சென்னை Pando.ai-ஐ கையகப்படுத்தியது இந்தியாவின் முன்னணி ஏஐ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் Fleetx.ai
இந்தக் கையகப்படுத்தலின் மூலம், வாகனங்களைக் கண்காணிப்பது முதல் சரக்கு போக்குவரத்தை செயல்படுத்துவது வரையிலான அனைத்து பணிகளையும் ஒரே செயற்கை நுண்ணறிவு தளத்தின் மூலம் மேற்கொள்ளும் வசதி உருவாகியுள்ளது
இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வாகனப் படை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான ஃப்ளீட்எக்ஸ்.ஏஐ (Fleetx.ai), சென்னையைச் சேர்ந்த முன்னணி போக்குவரத்து மேலாண்மைத் தொழில்நுட்ப நிறுவனமான ’பாண்டோ.ஏஐ’ (Pando.ai) நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. கையகப்படுத்தல் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தக் கையகப்படுத்தலின் மூலம், வாகனங்களைக் கண்காணிப்பது முதல் சரக்கு போக்குவரத்தை செயல்படுத்துவது வரையிலான அனைத்து பணிகளையும் ஒரே செயற்கை நுண்ணறிவு தளத்தின் மூலம் மேற்கொள்ளும் வசதி உருவாகியுள்ளது. இதன் மூலம், இதுவரை தனித்தனி மென்பொருள் மற்றும் அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு முகவர்கள் (AI Agents) தானாகவே செயல்படுத்தும் வகையில் புதிய தளத்தை ஃப்ளீட்எக்ஸ்.ஏஐ உருவாக்குகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு போக்குவரத்து மேலாண்மைத் தீர்வுகளை வழங்கி வரும் பாண்டோ.ஏஐ, இந்திய TMS சந்தையில் முக்கிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. சன் பார்மா, ஹோண்டா, காஸ்ட்ரோல், கோத்ரெஜ், பெர்னாட் ரிகார்ட், பெர்ஜர் பெயின்ட்ஸ், பெர்ஃபெட்டி வான் மெலே, ஓரியன்ட் எலக்ட்ரிக் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பாண்டோ.ஏஐ-யின் வாடிக்கையாளர்களாக உள்ளன.
கையகப்படுத்தப்பட்ட பிறகும் பாண்டோ.ஏஐ தனி நிறுவனப் பெயர் மற்றும் தயாரிப்பு அடையாளத்துடன் தொடர்ந்து செயல்படும். அதன் தயாரிப்புகளில் ஃப்ளீட்எக்ஸ்.ஏஐயின் செயற்கை நுண்ணறிவு திறன்களை இணைத்து, மேலும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் Fleetx.ai, வாகனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நிறுவனமாகத் தொடங்கி, லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், எரிசக்தி, சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகளை செயற்கை நுண்ணறிவு மூலம் தானியக்கமாக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அல்ட்ராடெக், அதானி, ஏ.எம்/என்.எஸ் இந்தியா, எம்.பி. பிர்லா குழுமம், மார்ஸ்க், யூனிலீவர், மொண்டலீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.
இந்த கையகப்படுத்தல் குறித்து ஃப்ளீட்எக்ஸ்.ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வினீத் சர்மா கூறுகையில்,
“பாண்டோ.ஏஐ இணைவதன் மூலம் வாகனப் படை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைக்கான முழுமையான ஒருங்கிணைந்த தளம் உருவாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு முகவர்கள் மூலம் செயல்படும் இந்தத் தளம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் வலுவான சேவையை வழங்கும். அதன் தலைமைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பத்ரிநாத் செட்லூர் கூறுகையில்,
“எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் விநியோகச் சங்கிலி தொடர்ந்து இயங்குவதற்காக எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை இந்தக் கையகப்படுத்தலால் மாறாது. மாறாக, அது மேலும் வலுப்படும். செயற்கை நுண்ணறிவு திறன்களில் வேகமாக முதலீடு செய்ய இந்தக் கூட்டணி உதவும். எங்கள் குழுவும் தயாரிப்புகளும் தொடர்ந்து அதே வகையில் செயல்படும்,” என்றார்.
பாண்டோ.ஏஐ-யின் முழு தலைமைக் குழுவும் ஃப்ளீட்எக்ஸ்.ஏஐ நிறுவனத்தில் இணைந்துள்ளது. தொடர்ந்து பாண்டோ.ஏஐயின் செயல்பாடுகளை அந்தக் குழுவே வழிநடத்தும். மேலும், பாண்டோ.ஏஐயின் தயாரிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்களை மேம்படுத்த ஃப்ளீட்எக்ஸ்.ஏஐ கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த இணைப்புக்குப் பிறகு அடுத்த 18 முதல் 24 மாதங்களில் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகளை தொடங்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. எதிர்காலத்தில் ஐ.பி.ஓ. வெளியிடும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நேரத்தில் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை ஒருங்கிணைந்த வருவாயை ஈட்டுவதுடன் லாபகரமான நிறுவனமாகவும் மாற இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் இ-காமர்ஸ் மற்றும் தொழில்துறை வளர்ச்சியால் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், GPS அடிப்படையிலான வாகனக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும் வேகமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லாஜிஸ்டிக்ஸ் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அடுத்த கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாமதமான சரக்குப் போக்குவரத்தை கண்டறிதல், ஓட்டுநரின் வழித்தடத்தை மாற்றுதல், சரக்கு ஒதுக்கீட்டை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மனிதர்களின் நேரடி தலையீடு இல்லாமல் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் மேற்கொள்ளும் வகையில் ஃப்ளீட்எக்ஸ்.ஏஐ தனது தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

