1.1 மில்லியன் டாலர் நிதி திரட்டிய கோவையைச் சேர்ந்த குடும்பச் செல்வப் பாதுகாப்பு தளம் 'SafeBox'
குடும்பச் சொத்துகளை ஒரே இடத்தில் கண்காணித்து பாதுகாக்க உதவிட தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் Safebox, Claypond Capital-ன் நிர்வாக இயக்குநரும் ஏஞ்சல் முதலீட்டாளருமான சேகர் கரிசா உள்ளிட்ட பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள்
இந்தியக் குடும்பங்கள் தங்களது முழுமையான நிதிச்சொத்தை ஒரே இடத்தில் கண்காணித்து பாதுகாக்க உதவும் 'சேஃப்பாக்ஸ்' (Safebox) நிறுவனம், 1.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.9.2 கோடி) seed fund திரட்டியுள்ளது. ஒரு குடும்ப அலுவலகம் தலைமையில் நடைபெற்ற இந்த முதலீட்டுச் சுற்றில், கிளேபாண்ட் கேபிட்டலின் (Claypond Capital) நிர்வாக இயக்குநரும் ஏஞ்சல் முதலீட்டாளருமான சேகர் கரிசா உள்ளிட்ட பல ஏஞ்சல் முதலீட்டாளர்கள் தங்களது தனிப்பட்ட முதலீட்டு அடிப்படையில் இந்தச் சுற்றில் பங்கேற்றனர்.
2026 ஜூனில் கோவையிலிருந்து தொடங்கப்பட்டு, பொதுமக்களுக்காக அறிமுகமான ’சேஃப்பாக்ஸ்’, இதுவரை 55 வகைகளில் ரூ.6,000 கோடிக்கும் அதிகமான குடும்பச் சொத்துகளைப் பாதுகாக்க உதவியுள்ளதாக தெரிவித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான விபத்தில் சிக்கிய நிறுவனர்களில் இருவர், தாங்கள் உயிர் பிழைக்காமல் போயிருந்தால் தங்களிடம் உள்ள சொத்துகள் குறித்து குடும்பத்தினருக்குத் தெரியுமா என்ற கேள்வியை எதிர்கொண்டனர். இதன் பின்னணியில், சிறுவயது நண்பர்களும் தொடர் தொழில்முனைவோருமான மூவர் இணைந்து தொடங்கியதே Safebox.

இந்தியாவில் வங்கிகளில் மட்டும் ரூ.86,917 கோடி மதிப்பிலான டெபாசிட் பணங்கள் கோரப்படாமல் உள்ளன. 2026 ஜூன் 30 நிலவரப்படி, கோரப்படாத வங்கி டெபாசிட்கள் ரிசர்வ் வங்கியின் வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்ட தொகை ரூ.86,917 கோடியாக இருந்ததாக, 2026 ஆகஸ்டில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதில் சுமார் நான்கில் ஒரு பங்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவை சேர்ந்ததாகும்.
எனினும், இந்தத் தொகை இந்தியாவில் கோரப்படாமல் உள்ள மொத்த நிதிச் சொத்துகளின் அளவைக் காட்டுவதில்லை. காப்பீடு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான தரவுகளை ஐஆர்டிஏஐ மற்றும் செபி ஆகியவை வெவ்வேறு காலகட்டங்கள் மற்றும் வரையறைகளின்படி தனித்தனியாக வெளியிடுகின்றன. எனவே, அவற்றை வங்கித் தரவுடன் சேர்த்து ஒரே தொகையாகக் கணக்கிட முடியாது.
இந்தியக் குடும்பங்கள் வைத்திருக்கும் அனைத்து சொத்துகளையும் ஒரே இடத்தில் காட்டும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாததே முக்கியப் பிரச்சினை என சேஃப்பாக்ஸ் கூறுகிறது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குத் தரகர்கள், EPFO, NPS உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பரவியுள்ள சொத்துகளின் முழுமையான விவரங்களை குடும்பங்கள் ஒரே இடத்தில் வைத்திருப்பது சவாலாக உள்ளது.
கோரப்படாத நிதிச் சொத்துகளை மீட்டெடுப்பதற்காக அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 2026 ஜூனில் நிதிச் சேவைகள் துறை காமன் லெண்டிங் போர்ட்டல்-ஐ அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் UDGAM, ஐஆர்டிஏஐயின் பீமா பரோசா, செபியின் மித்ரா உள்ளிட்ட தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சேஃப்பாக்ஸ், சொத்துகள் கோரப்படாமல் போவதற்கு முன்பே அவற்றின் முழுமையான வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. குடும்பத்தினர் ஒன்றாக இருக்கும்போதே சொத்துகள், கடன்கள், காப்பீடுகள், ஆவணங்கள் மற்றும் குடும்பத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவசரநிலை அல்லது தலைமுறை மாற்றத்தின்போது அவற்றை மீண்டும் தேட வேண்டிய நிலையைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.
இதற்காக ‘குடும்பச் சொத்துப் பாதுகாப்பு’ எனப்படும் குடும்பச் செல்வப் பாதுகாப்பு என்ற புதிய பிரிவை சேஃப்பாக்ஸ் உருவாக்கி வருகிறது. பல்வேறு தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், பல்வேறு பான் எண்களில் உள்ள முதலீடுகள், பங்குகள், ஈடிஎஃப்கள், பல்வேறு நிறுவனங்களின் இபிஎஃப் கணக்குகள், என் பி. எஸ். உள்ளிட்ட நிதிச் சொத்துகளை ஒரே இடத்தில் கண்காணிக்க இந்தத் தளம் உதவுகிறது.
மேலும், 55 வகைகளில் சொத்துகள், கடன்கள், காப்பீடுகள் மற்றும் குடும்பத் தகவல்களைப் பதிவு செய்து, ஒவ்வொரு சொத்துக்கும் உள்ள நாமினி விவரங்களையும் இணைக்கிறது. இந்தியாவின் ஒழுங்குமுறை நிதி உள்கட்டமைப்புடன், குறிப்பாக அக்கவுண்ட் அக்ரகேட்டர் கட்டமைப்புடனும் சேஃப்பாக்ஸ் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.
35 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் பல்வேறு சொத்துகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வயதான பெற்றோர்களை நிர்வகித்து வரும் நிலையில், அவர்களின் நிதி விவரங்கள் ஏராளமான நிறுவனங்கள், டிஜிட்டல் கணக்குகள் மற்றும் அடையாளங்களில் பரவியுள்ளன. எனவே, நிதித் தயார்நிலை என்பது இனி பதிவுகளைப் பராமரிக்கும் ஒழுக்கம் மட்டுமல்ல; அது ஒரு தரவுச் சிக்கலாக மாறியுள்ளது, என நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் பரிந்துரைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைக்கும் வசதி மூலம் சேஃப்பாக்ஸ் பெரும்பாலும் வளர்ந்து வருகிறது. 2026 ஜூன் முதல், அதன் தளத்தில் குடும்பங்கள் ரூ.6,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளைப் பதிவு செய்துள்ளன.
சேஃப்பாக்ஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் வீரா கூறுகையில்,
“இந்தியக் குடும்பங்கள் 30 ஆண்டுகள் செல்வத்தை உருவாக்குகின்றன. ஆனால், அந்தச் செல்வத்தை தங்களது அன்புக்குரியவர்கள் எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் என்பதைப் பற்றி சுமார் 30 நிமிடங்களே சிந்திக்கின்றனர். வங்கிகளில் மட்டும் ரூ.86,917 கோடி கோரப்படாமல் உள்ளது. இது சொத்துகளை மீட்டெடுக்கும் பிரச்சினை அல்ல; பதிவுகளை முறையாக வைத்திருக்கும் பிரச்சினை. தொலைந்த பணத்தைக் கண்டுபிடிப்பதற்கான வழியை நாங்கள் உருவாக்கவில்லை. அதை ஒருபோதும் தொலைக்காத வகையிலான அமைப்பை உருவாக்குகிறோம்,” என்றார்.

முதலீட்டாளர் சேகர் கரிசா கூறுகையில்,
“இந்தியா; செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த நிதி உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஆனால், அந்தச் செல்வத்தை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான அமைப்புகள் குறைவு. சேஃப்பாக்ஸ் இதை ஒரு தயாரிப்பு வசதியாக மட்டுமே பார்க்காமல், தரவு மற்றும் நம்பிக்கை சார்ந்த பிரச்சினையாக அணுகுகிறது,” என்றார்.
தற்போது திரட்டப்பட்டுள்ள நிதியை தயாரிப்பின் திறன்களை வலுப்படுத்தவும், விநியோகத்தை விரிவுபடுத்தவும் சேஃப்பாக்ஸ் பயன்படுத்த உள்ளது. புதிய வசதிகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை உருவாக்குதல், பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல், கூட்டாளர் வலையமைப்பு மற்றும் நிறுவனங்களுடனான இணைப்புகளை விரிவுபடுத்துதல், வாடிக்கையாளர் சேர்க்கையை அதிகரித்தல் ஆகியவற்றில் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

