தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2,63,976 அளவு கடன் சுமை: வெள்ளை அறிக்கை சொல்வது என்ன?
தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த நிதி நிலைமை குறித்து தற்போதையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 120 பக்கம் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு பேசியுள்ள அவர்,
"முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. வெள்ளை அறிக்கையில் முதல்வரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் எங்களின் இலக்கை தெரிவிப்பது தான்," என்றார்.

கடந்த ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. 2011- 6 காலகட்டத்தில் அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.17ஆயிரம் கோடி என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது,
2016-21 இடையே இது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பன்மடங்கு உயர்ந்து ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதே ஆண்டுகளில் எந்த மாநிலமும், இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை சந்திக்கவில்லை. 2011க்கு முன்னதாக இருந்த ஆட்சியில் 13.89 சதவீதமாக இருந்த வருமானம், அதன்பின் வந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் 4.65 சதவீதமாக சரிந்திருக்கிறது. அதிலும் 2018-19 காலகட்டத்தில் வருமானம் அதிக அளவில் சரிந்திருக்கிறது.
மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிப்பங்கீடு, திட்ட மானியம் ஆகிய நான்கு வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. ஆனால் இதில் கடந்த ஆண்டுகளில் மாநில வரி வருவாயில் மிகப்பெரிய தொய்வு இருக்கிறது.
மேலும், தமிழக அரசுக்குச் சொந்தமான மின்துறை, போக்குவரத்துத்துறை ஆகியவை கடன் அதிகமாக பெற்று எச்சரிக்கை மிகுந்த சூழலில் உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எதற்காக எடுக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபேன்ற காரணங்களால் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,305 கோடியாக இருக்கும் என கணித்துள்ளோம்.

கடன் வாங்கி செலவு செய்யும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு இருந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால்,
“தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2,63,976 அளவுக்கு கடன் சுமை இருக்கிறது. கடன் சுமை அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை முற்றிலும் குறைந்துவிட்டது. இதனால் வட்டி விகிதமும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, மின்வாரியத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் தன்மை முற்றிலும் குறைந்து, வட்டி அதிகரித்து காணப்படுகிறது.”
வெள்ளை அறிக்கையி கடன்களின் நிலை மற்றும் வருமானம், செலவினம் ஆகியவை எவ்வாறு மாறியுள்ளன என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம்.
மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எந்த அளவில் உள்ளது என்பதையும் விரிவாக வெள்ளை அறிக்கையில் விளக்கி இருக்கிறோம். தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளதை ரிசர்வ் வங்கி போன்ற நிதி அமைப்புகள் குறிப்பிட்டு இருக்கின்றன.
வெள்ளை அறிக்கையில் தவறு இருக்கும்பட்சத்தில் அதற்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பு ஏற்கும் வகையில் என் பெயர் அதில் இடம்பெற்றுள்ளது, என்று பேசியுள்ளார்.

