'Meine Electric' உருவாக்கிய விரைவு சார்ஜ் Iron-Air பேட்டரிக்கு சுயாதீன அங்கீகாரம்; மின்சார சேமிப்பில் முக்கிய மைல்கல்!
இதன் மூலம், 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து வழங்கும் நீண்டகால மின்சார சேமிப்பு (Long Duration Energy Storage - LDES) தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்திய டீப்-டெக் (Deep-Tech) ஸ்டார்ட்அப்பான மெய்ன் எலெக்ட்ரிக் (Meine Electric) உருவாக்கியுள்ள உலகின் முதல் விரைவு சார்ஜ் செய்யக்கூடிய இரும்பு-காற்று (Iron-Air) பேட்டரி தொழில்நுட்பம், சுயாதீன தொழில்நுட்ப மதிப்பீட்டில் வெற்றிகரமாகத் தன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
இதன் மூலம், 24 மணி நேரமும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து வழங்கும் நீண்டகால மின்சார சேமிப்பு (Long Duration Energy Storage - LDES) தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான Customized Energy Solutions (CES)-இன் பேட்டரி ஆய்வகம் இந்த தொழில்நுட்பத்தை சுயாதீனமாக சோதனை செய்தது. இந்திய எரிசக்தி சேமிப்பு கூட்டமைப்பின் (IESA) தாய் நிறுவனமான CES, பேட்டரியின் மின்வேதியியல் செயல்திறன், திறன் நிலைத்தன்மை மற்றும் தொடர்ந்து இயங்கும் திறன் ஆகியவற்றை பரிசோதித்தது.
சோதனையில், பேட்டரி 6 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, தொடர்ந்து 18 மணி நேரம் மின்சாரம் வழங்கும் திறனை நிலையாகக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது நிறுவனத்தின் Fast Charge Long Discharge (FCLD) தொழில்நுட்பத்தின் செயல்திறனை உறுதிப்படுத்துகிறது.
இதுவரை உலகளவில் உருவாக்கப்பட்ட பெரும்பாலான Iron-Air பேட்டரிகள் 50 முதல் 100 மணி நேரம் வரை நீண்டகால மின்சார சேமிப்புக்காக வடிவமைக்கப்பட்டதால், தினசரி சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை சமநிலைப்படுத்தும் பயன்பாடுகளுக்கு அவை ஏற்றதாக இருக்கவில்லை. அந்தக் குறையை மெய்ன் எலெக்ட்ரிக் தனது புதிய FCLD தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட மின்தகடுகள் மற்றும் புதிய அமைப்பு வடிவமைப்பின் மூலம் தீர்த்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பம், லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு, அதிக பாதுகாப்பு மற்றும் எளிதில் கிடைக்கும் இரும்பு போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற கூடுதல் நன்மைகளையும் கொண்டுள்ளது.
நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பிரியான்ஷ் மோகன் கூறுகையில்,
"பாரம்பரிய Iron-Air பேட்டரிகள் பல நாட்கள் நீளும் சார்ஜ்-டிஸ்சார்ஜ் சுழற்சிக்காக வடிவமைக்கப்பட்டவை. ஆனால், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியின் முக்கிய சவால் தினசரி மின்சார சமநிலையையே சார்ந்தது. எங்கள் தொழில்நுட்பம் 6 முதல் 8 மணி நேரத்துக்குள் முழுமையாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Iron-Air பேட்டரியை அவசர காப்பு தொழில்நுட்பத்திலிருந்து, தினசரி பயன்படுத்தக்கூடிய அடிப்படை மின்சார சேமிப்பு அமைப்பாக மாற்றியுள்ளோம்," என்றார்.
2023-ஆம் ஆண்டு பிரியான்ஷ் மோகன் மற்றும் ஸ்டூதி கக்கார் ஆகியோரால் தொடங்கப்பட்ட மெய்ன் எலெக்ட்ரிக், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் Iron-Air நீண்டகால மின்சார சேமிப்பு தொழில்நுட்பத்தை முன்னெடுத்து வரும் முதல் நிறுவனமாகவும், உலகளவில் மூன்றாவது நிறுவனமாகவும் விளங்குகிறது.
இந்தியா 2030-க்குள் 500 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி இலக்கை நோக்கி நகரும் நிலையில், இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என நிறுவனம் நம்புகிறது.
நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல்பாட்டு தலைவர் ஸ்துதி கக்கார் கூறுகையில்,
"எரிசக்தித் துறையின் எதிர்பார்ப்பு குறைந்த செலவும் அதிக நம்பகத்தன்மையும் கொண்ட சேமிப்பு தொழில்நுட்பமாகும். அந்த இரண்டையும் வழங்கும் திறன் Iron-Air தொழில்நுட்பத்துக்கு இயல்பாகவே உள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சார வலையமைப்பை வலுப்படுத்தும் அடிப்படை உள்கட்டமைப்பாக இதை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்," என்றார்.
முக்கிய அம்சங்கள்:
- உலகின் முதல் 6 மணி நேர விரைவு சார்ஜ் Iron-Air பேட்டரி தொழில்நுட்பம்
- 18 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கும் திறன்
- CES நிறுவனத்தின் சுயாதீன தொழில்நுட்ப அங்கீகாரம்
- லித்தியம்-அயன் பேட்டரிகளை விட குறைந்த செலவு மற்றும் அதிக பாதுகாப்பு
- சூரிய மின்சாரத்தை பகலில் சேமித்து இரவில் பயன்படுத்த ஏற்ற தீர்வு
- இந்தியாவின் 24x7 புதுப்பிக்கத்தக்க மின்சார இலக்குக்கு ஆதரவாக இருக்கும் தொழில்நுட்பம்
CES வழங்கிய இந்த சுயாதீன அங்கீகாரம், ஆய்வக கட்டத்தைத் தாண்டி பெரிய அளவிலான சோதனைத் திட்டங்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டை நோக்கி மெய்ன் எலெக்ட்ரிக் முன்னேறுவதற்கு முக்கிய நம்பகத்தன்மையை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொகுப்பு: முத்துகுமார்
