'AI-க்கு வரி விதிக்க வேண்டும்; சில பணிகளை மனிதர்களுக்கே ஒதுக்க வேண்டும்' – பில் கேட்ஸ்
தற்போதைய வரி விதிப்பு முறை, தொழிலாளர்களுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோக்களால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்களை சமாளிக்க அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ஏஐ மற்றும் ரோபோக்களுக்கு வரி விதிப்பதுடன், சில வேலைகளை மனிதர்களுக்காகவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஏஐ வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதர்களின் தீர்ப்பும் முடிவெடுக்கும் திறனும் தேவைப்படும் என கருதப்பட்ட பணிகளைக்கூட இயந்திரங்கள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. வேலைவாய்ப்பு, பொதுச் சேவைகள், பாதுகாப்பு மற்றும் அன்றாட வாழ்க்கை என பல துறைகளில் ஏஐ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்த மாற்றத்துக்கு ஏற்ப அரசுகள் போதுமான வேகத்தில் தயாராகவில்லை என்று கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
ஏஐ மற்றும் ரோபோக்களுக்கு வரி விதிப்பது அவரது முக்கியப் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
“ஏஐ டோக்கன்களுக்கும் ரோபோக்களுக்கும் நாம் வரி விதிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வரி விதிப்பு முறை, தொழிலாளர்களுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்களை வேலைக்கு அமர்த்தும்போது நிறுவனங்கள் பொதுவாக ஊதிய வரிகளைச் செலுத்துகின்றன. ஆனால், ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கான செலவுகள் பெரும்பாலும் தொழில் செலவாகக் கருதப்படுகின்றன. எனவே, ஏஐ மற்றும் ரோபோக்களுக்கு குறிப்பிட்ட வரி விதிப்பதன் மூலம் மனித உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தும் வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வேலை இழந்தவர்களுக்கு மறுபயிற்சி அளிப்பதற்கும் வலுவான சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குவதற்கும் பயன்படுத்த முடியும், என்றும் அவர் கூறியுள்ளார்.

Microsoft co-founder Bill Gates
ஏஐ தொழில்நுட்பத்தால் செய்ய முடியும் என்ற காரணத்துக்காக எல்லா வேலைகளையும் இயந்திரங்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சில பணிகள் தொழில்நுட்ப ரீதியாக ஏஐ-யால் செய்ய முடிந்தாலும், அவற்றை மனிதர்களே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று சமூகம் முடிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
இதற்காக “Human Reserved” என்ற கருத்தை கேட்ஸ் முன்வைத்துள்ளார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக சில பகுதிகளை வளர்ச்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதைப் போல, சமூகத்திற்கு முக்கியமான சில வேலைகளையும் மனிதர்களுக்காகவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்தக் கருத்துக்கு தனது சொந்த அனுபவமும் ஒரு காரணம் என்று கேட்ஸ் தெரிவித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு அல்சைமர் நோயால் தனது தந்தை உயிரிழந்ததாகவும், அவர் தனது தேவைகளைத் தெளிவாக வெளிப்படுத்த முடியாத நிலையிலும் அவரை கவனித்துக் கொண்ட மருத்துவ மற்றும் பராமரிப்பு நிபுணர்கள் அவரது தேவைகளைப் புரிந்துகொண்டதாகவும் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
“என் அப்பாவுக்கு அவர்கள் அளித்த பராமரிப்பில் ஏதோ ஒன்று ஈடுசெய்ய முடியாத மனிதத்தன்மை கொண்டதாக இருந்தது. எந்த ரோபோவும் அதைச் செய்திருக்க முடியாது; செய்யவும் கூடாது...” என்று அவர் எழுதியுள்ளார்.
எனவே, ஏஐ எந்தெந்த வேலைகளைச் செய்ய முடியும் என்பது மட்டுமே கேள்வியாக இருக்கக் கூடாது என்றும், எந்தெந்த வேலைகளை மனிதர்களே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று சமூகம் விரும்புகிறது என்பதையும் தீர்மானிக்க வேண்டும் என்றும் கேட்ஸ் தெரிவித்துள்ளார். சில பணிகளை இயந்திரங்களிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை மனிதர்களுக்காகப் பாதுகாக்கப்படலாம். அதேபோல், பரிவு, தீர்ப்பு, தனிப்பட்ட தொடர்பு போன்ற மனிதப் பண்புகள் முக்கியமான வேலைகளும் மனிதர்களிடமே இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
கல்வி மற்றும் மனநலப் பராமரிப்பு போன்ற துறைகளில் மனிதர்களே முக்கியப் பொறுப்பில் இருந்து, அவர்களின் திறனை மேம்படுத்த ஏஐ-யைப் பயன்படுத்தும் கலப்பு முறைகள் உருவாகலாம், என்றும் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் பல துறைகளில் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதற்கான நடவடிக்கைகள் மிகவும் அவசரமாகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். சட்டம், வாடிக்கையாளர் சேவை, மருத்துவம், மென்பொருள் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக ஆரம்பநிலை மற்றும் நடுத்தரநிலைப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும். விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மென்பொருள் பொறியியல் மற்றும் சட்ட உதவியாளர் பணிகள் முதலில் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கலாம். தரவு பகுப்பாய்வு, கடன் மதிப்பீடு மற்றும் நோயாளிகளின் ஆரம்ப நிலை மருத்துவ மதிப்பீடு போன்ற பணிகளையும் ஏஐ அதிக அளவில் மேற்கொள்ளக்கூடும்.
ரோபோக்களின் வளர்ச்சியும் இந்த மாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தலாம். எதிர்காலத்தில் கட்டுமானம், விருந்தோம்பல் உள்ளிட்ட உடல் உழைப்பு சார்ந்த பணிகளிலும் மனிதர்களுடன் ரோபோக்கள் போட்டியிடும் அளவுக்கு திறன் பெறக்கூடும் என்று கேட்ஸ் கருதுகிறார். ஏஐ மற்றும் ரோபோக்கள் மூலம் செலவைக் குறைக்கும் நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களுக்கும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் இயந்திரமயமாக்கல் மேலும் வேகமடையலாம்.
இதன் விளைவாக, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து சமூகங்கள் கொண்டுள்ள அடிப்படை அணுகுமுறையே மாறக்கூடும் என்று கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
“மக்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்ட பிறகு அல்லது போதுமான வேலை இல்லாமல் தவிக்கத் தொடங்கிய பிறகு நடவடிக்கை எடுப்பது மிகவும் தாமதமாகிவிடும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ-யை நிர்வகிப்பதற்காக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் புதிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு, கல்வி, வரிவிதிப்பு, எரிசக்தி, தேர்தல்கள், சுகாதாரம், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒரே நேரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை நிர்வகிப்பதற்காக தற்போதைய நிறுவன அமைப்புகள் உருவாக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே, அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் எல்லைகளைக் கடந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில்,ஏஐ வழங்கக்கூடிய பலன்கள் மிகப்பெரியதாக இருக்கலாம் என்றும் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அறிவியல் ஆராய்ச்சியை விரைவுபடுத்துவது, மருத்துவச் சேவையை மேம்படுத்துவது, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விவசாயிகளுக்கு உதவுவது, அரசு சேவைகளை மக்கள் எளிதாகப் பெறச் செய்வது மட்டுமின்றி, தற்போது அதிக செலவில் மட்டுமே கிடைக்கும் தொழில்முறை உதவிகளை தனிநபர்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் AI வழங்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது அவரது நோக்கம் அல்ல என்றும், அதன் மூலம் கிடைக்கும் பலன்கள் எவ்வாறு அனைவருக்கும் பகிரப்படும் என்பதையே தீர்மானிக்க வேண்டும் என்றும் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
“ஏஐ இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரிய சமத்துவத்தை உருவாக்கும் கருவியாகவோ அல்லது அநீதியின் மிக மோசமான ஆதாரமாகவோ மாறும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஏஐ ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை நிர்வகிப்பது கடினமாகும் முன்பே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
“இந்த முன்னெப்போதும் இல்லாத தொழில்நுட்பத்துக்கு முன்னெப்போதும் இல்லாத உலகளாவிய நடவடிக்கை தேவை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏஐ தொடர்பான எதிர்காலத்தை தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே தீர்மானிக்கும் வகையில் இந்த விவாதத்தை விட்டுவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

