செமிகண்டக்டர் துறையில் மிகப்பெரிய முதலீடு: ரூ1.27 லட்சம் கோடி, 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 2.0'க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்திச் சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) 2.0 திட்டத்திற்கு ரூ.1.27 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் உற்பத்திச் சூழலை மேலும் வலுப்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
'செமிகான் 2.0' திட்டத்தின் மூலம் சுமார் ரூ.4 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், திட்ட காலத்திற்குள் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் உற்பத்தி உருவாகும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.
முதல் கட்ட திட்டமான செமிகான் 1.0-ஐத் தொடர்ந்து, நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய செமிகண்டக்டர் உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இந்தியாவை நிலைநிறுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முதல் கட்ட திட்டத்திலிருந்து மாறுபட்டு, செமிகான் 2.0-இல் சிப் உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள், கனிமங்கள் மற்றும் தொழில்துறை வாயுக்களை வழங்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் முழுமையான உள்நாட்டு செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
"ISM 2.0 திட்டத்திற்கு மொத்தம் ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீட்டை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலி முழுவதையும் உள்ளடக்கும். அதன் முதல் தூணாக சிப் வடிவமைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்," என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படும் செமிகண்டக்டர் சிப்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், திட்டம் நிறைவடையும் போது இந்தியா உள்நாட்டு சிப் உற்பத்தியில் தன்னிறைவை எட்டும், என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இந்தியா செமிகண்டக்டர் மிஷன் 1.0-க்காக மத்திய அரசு ரூ.76,000 கோடி ஒதுக்கியிருந்தது. அந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 12 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, சுமார் ரூ.1.64 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அதன் செமிகண்டக்டர் பிரிவு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியால் மேம்பட்ட சிப்களுக்கான தேவை உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், செமிகண்டக்டர் உற்பத்தித் திறனை விரிவுபடுத்த பல நாடுகள் போட்டியிட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அறிமுகமாகியுள்ள செமிகான் 2.0 திட்டம், இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், AI-க்கு தேவையான உயர்தர சிப்களின் அதிகரித்து வரும் தேவையையும் பூர்த்தி செய்ய உதவும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-(பிடிஐ தகவல்களுடன்...)

