தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி பெற்ற முதல் பெண்கள் பேட்ச் ராணுவ அதிகாரிகளாகப் பொறுப்பேற்பு!
இதுவரை பெண்கள் பெரும்பாலும் குறுகிய கால சேவை ஆணையம் (Short Service Commission) மூலம் மட்டுமே படைகளில் இணைந்து, 14 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு நிரந்தர ஆணையத்திற்காக விண்ணப்பிக்கும் நிலை இருந்தது.
இந்திய பாதுகாப்புப் படைகளின் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) பயிற்சி பெற்ற முதல் பெண்கள் கேடெட்டுகள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 148-வது பாடநெறியில் இணைந்த 17 பெண்கள், தங்களுக்கான சேவைப் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து தற்போது இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் அதிகாரிகளாக இணைந்துள்ளனர்.
பெண்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2021 ஆகஸ்டில் வழங்கிய இடைக்கால உத்தரவின் அடிப்படையில், இந்த மாற்றம் சாத்தியமானது. அதனைத் தொடர்ந்து பெண்கள் முதன்முறையாக NDA-வில் சேர்க்கப்பட்டனர்.
இதுவரை பெண்கள் பெரும்பாலும் குறுகிய கால சேவை ஆணையம் (Short Service Commission) மூலம் மட்டுமே படைகளில் இணைந்து, 14 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு நிரந்தர ஆணையத்திற்காக விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. ஆனால், அகாடமி வழியாக பயிற்சி பெற்ற இந்த முதல் குழு, ஆண்களுடன் சமமாக ஆரம்பத்திலிருந்தே நிரந்தர ஆணைய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒன்பது பெண் அதிகாரிகள், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்ற 158-வது ரெகுலர் கோர்ஸ் நிறைவு அணிவகுப்பில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டனர். இந்த விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆய்வு செய்தார்.
மேலும், ஐந்து பெண் அதிகாரிகள், ஹைதராபாத் அருகிலுள்ள டுண்டிகலில் அமைந்துள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற 217-வது பாடநெறி பட்டமளிப்பு அணிவகுப்பில் இந்திய விமானப்படையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த நிகழ்வை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
அதேபோல், மூன்று பெண் அதிகாரிகள், கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடைபெற்ற வசந்தகால 2026 நிறைவு அணிவகுப்பின் போது இந்திய கடற்படையில் இணைந்தனர். அந்த நிகழ்வை தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா ஆய்வு செய்தார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
“இந்த நியமனம் இந்திய பாதுகாப்புப் படைகளின் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கியமான அத்தியாயமாகும். சம வாய்ப்பு, திறமை மற்றும் சிறப்பை மதிக்கும் நாட்டின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது,” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “இந்த சாதனை பெண்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சிக்கான சான்றாகும். இது எதிர்கால தலைமுறைகளின் இளம் பெண்களை ராணுவ சேவையில் ஈடுபட ஊக்குவிப்பதோடு, தேசக் கட்டுமானத்தில் பங்கெடுக்கத் தூண்டும்,” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
