய இறுதி முடிவாக மாறிவிடக் கூடாது,” என்கிறார் அவர்.
மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளைத் தாண்டியும் பார்க்க வேண்டும் என்கிறார் ஆதர்ஷ். உதவித்தொகைகள், வழிகாட்டிகள், அமைப்புகள் மற்றும் உதவ முன்வரக்கூடிய மனிதர்களைத் தேட வேண்டும் என்பதும் அவரது அறிவுரை.
“உங்களிடம் ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்குங்கள். அதன்பிறகு, உங்களுடைய எல்லைக்கு அப்பாற்பட்டது என்று நீங்கள் நினைக்கும் வாய்ப்புகளுக்காகவும் தொடர்ந்து விண்ணப்பித்துக்கொண்டே இருங்கள்.”
ஒரு காலத்தில் ரூ.1,000 மற்றும் பழைய மடிக்கணினியுடன் பீகாரை விட்டு வெளியேறிய அந்தச் சிறுவனின் பயணத்தை மிகத் துல்லியமாகச் சுருக்குவது அவரது இந்த ஒரு வரியாக இருக்கலாம்:
“சில நேரங்களில் அந்தக் கதவைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். ஆனால் அது அங்கே இல்லை என்று அதற்கு அர்த்தமில்லை.”
தகவல் உதவி: இந்தியா டுடே, தொகுப்பு: முத்துகுமார்

