2bhk டு ரூ.100 கோடி ஆண்டு வருவாய் - மூன்று நண்பர்கள் தொடங்கிய ‘RegisterKaro’ -வின் அசாத்திய வளர்ச்சிக் கதை!
2021-ல் கோரமங்களா குடியிருப்பில் 3 ஆடிட்டர்கள் தொடங்கிய ரெஜிஸ்டர்கரோ, 2026-ல் 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் தளமாக உயர்ந்து, இந்தியாவின் பரந்த ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கால் முடங்கியிருந்தபோது, மூன்று சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்டுகள் தங்களது நாட்களின் பெரும் பகுதியை வாட்ஸ்அப் மற்றும் கூகுள் மீட் கால்களிலேயே கழித்துக் கொண்டிருந்தனர். அந்த அழைப்புகள் சில நேரங்களில் 16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தன.
ஜோயல் லெஸ்டர் டி’சோசா, ஸ்ரீஹரி ஆர் தொண்டலே மற்றும் சித்தார்த் ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஒரே மாதிரியான சிக்கல்கள்தான் வாடிக்கையாளர்களிடமிருந்து மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தன. அவை,
சிறு தொழில் அதிபர்கள் வணிக இணக்க காலக்கெடுவைச் சமாளிக்க முடியாமல் திணறுவது, படிவங்களைத் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம், அவசர நேரங்களில் கணக்காளர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை மற்றும் நள்ளிரவு போன்ற விசித்திரமான நேரங்களில் அபராத அறிவிப்புகள் வந்து சேருவது ஆகியவைதான் அவை.
அதே நேரத்தில், முதன்முறையாகத் தொழில் தொடங்கும் நிறுவனர்களுக்கு தாங்கள் முதலில் எதைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற தெளிவே இல்லாமல் இருந்தது.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஏதோ ஒரு தற்காலிக சிக்கல் போல தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் ஏதோ ஒரு ஆழமான கட்டமைப்புச் சிக்கல் இருப்பது அந்த மூவருக்கும் புரிந்தது.
இந்தியாவின் சிக்கலான வணிக இணக்க அமைப்பிற்குள் பல ஆண்டுகளைச் செலவிட்டதால், அங்கு நீண்ட காலமாக உருவாகி வந்த ஒரு கட்டமைப்பு இடைவெளியை அவர்கள் தெளிவாகக் கவனித்தனர்.

மைல்கல் சாதனை
இந்தியா ஒரு புதிய வணிகங்களின் எழுச்சிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டிய அமைப்புகள் ஏற்கெனவே தங்களது திறனை இழந்து திணறி வருவதாக அவர்கள் நம்பினர்.
எனவே, அவர்கள் ஒரு புதிய தளத்தை உருவாக்கத் தீர்மானித்தனர். ஆனால், அது எதிர்காலத்தில் என்னவாக மாறப்போகிறது என்ற முழுமையான புரிதல் அப்போது அவர்கள் யாரிடமும் இல்லை.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று ‘ரெஜிஸ்டர்கரோ’ (RegisterKaro) நிறுவனம் 50,000-க்கும் அதிகமான நிறுவனங்களைப் பதிவு செய்து கொடுத்துள்ளது, ஆண்டு தொடர் வருவாயில் 100 கோடி ரூபாய் என்ற மாபெரும் மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது, மேலும் ஒவ்வொரு மாதமும் 2,500-க்கும் மேற்பட்ட புதிய வணிகங்களைத் தொடங்கி வைக்கத் தற்போதும் உதவி வருகிறது.
2021-ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக மாறுவதை நோக்கி அசுர வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஒரு நிறுவனத்தை உண்மையில் தொடங்குவதற்கான நடைமுறைகள் இன்னும் சிதறிய அமைப்புகளையே நம்பியிருந்தன. வாட்ஸ்அப் செய்திகள், கூரியர் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடனான முடிவில்லாத தொடர் பின்தொடர்தல்கள், என பல சிக்கல்கள் நீடித்தன.
அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்த நிறுவனர்கள் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஒரு இரண்டு படுக்கையறை குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, அதனைத் தங்களது முதலாவது அலுவலகமாக மாற்றினர். முதல் நாளிலிருந்தே ஒரு முழுமையான தளத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் ஒரே ஒரு குறிப்பிட்ட வலிக்கான புள்ளியில் மட்டுமே கவனம் செலுத்தினர்: அதுதான் நிறுவனப் பதிவு.
பிரைவேட் லிமிடெட் நிறுவனப் பதிவு, எல்எல்பி, ஒபிசி என கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்துடனான ஒவ்வொரு படிவம், ஆவணங்கள் மற்றும் தொடர்புகளும் இவர்களின் தொடக்கப் புள்ளியாக மாறின. ஆனால், இவர்களின் ஆரம்பக்கால மாதங்கள் சற்றும் சுமுகமாக இருக்கவில்லை.
2021-ஆம் ஆண்டின் இறுதிக்குள், இவர்களது குழு 20 பேராக வளர்ந்தது, அப்போதும் வாடிக்கையாளர்களின் பெரும்பாலான உரையாடல்களை நிறுவனர்களே நேரடியாகக் கையாண்டு வந்தனர்.
அக்டோபர் 2022-ல், ரெஜிஸ்டர்கரோ இந்திராநகரில் உள்ள தங்களது முதல் அலுவலகத்திற்கு மாறியது. இந்த மைல்கல்லைத்தான் அது ஒரு பக்கவாட்டுத் திட்டம் என்ற நிலையிலிருந்து மாறி, 20 லட்ச ரூபாய் வருவாயை ஈட்டும் ஒரு உண்மையான நிறுவனமாக மாறிய தருணம் என்று நிறுவனர்கள் விவரிக்கிறார்கள்.
“நாங்கள் முதல் ஒரு வருடத்திற்கு ஒரு விற்பனைப் பிரதிநிதி கூட இல்லாமல் நிறுவனத்தை நடத்திய மூன்று சிஏ-க்கள். இது ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை வேலை செய்யும். ஆனால் அதற்குப் பிறகு சரிவராது,” என்கிறார் இணை நிறுவனர் ஸ்ரீஹரி ஆர் தொண்டலே.

வேகமான ஓட்டம்...
2023 ஏப்ரல் மாதத்தில், ரெஜிஸ்டர்கரோ பெங்களூரிலிருந்து குருகிராமிற்கு இடமாற்றத்தை மேற்கொண்டது. இந்த முடிவு முழுக்க முழுக்க நுகர்வோர் விநியோகத்தை நோக்கியே எடுக்கப்பட்டது. டெல்லி - என்சிஆர் பகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் அடர்த்தி மிக அதிகமாக இருந்ததுடன், புதிய நிறுவனப் பதிவுகளின் ஓட்டமும் அங்கு மிக வேகமாக இருந்தது. பெங்களூரு என்பது நிறுவனர்கள் தங்கியிருந்த இடம். ஆனால் குருகிராம் என்பது அவர்களின் வாடிக்கையாளர்கள் வாழும் இடமாக இருந்தது.
“நாங்கள் எந்தவொரு பகட்டான விஷயத்தையும் மாற்றி அமைக்க முயற்சிக்கவில்லை. முதன்முறையாகத் தொழில் தொடங்கும் நிறுவனர்கள் தங்களுக்கு அப்படியொரு விதிமுறை இருப்பதே தெரியாமல் பல விஷயங்களுக்கு அபராதம் செலுத்துவதை நாங்கள் தொடர்ந்து பார்த்தோம். இந்தியாவில் வியாபார இணக்கம் என்பது ஒரு சுமை அல்ல. அது ஒரு கல்வி அறிவு சார்ந்த குறைபாடு,” என்கிறார் இணை நிறுவனரும் சிஇஓ-வுமான ஜோயல் டி’சோசா.
இந்த இடமாற்றம் இவர்களின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. இவர்களது குழு 100 ஊழியர்களைக் கடந்ததுடன், நிறுவனப் பதிவைத் தாண்டி தங்களது சேவைகளையும் விரிவுபடுத்தியது. மெய்நிகர் அலுவலகம், ஜிஎஸ்டி பதிவு, உத்யம், வர்த்தக முத்திரைகள், பதிப்புரிமைகள் மற்றும் காப்புரிமைகள், ஐடிஆர் தாக்கல்கள் மற்றும் கணக்கு புத்தகப் பராமரிப்பு போன்ற பல சேவைகளை அவர்கள் இதனுடன் இணைத்தனர்.
2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள், ரெஜிஸ்டர்கரோ 50,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கியிருந்தது, மாதத்திற்கு 2,500-க்கும் மேற்பட்ட வணிகங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தது, மேலும் 8,000-க்கும் அதிகமான கூகுள் விமர்சனங்களில் 4.6 ஸ்டார் மதிப்பீட்டையும் தக்க வைத்துக் கொண்டது.
2024 மே மாதத்தில், இந்நிறுவனம் துபாயில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறந்து சர்வதேச அளவில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்தியது. இந்தத் தேடல் இரண்டு விஷயங்களை நோக்கமாகக் கொண்டிருந்தது.
வெளிநாடுகளில் தங்களது வணிகத்தை விரிவுபடுத்த விரும்பும் இந்திய நிறுவனர்கள் மற்றும் இந்தியாவில் வணிகங்களைத் தொடங்க விரும்பும் என்ஆர்ஐ-க்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனர்கள் ஆகியோர்தான் அவர்கள். இந்த வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, நிறுவனம் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முதலீடு செய்தது.
வாடிக்கையாளர்கள் தங்களது பணிகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வசதி, என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஆவண சேமிப்பு மற்றும் தங்களுக்கு, என ஒதுக்கப்பட்ட சிஏ-க்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் நேரடியாகச் செய்தி அனுப்பும் வசதி கொண்ட ஒரு பிரத்யேக வாடிக்கையாளர் போர்ட்டலை அது அறிமுகப்படுத்தியது.
2025-ஆம் ஆண்டில், வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக ஒரு ஏஐ குரல் முகவர், அத்துடன் தானியங்கி வாடிக்கையாளர் சேர்க்கை மற்றும் ஏஐ அடிப்படையிலான ஆவண சரிபார்ப்பு அமைப்புகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்தத் தயாரிப்பு மேம்பாடுகள் வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் திறனை கணிசமாக மேம்படுத்தியதுடன், தளத்தில் இணையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தவும் உதவியது. இதன் தொடர்ச்சியாக, இந்நிறுவனம் 2026-ல் ஆண்டு தொடர் வருவாயில் 100 கோடி ரூபாய் என்ற பிரம்மாண்ட மைல்கல்லையும் கடந்து சாதனை படைத்துள்ளது.

50,000 வாடிக்கையாளர்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள்
தங்களது கடந்த காலப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நிறுவனர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட சில முக்கியப் பாடங்களைச் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
முதலாவது பாடம்:
ஒரு தனிநபரின் ஆளுமையை விட அதன் செயல்பாட்டு நடைமுறைதான் மிகவும் முக்கியமானது. ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் துடிப்பான ஆற்றல் உங்களுக்கு வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு அப்பால் நீங்கள் வணிகத்தை வளர்க்க வேண்டுமா என்பதை இத்தகைய முறையான அமைப்புகள்தான் தீர்மானிக்கின்றன.
இரண்டாவது பாடம்:
நம்பிக்கைதான் உண்மையான மூலதனம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எப்போதும் ஒரே மாதிரியான கேள்விகளைத்தான் வெவ்வேறு வடிவங்களில் கேட்கிறார்கள். தங்களது படிவங்கள் சரியாக மற்றும் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்படுமா என்பது மட்டும்தான் அது.
மூன்றாவது பாடம்:
இந்தியாவின் அடுத்த தலைமுறை நிறுவனர்கள் பெருகிய முறையில் இரண்டாம் கட்ட நகரங்களிலிருந்தே வருகிறார்கள். இந்தூர், ஜெய்ப்பூர், கோயம்புத்தூர் மற்றும் புவனேஷ்வர் போன்ற நகரங்கள் இன்று இவர்களின் மீண்டும் மீண்டும் வரும் வணிகத்தில் ஒரு பெரிய பங்கை உந்தித் தள்ளுகின்றன.
நான்காவது பாடம்:
கல்வியும் இந்தத் தயாரிப்பின் ஒரு பகுதிதான். பணம் செலுத்தாத சாதாரண பயனர்களுக்கும் வணிக இணக்க அறிவை எளிதாகக் கிடைக்கச் செய்வது என்பது, இந்தத் துறையின் மீதான நீண்ட கால நம்பிக்கையை உருவாக்குவதற்கான ஒரு முதலீடாகும்.

இந்தியா தற்போது ஒவ்வொரு மாதமும் 20,000-க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களைத் தன் வசம் இணைத்து வருகிறது. டிபிஐஐடி அங்கீகாரம் பெற்ற ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2026 நிதியாண்டில் 55,000-ஐ கடந்துள்ளது, இது வரலாற்றிலேயே பதிவான மிக அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
அதே நேரத்தில், வணிக இணக்க அமைப்புகளின் டிஜிட்டல் மயமாக்கல், விதிகளைப் பின்பற்றாத தவறுகளை மிக வேகமாகத் துல்லியமாகக் கண்டறிவதை எளிதாக்கியுள்ளது.இதனால் இனி இத்தகைய விதிகளிலிருந்து யாரும் தப்பிப்பது கடினம்.
“எங்களது இலக்கு எப்போதுமே வெறும் சேவைகளை வழங்குவது மட்டுமே அல்ல. முதன்முறையாகத் தொழில் தொடங்கும் பெரும்பாலான நிறுவனர்களை அச்சுறுத்தும் ஒரு நடைமுறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான் எங்களது நோக்கம்.”
இந்தியாவில் ஒரு பிசினஸைத் தொடங்குவது என்பது ஒருவருக்கு அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீண்ட காலமாக அது பலரையும் திணறடிக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது, என்கிறார் இணை நிறுவனர் சித்தார்த் ரவிச்சந்திரன்.
2021-ல் கோரமங்களா குடியிருப்பில் தொடங்கி, 2026-ல் 100 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் தளமாக உயர்ந்தது வரை, ரெஜிஸ்டர்கரோவின் இந்த அசாத்திய பயணம் இந்தியாவின் பரந்த ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
ஒரு காலத்தில் வணிகத்தில் கடைசியாக யோசிக்கப்பட்ட இணக்க நடைமுறைகள், இன்று அதன் மிக முக்கிய ஒருங்கிணைந்த அங்கமாக மாறி வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான புதிய வணிகங்கள் உருவாகி வரும் இந்த மாபெரும் சந்தையில், இவர்களின் இந்த நம்பிக்கை பந்தயம் நாளுக்கு நாள் மேலும் பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டேதான் போகிறது.
Edited by Induja Raghunathan

