'நிஜமான கனவு' - டோக்கியோ செல்லும் திருச்சியின் ‘தங்கம்' தனலட்சுமி!
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வான தமிழக பெண் தனலட்சுமி!
வருகிற 23-ம் தேதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இதில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கான தேர்வு போட்டிகள் பாட்டியாலாவில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்றுமுன்தினம் ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டது.
இதில் கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதியுடன் இடம்பெற்றிருக்கும் மற்றொரு வீராங்கனை தனலட்சுமி. இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்.
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட இந்த தனலட்சுமி சில மாதங்கள் முன்பு தான், பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவில், பெடரேஷன் கோப்பை சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 100மீ ஓட்டத்தில் தங்கம் வென்றதுடன், 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த், ஹீமா தாஸ் போன்ற முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி தமிழகம் முழுவதும் அறியப்படும் நபரானார்.
அதேதொடரில் 200 மீட்டர் ஓட்டத்தில் பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்து பெருமை சேர்த்தார். என்றாலும் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற நிர்ணயிக்கபட்டிருந்த இலக்கை அவரால் எட்டமுடியாததால் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். எனினும், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் ஒலிம்பிக்கிற்கு தேர்வாகி தமிழகத்தை தலைமிரச் செய்துள்ளார்.
யார் இந்த தனலட்சுமி?
திருச்சியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. 22 வயதேயான அவருக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த தனலட்சுமி, வறுமையின் பிடியில் கடுமையாக அவதிப்பட்டார். அவரது அம்மா மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வளர்த்து படிக்கவும் வைத்தார். அவர் திறமையைப் பார்த்து வியந்த பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகம் அவருக்குத் தேவையான உதவிகள் செய்து விளையாட்டுத் துறையில் சாதிக்க உதவி செய்துவருகிறார்.
இதற்கிடையே, ஒலிம்பிக் தொடருக்கு தேர்வாகி இருப்பது குறித்து தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேசியிருக்கும் தனலட்சுமி,
“சந்தோஷமாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான தருணம் கனவு போல உள்ளது. மார்ச் மாத தேர்வுப் போட்டியில் சாதனை படைத்தும் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தேன். அதனால் ஒலிம்பிக் தேர்வில் பெரிய நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆனால் பயிற்சியாளர் கற்றுக்கொடுத்த பாடங்களும், எனது முயற்சியும் இப்போது ஒலிம்பிக்கிற்கு கொண்டு சென்றுளள்து. இந்த ஊக்கம் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது," என நெகிழ்ந்து பேசுகிறார்.
ஒலிம்பிக்கை கனவாக வைத்து, திருச்சி மைதானங்களில் ஓடிய தனலட்சுமியின் கால்கள், இப்போது நிஜமாகவே ஒலிம்பிக் களத்தில் ஓட இருப்பது அனைவருக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.