ICC சர்வதேச கிரிக்கெட் ரெஃப்ரி குழுவில் இடம்பெற்ற முதல் பெண் ஜிஎஸ் லக்ஷ்மி!
கிரிக்கெட் என்றாலே அது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டாகவே இருக்கிறது. பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் போட்டிகள் இருந்தாலும் கூட ஆண்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பெண்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் இந்த நிலை தற்போது மாறிக்கொண்டு வருகிறது; அதை உறுதி செய்யும் விதமாக இதுவரை ஆண்கள் மட்டுமே இருந்த ஐசிசி சர்வதேச கிரிக்கெட் ரெஃப்ரி குழுவில் முதல் முறையாக முன்னாள் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை இணைக்கப்பட்டுள்ளார்.
51 வயதாகிய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜிஎஸ் லக்ஷ்மி, ஐசிசி-யின் முதல் பெண் போட்டி நடுவராக (Match Referee) பணியாற்ற இருக்கிறார். உடனடியாக நடக்கவிருக்கும் ஐசிசி-யின் ஆண்கள் போட்டிகளுக்கும் லக்ஷ்மி ஆட்ட நடுவராக பங்கேற்கலாம். வருகிற 27-ம்தேதி ஓமன்-நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைப்பெறுகிறது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதன் மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.
1986 இல் இருந்து 2004 வரை தெற்கு-மத்திய ரயில்வே, ஆந்திரா, பீகார், கிழக்கு மண்டலம் மற்றும் தென் மண்டலம் ஆகிய பல அணிகளுக்கு பங்கேற்று விளையாடியுள்ளார் லஷ்மி. இவர் வலது கை மட்டையாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர். அதன் பின் 2008-09 இல் உள்நாட்டு பெண்கள் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு ஆட்ட நடுவராகப் பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து 3 சர்வதேச பெண்கள் ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளுக்கு ரெஃப்ரியாக இருந்துள்ளார். இப்பொழுது ஆடவர் பிரிவிலும் தனது அனுபவத்தை காட்டத் தயாராகவுள்ளார்.
இது குறித்து இஎஸ்பிஎன் க்கு அளித்தப் பேட்டியில்,
“ஐசிசி-யின் சர்வதேச குழுவில் அங்கமாக இருப்பது எனக்கு பெருமையே, இந்தப் பொறுப்பு எனக்கு பல புது வாய்ப்புகளை ஏற்ப்படுத்திக் கொடுக்கும்,” என்றார்.
கடந்த வாரத்தில் முதல் முறையாக Claire Polosak ஆடவர் கிரிக்கெட் போட்டித்தொடரில் அம்பயராக செயல்பட்டுள்ளார், இருப்பினும் லஷ்மியை ஆட்ட நடுவர்கள் குழுவில் அதிகாரப்பூர்வமாக ஐசிசி இணைத்துள்ளது. மேலும் பேசிய அவர்,
“கிரிக்கெட் வீராங்கனையாகவும், போட்டி நடுவராகவும் எனக்கு நிறைய அனுபவம் உள்ளது. சர்வதேச தளத்தில் எனது அனுபவங்களை சிறந்த முறையில் தருவதற்கு தயாராகவுள்ளேன், வாய்ப்பு கொடுத்த ICC, BCCI மற்றும் என் கிரிக்கெட் முன்னோர்கள் மற்றும் குடும்பதிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
இது குறித்து பேசிய ஐசிசி மூத்த மேலாளர், எங்களது அலுவலர்களிடையே ஆண் - பெண் பேதம் பார்ப்பதில்லை, இருப்பினும் அனைத்து நியமனங்களும் தகுதியின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
“சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களைக் கண்டறிந்து வாய்ப்பு வழங்குவோம். இன்னும் சிறந்த செயல்திறன்கள் கொண்ட வீராங்கனைகளை குழுவில் இணைத்துக்கொள்வோம்,” என்றார்
இந்தியப்பெண் ஐசிசி குழுவில் இணைக்கப்பட்டது நமக்கு பெருமையே!
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்