இன்ஸ்டாகிராம் விளம்பரங்களில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் - Meta-வுக்கு அரசு நோட்டீஸ்!
இந்த நோட்டீஸில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் அல்லது அவற்றை அணுக உதவும் அனைத்து விளம்பரங்களையும் மற்றும் பதிவுகளையும் உடனடியாக முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் (CSEAM) கொண்ட கட்டண விளம்பரங்கள் வெளியாகியதாகக் கூறப்படும் விவகாரத்தில், மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு கடும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை மாலை அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இந்த நோட்டீஸில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் அல்லது அவற்றை அணுக உதவும் அனைத்து விளம்பரங்களையும் மற்றும் பதிவுகளையும் உடனடியாக முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
“MeitY, CSEAM-ஐ ஊக்குவிக்கும் மற்றும் அதனை அணுக வழிவகுக்கும் அனைத்து விளம்பரங்களையும் மற்றும் உள்ளடக்கங்களையும் இன்ஸ்டாகிராம் உடனடியாக முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது,” என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு ஒரு நாள் முன்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்தை நேரில் ஆஜராகுமாறு மெய்ட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கவும், குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான தகவல்களை சமர்ப்பிக்கவும் அமைச்சகம் மெட்டாவிடம் கேட்டுள்ளது. மேலும், ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்க அறிக்கையை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மென்லோ பார்க் நகரை தலைமையிடமாகக் கொண்ட மெட்டா நிறுவனம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை நடத்தி வருகிறது.
இந்த நடவடிக்கை, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் அடங்கிய வீடியோக்களை மெட்டாவின் பரிந்துரை அல்காரிதம் பயனர்களுக்கு முன்னிறுத்தியதாகவும், பாதுகாப்பு அமைப்புகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும் கூறிய பிபிசி விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து வந்துள்ளது.
பிபிசி விசாரணையின்படி, இத்தகைய உள்ளடக்கங்களைக் கொண்ட விளம்பரங்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மெட்டாவின் விளம்பரக் கொள்கைகள் நிர்வாணம் மற்றும் பாலியல் வெளிப்படையான உள்ளடக்கங்களைத் தடைசெய்திருந்தாலும், அவை தளங்களில் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இன்ஸ்டாகிராமில் “rape video”, “child video” போன்ற சொற்களுடன் கட்டண விளம்பரங்கள் காட்டப்பட்டதாகவும், அவை பயனர்களை டெலிகிராம் சேனல்களுக்கு வழிநடத்தியதாகவும், அங்கு இத்தகைய சட்டவிரோத உள்ளடக்கங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த ஒருவர் கூறுகையில்,
இத்தகைய விளம்பரங்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டன, குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகு மெட்டா என்ன நடவடிக்கைகள் எடுத்தது, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பதற்கான விளக்கங்களை அரசு கேட்கும், என தெரிவித்தார்.
“மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்” (third party content) என்ற காரணத்தைக் காட்டி மெட்டா பொறுப்பிலிருந்து தப்ப முடியாது என்றும், குறிப்பாக குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் கட்டண விளம்பரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
“குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அந்த விளம்பரங்களுக்கு மெட்டா பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில், அவற்றின் மூலம் வருவாய் ஈட்டப்படுகின்றது,” என்று ஒரு அதிகாரப்பூர்வ வட்டாரம் கூறியது.
இந்த விவகாரத்தின் தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை அம்சங்களை MeitY ஆய்வு செய்யும் நிலையில், சட்ட மீறல்கள் நடந்துள்ளதாக யாரேனும் நம்பினால், விளம்பரதாரர் அல்லது தளத்திற்கு எதிராக சம்பந்தப்பட்ட அமைப்புகள், அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் தொடர்பாக இந்திய அரசு சலுகை காட்டாது என்னும் கொள்கையை பின்பற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் தளங்கள் இத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக கண்டறிந்து அகற்றவும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும், குழந்தைகளை பாதுகாக்கும் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல் வழங்கும் பட்டியல்களின் அடிப்படையில், இந்தியாவின் தேசிய இணைப்பு அமைப்பாக செயல்படும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து, குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் கொண்ட பல இணையதளங்களை அரசு ஏற்கனவே தடை செய்துள்ளது.
குழந்தைகள் தொடர்பான சட்டவிரோத உள்ளடக்கங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பதிவுகளை கட்டுப்படுத்தத் தவறினால், தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது சட்ட மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பலமுறை எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த வாரத்தில் மெட்டா மீது அரசின் கண்காணிப்பு அதிகரித்துள்ள இரண்டாவது சம்பவமாக இது அமைந்துள்ளது.
முன்னதாக, வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்ட “பயனர்பெயர்” (Username) அம்சம் குறித்து மத்திய அரசு மெட்டாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த அம்சம் ஆன்லைன் மோசடி, பிஷிங் தாக்குதல், டிஜிட்டல் கைது மோசடி மற்றும் அடையாள திருட்டு போன்ற குற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்ற கவலை அரசுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
“அரசின் முழு திருப்தி கிடைக்கும் வரை” இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வாட்ஸ்அப்பின் பயனர்பெயர் அம்ச அறிமுகத்தை மெட்டா தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவன பிரதிநிதிகள் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மூன்று நாட்களுக்குள் விளக்க அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி மெட்டா தனது இறுதி பதிலை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய அம்சம் இணைய குற்றங்களை அதிகரிக்கக்கூடும் என்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதையும் விளக்குமாறு மத்திய அரசு மெட்டாவிடம் கேட்டுள்ளது.
மேலும், முக்கிய சமூக ஊடக இடைத்தரகர் (Significant Social Media Intermediary) என்ற வகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ‘உரிய கவன ஆய்வு’- “due diligence” - பொறுப்புகளை வாட்ஸ்அப் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அரசு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

