வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாதி-மதமற்ற இந்தியப் பெண் சினேஹா!
ஜாதிக் கொலை, ஆணவக் கொலை, மதப்போராட்டம் என பல பிரிவினைகள் இருக்கும் இந்தச் சூழலில் இதில் புரட்சி செய்யும் வகையில் ஜாதி, மதம் இல்லா சான்றிதழ் பெற்றுள்ளார் திருப்பத்தூரைச் சேர்ந்த சினேஹா.
எந்த மதத்தையும் ஜாதியையும் சேராத முதல் இந்தியப்பெண் சினேஹா என்ற பெருமைக்குச் சொந்தக்காரி ஆகியுள்ளார் இவர்.
சிறுவயதில் இருந்தே எந்த ஒரு சான்றிதழிலும் ஜாதி, மதத்தை குறிப்பிடாமல் காலியாகவே வைத்திருந்தனர் சினேஹாவின் பெற்றோர்கள். எந்த ஒரு அமைப்பையும் சாராமல் வளர்ந்த சினேஹாவிற்கு இப்பொழுது ஜாதி மதமில்லா சான்றிதழை அளித்து அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் 35 வயதான வக்கீல் சினேஹா மற்றும் அவரது கணவர் பாரதி ராஜா. மதம் மற்றும் ஜாதியில் நம்பிக்கையில்லாச் சூழலில் வளர்ந்தவர் இவர், இதனால் தனக்கென்று ஓர் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பல வருடம் போராடி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி திருப்பத்தூர் தாசில்தார் சத்யமூர்த்தி இடமிருந்து இச்சான்றிதழை பெற்றுள்ளார்.
“எனது பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் என்று எந்த ஆவணத்திலும் மதம் மற்றும் ஜாதி குறிப்பிடவில்லை. இந்தியன் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; ஆனால் நான் வளர வளர பெரும்பாலான விண்ணப்பப்படிவங்களில் ஜாதி சான்றிதழை இணைப்பது அவசியமாக இருந்தது..”
என்னிடம் அதற்கான சான்றிதழ் இல்லாததால் சுய ஆவண இணைப்பு செய்து வந்தேன். இதற்கு மேல் நிச்சயம் நமக்கென்று ஒரு சான்றிதழ் தேவை என்பதை உணர்ந்து எனது அங்கீகாரத்தைப் பெற போராடினேன் என தெரிவிக்கிறார் சினேஹா.
ஜாதி மதத்தை நம்புபவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் போது எங்களை போன்றோருக்கு ஏன் அளிக்கக்கூடாது? எனக் கேள்வி எழுப்புகிறார் சினேஹா. 2010 ஆம் ஆண்டு துவங்கிய இவரது போராட்டம் இப்பொழுதே நிரைவுப்பெற்றுள்ளது.
2010ல் எனக்கான சான்றிதழை விண்ணப்பிக்கத் துவங்கினேன்; ஆனால் எதோ ஒரு காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு சான்றிதழ் பெற்றுவிட வேண்டும் என்று உறுதியோடு நின்று எனது கோரிக்கையை அதிகாரிகளிடம் தெரிவித்தேன்,” என்கிறார்.
மேலும் இதுவரை சினேஹா எந்தவித அரசுச் சலுகைகளையும் ஒதுக்கீடுகளையும் பெறவில்லை, அதனால் அரசு தனக்காக இதைச் செய்ய வேண்டும் என்று உறுதியோடு நின்று இதைப்பெற்றுள்ளார்.
இவரது இந்த கோரிக்கைக்கு முதலில் தலை அசைத்தவர் திருப்பத்தூர் துணை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்.
“அவரது அனைத்து சான்றிதழையும் பரிசோதித்தப் பிறகு, பிறந்ததில் இருந்து இதுவரை ஜாதி-மதத்தை எங்கும் குறிப்பிடாமல் இருந்ததால் இந்த சாதியில்லா சான்றிதழை வழங்கினோம். இதுவரை இது போன்று நடக்கவில்லை என்றாலும் இச்செயலால் மற்றவர்கள் வாய்ப்பு எதுவும் பறிபோகாது என்பதால் சம்மதித்தோம்,” என்கிறார் பிரியங்கா பங்கஜம்.
சினேஹா தான் மட்டுமின்றி தன் மூன்று குழந்தைகளையும் மதம், ஜாதி வேறுபாடு இன்றிதான் வளர்க்கிறார். குழந்தைகளின் பெயரைக்கூட அனைத்து மதங்களையும் இணைப்பதுப் போல் ஆதிரை நஸ்ரின், ஆதிலா ஐரீன் மற்றும் ஆரிபா ஜெஸ்ஸி என பெயரிட்டுள்ளார். அவர்களின் சான்றிதழ்களிலும் எந்த ஒரு மதத்தையும் ஜாதியையும் இவர் குறிப்பிடவில்லை.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்