ரூ.4.2 கோடி சம்பள வேலையை விட்டு ஹோட்டல் தொடங்கிய முன்னாள் கூகுள் ஊழியர்; முதல் ஆண்டிலேயே ரூ.21.7 கோடி வருவாய்!
35 வயதான சலாஹுதீன் அப்துல்-கஃபி; மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப் மற்றும் க்ரூஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் சுமார் 14 ஆண்டுகள் பணியாற்றியவர், லாப நோக்கமே அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால் அந்தத் துறையை விட்டு சொந்த ஹோட்டலை தொடங்கினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஹலால் பார்பிக்யூ (BBQ) உணவகத்தைத் தொடங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.4.25 கோடி (4.5 லட்சம் டாலர்) சம்பளம் வழங்கிய உயர்பதவி தொழில்நுட்ப வேலையை விட்டு வெளியேறிய முன்னாள் கூகுள் பொறியாளர், தனது முதல் ஆண்டிலேயே ரூ.21.7 கோடி வருவாய் ஈட்டி கவனம் ஈர்த்துள்ளார்.
35 வயதான சலாஹுதீன் அப்துல்-கஃபி, மைக்ரோசாப்ட், கூகுள், யூடியூப் மற்றும் க்ரூஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் சுமார் 14 ஆண்டுகள் பணியாற்றியவர். தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த காலத்தில், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை விட லாப நோக்கமே அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால் அந்தத் துறையில் விரக்தியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
உயர் சம்பள வேலையை விட்டு வெளியேறிய பிறகு, 50 சதவீதத்திற்கும் அதிகமான சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டு ஒரு மத சார்ந்த லாப நோக்கமற்ற அமைப்பில் பணியாற்றத் தொடங்கினார். அதே சமயம், நண்பர்களுக்காக விருந்துகளை ஏற்பாடு செய்து தனது சிறப்பு பார்பெக்யூ உணவுகளை சமைத்து வழங்கி வந்தார். அவரது சமையலுக்கு கிடைத்த வரவேற்பே உணவகத் தொழிலில் இறங்கும் எண்ணத்தை உருவாக்கியது.
இதன் தொடர்ச்சியாக, 2024 டிசம்பரில் "Kafi BBQ" என்ற ஹலால் பார்பிக்யூ உணவகத்தை அவர் தொடங்கினார். தொடக்க நாளில் மூன்று நாட்களுக்கு போதுமான அளவு உணவு தயாரித்திருந்த போதிலும், அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் அதே இரவே மீண்டும் சமையல் பணிகளைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
தொடங்கிய சில மாதங்களிலேயே டெக்சாஸ் முழுவதும் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இந்த உணவகம் பிரபலமடைந்தது.
கடந்த ஆண்டில் நிறுவனம் சுமார் 2.3 மில்லியன் டாலர், அதாவது, ரூ.21.7 கோடி வருவாய் ஈட்டியதாகவும், இந்த ஆண்டில் 4 மில்லியன் டாலர் அல்லது சுமார் ரூ.37.8 கோடி வருவாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அப்துல்-கஃபி தெரிவித்துள்ளார்.
எனினும், உணவகத்தின் வேகமான வளர்ச்சியின்போதும் அவர் இன்னும் தனது நிறுவனத்திலிருந்து ஒரு டாலர் கூட சம்பளமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுவரை தனது சேமிப்புப் பணத்திலேயே வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
உணவகம் லாபகரமான நிலையை அடைந்திருந்தாலும், அதைத் தொடங்க முதலீடு செய்யப்பட்ட சுமார் 10 லட்சம் டாலர் முழுமையாக இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவகத்தை நடத்துவதற்கான மாதாந்திர செலவு 2.15 லட்சம் டாலருக்கு மேல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் உணவுப் பொருட்களுக்காக 1.25 லட்சம் டாலர், ஊழியர்களின் சம்பளத்திற்காக 50,000 டாலர், வாடகைக்காக 15,000 டாலர் செலவிடப்படுவதுடன், விளம்பரம் மற்றும் பிற நிர்வாகச் செலவுகளுக்கும் ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவாகின்றன.
உயர் சம்பளமுள்ள தொழில்நுட்பத் துறையை விட்டு தனது ஆர்வத்தைத் தொழிலாக மாற்றிய அப்துல்-கஃபியின் பயணம், தொழில் முனைவோராக மாற விரும்பும் பலருக்கும் ஊக்கமளிக்கும் கதையாக பார்க்கப்படுகிறது.
