கூல் கேப்டன் தோனி ஆங்கிரி பேர்ட் ஆகிய தருணம்...
நேற்று Ipl சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் மேட்ச்சில் நம்ம தல தோனி செஞ்சது சரியா? தவறா?
அவசரம், ஆத்திரம், ஆக்ரோஷம் போன்ற வார்த்தைகளே தனது அகாராதியில் சேர்த்துக் கொள்ளாமல், அசாத்திய தருண ங்களையும் அசால்ட்டாய் கையாண்டு அடுத்தவரையும் ‘கூல் பேபி’யாக்கி டீல் செய்பவர் ‘தல’ தோனி என்பதற்கு, பல தருணங்களை எடுத்துரைக்கலாம். அப்படி, அனைவரையும் வியக்கவைத்து ‘உங்களுக்கு கோபமே வராதா தோனி’ என்று கேட்க வைத்தது, 2016ம் ஆண்டில் ஆறாவது டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு. அப்போது செய்தியாளர்,
“நீங்கள் தொடர்ந்து விளையாடுவீர்களா?” என்று கேள்வியனுப்ப, அதற்கு தல செய்த செயல் ‘ச்சே, மிஸ்டர் கூல்டா” என்று தல ரசிகர்களை கெத்தாய் காலர் தூக்க வைத்தது. காரணம், செய்தியாளரை தன் அருகில் அமர வைத்துக்கொண்டு, செய்தியாளரின் தோளில் கை போட்டு ‘நான் ஓய்வு பெற வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா?’ என கேள்வி எழுப்பினார். ‘இல்லை’ என்றார் செய்தியாளர். தொடர்ச்சியாய், பத்திரிக்கையாளரை நோக்கி கேள்வி அனுப்பி அவரையே ‘நீங்கள் நிச்சயம் தொடர்ந்து விளையாடலாம்’ என்று பதிலளிக்க வைத்தார்.
இப்படியான கூல் தருணங்களுக்கு இடையே அவ்வப்போது, சிங்கத்தையும் சீண்டிப்பார்த்து ‘கடுப்பேத்துகிறான் மை லார்ட்’ என்ற மோடுக்கு தள்ளியுள்ளனர். நேற்றும் அப்படியொரு சம்பவமே நிகழ்ந்தது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது போட்டியில் சென்னை சிஎஸ்கே, மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் நேற்று களம் கண்டது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய CSK அணி, அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. பின் களமிறங்கிய தோனியும், அம்பத்தி ராயுடுவும் நின்று விளையாடியதில், கேம்மை மீண்டும் தங்கள் பக்கள் மீட்டெடுத்தனர். ஆனாலும், கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் என்ற நிலையில், எவரும் எதிர்பார்க்கவில்லை சிஎஸ்கேவின் வெற்றியினை.
கடைசி ஓவரும் லப்பு டப்பு நிமிடங்களும்...
கடைசி ஓவரின் முதல் பந்தை ஜடேஜா, தூக்கி அடித்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2வது பந்து நோபாலாக வீச, அதில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ஃப்ரீஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தில் தோனி 2 ரன்களை எடுத்து, அடுத்த பந்தில் தோனி க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். தோனியின் அவுட்டால், திகைத்த சிஎஸ்கே ரசிகர்கள் வெற்றி கைப்பறிக்கப்பட்டுவிட்டது என்றே எண்ணினர்.
அடுத்த களமிறங்கிய சான்ட்னர் ஓவரின் 4வது பந்தை எதிர்கொண்டார். ஆனால், அப்பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றது. லெக் அம்பயர், நோ-பால் அளிக்க, ஸ்டிரைட் அம்பயர் நோபாலை ரத்து செய்தார்.
பந்து தோள்பட்டைக்கு மேல் வீசப்பட்டும் நோபால் தராததால், மைதானத்துக்கு வெளியே நின்று நோபால், நோ பால் என்று கூறிய தோனி ஒரு கட்டத்தில் டென்ஷனடைந்து மைதானத்துக்குள் வந்து, அம்பையர்களிடம் நோ-பால் குறித்து கேள்வி கேட்டார். ஆனாலும், அந்த பந்து நோ- பாலாக அறிவிக்கப்படவில்லை.
பின், கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் சான்ட்னர் சிக்ஸ் அடித்து வெற்றியை தேடி தந்தார். பிபீ மாத்திரைகளுடன் பார்க்க வேண்டிய மேட்ச்சில், சிஎஸ்கே வெற்றி பெற்று, ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 100வது வெற்றியை பெற்று தந்து ரசிகர்களை பெரிய விசில் போட வைத்தாலும், IPL விதியை மீறி மைதானத்துக்குள் தோனி வந்தது சர்ச்சையை கிளப்பியது.
போட்டியில் ஐபிஎல்லின் ஒழுங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ஒரு போட்டியின் ஊழியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது.
‘தோனி செய்தது சரியா, தவறா’ என்ற வாதம் நேற்றிரவில் இருந்து அனைவராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட, பலரும் தோனியின் அசாதாரண செயல் குறித்து கேள்வி எழுப் பியுள்ளனர்.
நமக்குப் பிடித்தமான நாயகர்களது வெற்றி தரும் கலிப்பு நமக்கு மனமகிழ்வை தருவது போல், அவர்களுக்கு நேரும் இன்னல்களும் நமக்கு மனச்சோர்வை அளிக்கத் தான் செய்கிறது. அதனால் தான், ஐபிஎல் விதியின் படி தோனி செய்தது தவறே என்று உணர்ந்தாலும், மைதானத்துக்குள் அவர் நடந்தது கெத்து சீன் என்று பெருமை கொள்கிறோம்.
ஆனால், அதே சமயத்தில் அம்பையர்களுக்கு உள்ள சிறு குழப்பம் நிலவுகையில் அதை அவர்கள் மூன்றாவது அம்பையரின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். ஏனெனில், இதற்கு முன்பாகவே இந்தத் தொடரில் பெங்களுரூ - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசிப் பந்தில் நோ-பால் வீசப்பட்டும் அதை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது சர்ச்சையானது.
தோனியின் செயல் சரியா? தவறா? - உங்கள் கருத்துகளை பகிரவும்...